ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

மருத்துவமனைகளுக்கு தரம் காப்பீட்டு வசதிக்காக ஏற்பாடு

சென்னை : அரசு காப்பீட்டுத் திட்டத்தில், மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, மருத்துவமனைகள் சேர்க்கப்படுகின்றன என, அமைச்சர் விஜய் கூறினார். சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, "புதிய காப்பீட்டுத் திட்டத்தில், எந்த அடிப்படையில் மருத்துவமனைகள் சேர்க்கப்படுகின்றன,' என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கேள்வி எழுப்பினார்.

தரம் பிரிப்பு எப்படி? : அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கூறியதாவது: புதிய காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனைகளைச் சேர்க்க, சில நிபந்தனைகளை அரசு நிர்ணயித்து உள்ளது. மருத்துவமனைகளின் தரத்திற்கு ஏற்ப, மதிப்பெண்கள் வழங்கப்படும். முப்பது படுக்கைகள், ஐந்து தீவிர சிகிச்சைப் பிரிவு இருந்தால், அவற்றிற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். "சிடி' மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இருந்தால், அதற்கு தனி மதிப்பெண் வழங்கப்படும். தரத்திற்கு ஏற்ப அதிகபட்சம், 51 மதிப்பெண்கள் வரை வழங்கப்படுகிறது.மொத்தம், 41 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால், "ஏ1' என, மருத்துவமனை தரம் பிரிக்கப்படுகிறது. மதிப்பெண்களை குறைய குறைய, அதற்கேற்ப, தரம் குறையும் .குறைந்த பட்சம் 10 மதிப்பெண்கள் வரை இப்பட்டியலில் இடம் பெறும் மருத்துவமனைகள், "ஏ1" முதல் "ஏ6' வரை தரம் பிரிக்கப் படுகின்றன.

ஏமாற்ற முடியாது : இதன் அடிப்படையில், அதற்கென உள்ள கமிட்டியில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருந்து முடிவு செய்வர். அதன்படியே, காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனைகள் சேர்க்கப் படுகின்றன. எனவே, தரமற்ற மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை: அமைச்சர்

சென்னை: ""பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை,'' என்று, அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

சட்டசபையில் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், பாரதியார் பல்கலைக்கழகத்தில், 35 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க, 20 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்குப் பின் ஏற்படக் கூடிய செலவை, மாநில அரசே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, "தினமலர்' நாளிதழில் கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்களின் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். பின், 24 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். இந்த நியமனங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. "பாரதியார் பல்கலைக் கழகம், நியமனத்தின் போது விதிகளை முழுமையாகக் கடைபிடித்துள்ளது. முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை' என்று கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, ஆசிரியர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணியில் சேரவில்லை. மீதமுள்ள 23 பேரும், கடந்த 1ம் தேதி முதல் பணியில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.