ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

டாக்டர்.கிருஷ்ணசாமி











புதிய தமிழகம் கண்ணீர் அஞ்சலி




சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக 20/02/11 - மாலை மணியளவில்  மாவீரன் பிரபாகரனின் தாயார் வே. பார்வதியம்மாள் அவர்களின் மறைவிற்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நிறுவனர் - தலைவர் டாக்டர். க. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் பெரும்திரளாகக் கலந்துகொண்டுமெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

டாக்டர். க. கிருஷ்ணசாமி அவர்கள் ஆற்றிய புகழுரையில் கூறியதாவது:

மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மறைவு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நெஞ்சங்களிலில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் நோய்வாய்ப்பட்டு கடந்த ஆண்டு சிகிச்சைக்காக சென்னை வந்தபோது மனிதநேயமற்ற முறையில் மத்தியமாநில அரசுகள் விமானநிலையத்திலேயே அவரை திருப்பி அனுப்பின. சர்வதேச தமிழ் மக்களுக்கு முகவரி ஏற்படுத்திக் கொடுத்தவரும்ஈழத்தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாளையே முழுமையாக அர்ப்பணித்தக் கொண்ட மாவீரன் பிரபாகரனின் தாயார் முறையான சிகிச்சை பெற முடியாமலேயே காலமானார் என்பது கொடுமையிலும் கொடுமை. உலகத்தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் அவர் நீஙகா இடம் பிடித்தவிட்டார். அவரது நினைவும்புகழும் தமிழர்கள் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்கும்.இவ்வாறு அவர் உரையாற்றினார்

வட மாவட்டங்களிலும் வலுப் பெறுகிறது புதிய தமிழகம்





புதிய தமிழகம் கட்சி 1997ம் ஆண்டு துவக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை, மிக மிக பின் தங்கிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு பெற்ற கட்சியாகும் குறிப்பாக தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற கட்சி புதிய தமிழகம் கட்சி.
 அண்மைகாலமாக வடக்கு மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சாரை, சாரையாக புதிய தமிழகம் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
சென்னையில் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள்,திமுக,காங்கிரஸ் போன்ற இயக்கங்களில் இருந்து விலகிய எண்ணற்றோர் புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் பலர் இணைந்தனர். இதன் தொடர்ச்சியாக 12.02.2011ம் தேதியில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி திரு.தலித் முருகன் 500க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தொண்டர்களுடன் புதிய தமிழகம் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
      இந்த விழா சென்னை ஹேமாமாலினி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொது வாழ்வில் 30 ஆண்டுகள் இருக்கும் திரு.தலித் முருகன் 15 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியில் பணியாற்றியவர்.
       சென்னை உட்பட வடக்கு மாவட்டங்கள் பட்டியலின மக்கள் ஒன்று சேர்வது புதிய தமிழகம் கட்சிக்கு வலு சேர்ப்பதோடு வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கும் மிகப் பெரிய பலமாக அமையும். எண்ணற்றோர் தினமும் இதே போன்று புதிய தமிழகம் கடசியில் இணைந்து ருகிறார்கள். இதனால் புதியதமிழகம் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் – சென்னை கருத்தரங்கில் டாக்டர்



ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் – சென்னை கருத்தரங்கில் டாக்டர் கிருஷ்ணசாமி சூளுரை



சென்னை அவ்வை சண்முகம் சாலையில் ஹேமா மலினி திருமண மண்டபத்தில் பிப்ரவரி 12ம் தேதியன்று பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு மீட்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றார்
தமிழக மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இந்த கரித்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசு ஓழியகளும் ஆசிரியர்களும் திரளாக வந்திருந்தனர்
கல்வி – வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட- பழங்குடி பட்டியலினத்தவர்களுக்கு 19சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசியல் சாசன விதி,ஆனால் தமிழ் நாட்டில் முறையாக அமல் செய்யப்படாத்தால் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் நிரப்ப்ப்படவில்லை இதனை வலியுறுத்தி பட்டியலின மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.புதிய தமிழகம் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஏற்கனவே இடஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் பிரச்சினை எழுப்பி “வெள்ளை அறிக்கைகேட்டிருந்தார் முழுமையாக இடஒதுக்கீடு நிரப்பப்படவில்லை.இந்த நிலையில் தமிழக அரசு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் தனி உள் இடஒதுக்கீடு ஒன்றை அறிவித்தது. இந்த உள் இடஒதுக்கீடு காரணமாக தமிழ் நாட்டில் பல்கழைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகளும்,அரசு துறையில் பல உயர் பொறுப்புகளும் ஒட்டு மொத்தமாக தாழ்த்தப்ப்பட்டோருக்கான 3சதவிகித பணிகளும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே ஒதுக்கும் ஒரு மோசமான நிலை உருவாகியுள்ளது, எனவே, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மூன்றரை லட்ச பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும்,உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் 3சதவீத இடங்களும் சமுதாயத்தின் ஒரே பிரிவினருக்கு மட்டுமே வழங்க கூடாது என்பதை வலியுறித்தியும் “இட ஒதுக்கீடு மீட்புக் கருத்தரங்கம்” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
      சென்னை ஹேம மாலினி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி “மூன்றரை லட்சம் பின்னடைவு இடங்களை உடனே நிரப்பவும், உள் இட ஓதுக்கீடு முறைக்கு முடிவு கட்டவும்தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை” என வலியுறித்தினார். மாற்றம் நிகழ கடுமையாக உழைக்குமாறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்த டாக்டர்.கிருஷ்ணசாமிஅவர்கள் தமிழகத்தில் நிச்சயம் அதிமுக ஆட்சி மலரும் என்று நம்பிக்கை தெரிவித்தார் 

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

ஜான் பாண்டியன்













தேவேந்திர மக்களின் 2 ஆம் இம்மானுவேல் என்றால் அது ஜான் பாண்டியனை மட்டுமே சாரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்த வீரன் அல்லவா

திங்கள், 14 பிப்ரவரி, 2011

1025 வது சதய விழா ராஜ ராஜ சோழதேவேந்திரர்

உலகின் 1000 ஆண்டு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டி பார்சிறக்க ஆட்சி செய்த நமது கொள்ளு பாட்டனார், இந்திரகுல வர்மன், தேவேந்திரகுல சக்கரவர்த்தி, குஞ்சரமல்லன் (என்கிற) மாமள்ளர் இராசராசசோழ தேவேந்திரரின் 1025 வது சதயவிழாவின் பேரணி 15.11.2010 திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் தஞ்சை இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாமள்ளர் இராசராசசோழ தேவேந்திரர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை சோழமண்டலம், தமிழ்நாடு தேவேந்திரர் பேரவை, மூவேந்தர் இலக்கிய மன்றம், மள்ளர் இலக்கிய கழகம், மள்ளர் மீட்பு களம், தேவேந்திரர் விழிப்புணர்வு இயக்கம், தேவேந்திரகுல வேளாளர் சங்கம், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு, மூவேந்தர் பேரவை மற்றும் பல தேவேந்திர சமூக அமைப்புகள் கலந்து கொண்டர்



தேவர் தேவேந்திரர் - அரசியல்



தேவர் தேவேந்திரர் இணைந்து அரசியல் செய்வது ஆ.தி.மு.க கூட்டணியில் நம் சமூக கட்சியை இணைப்பது இதனால் நெடும் பகையாய் பிரிந்து கிடக்கும் இரு சமூகத்திற்கும் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது போன்ற திட்டத்தை எம் இரு சமூகமும் இனைந்து செயல்பட தயாராகிகொண்டிருக்கும் இந்த தருணத்தில் நம் சமூகத்தின் அரசியல் எதிரியான தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் வாக்குறுதிகளை சற்று யோசிதொமானால் நம்மை நிரந்தர எதிரிகளாக்க அவர்களின் திட்டம் விளங்கிவிடும்.

மதுரை விமான நிலையத்திற்கு நம் சமூக மக்களின் நிலம் அபகரிக்கபட்டது மற்றும் அந்த விமான நிலையத்திற்கு தியாகி.இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்பது இந்த அரசிடம் எம் தேவேந்திர குல மக்களின் நீண்டநெடுநாள் ஆவா... என்பதை அனைவரும் அறிவர்.



இந்த தருணத்தில் அரசியல் ஆதாயம் கருதியும் புதியதமிழகம் ஆ.தி.மு.காவில் இணைந்ததனால் எங்கே இரு சமூகமும் இணைந்து தி.மு.காவின் தோல்வியை தென்னகத்தில் நிர்ணயித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மீண்டும் பிரிவினையை தூண்ட அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் தான் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம் தேவைப்பட்டால் மீண்டும் நினைவூட்டுவோம் என்ற பகட்டு பேச்செல்லாம்.



எந்த சமூகமும் தனித்து அரசியலில் வெல்வது என்பது இயலா காரியம் தான் அரசியல் பலமில்லாததால்தான் பசும்பொன் செல்லும் இந்த அரசியல் கோமாளிகள் எல்லாம் பக்கத்தில் நடந்த பரமக்குடி குருபூஜைக்கு வரவில்லை ஓட்டு சதவீதம் ஒன்றும் தேவருக்கும் தேவேந்திரற்கும் பெரிய வித்தியாசம் இல்லை அரசியல் அறிவு மட்டுமே இருவருக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம். இன்று ஆ.தி.மு.காவாக இருந்தாலும் சரி தி.மு.காவாக இருந்தாலும் சரி மாவட்டம் வட்டம் ஒன்றியம் என அனைத்திலும் தலைவர்களாய் அவர்கள் மட்டுமே ஏன் தேவேந்திரர்கள் மிகுதியான தொகுதிகளில் கூட மற்ற சமூகத்தவர்கள் தானே இன்றும் மாவட்ட செயலாளர்களாகவும் வட்ட செயலாலர்கள்ளவும் இருக்கிறார்கள் தேவேந்திரர்கள் இன்றும் அவர்கள் பின்னால் திரியும் சிப்பந்திகளாக தானே இருக்கிறார்கள் பிறகெப்படி அரசியல் பலம் பெறமுடியும்.



புதியதமிழகதினை போன்றே ஒரு அரசியல் கட்சி தான் டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்ற கழகமும் ஏன் ஒட்டு மொத்த முக்குலத்தொரும் அவரின் பின்னால் செல்லவில்லை. தி,மு.க பத்து சீட்டுகளை புதியதமிழகத்திற்கு வழங்கிய போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு மூன்று சீட்டுகள் வழங்கிய ஜெயலலிதாவை ஒரு தேவர் இனத்தவரும் கேள்வி எழுப்பவில்லையே விமர்சனம் செய்யவில்லையே ஏன்? அதுதான் அரசியல் சாணக்கிய தனம்.



ஆம் அன்றைய சட்டசபையில் ஆ.தி.மு.க அமைச்சரவையில் சரி பாதி தேவர் இனத்தவர் எங்கே சென்றது எம் தேவேந்திரகுலம் அவர்களுக்கு இணையான ஒட்டு வங்கி கொண்ட தேவேந்திர குல அமைச்சர்கள் அங்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன???



நம் இனம் நீங்கள் கூறும் ஒருகுடையின் (ஜாதி தலைவனின்) கீழ் அகப்பட்டதன் வெளிப்பாடு தான் இன்றைய அரசியல் தோல்விக்கான காரணம் அதுதான் நம்மை இன்று வரை மீளமுடியாமல் செய்துவிட்டது நாம் அரசியல் பலம் பெற நமக்கு தலைவன் தேவை இல்லை தலைமைத்துவமும் தேவை இல்லை நமது அத்தியாய தேவை மாநில மற்றும் தேசிய கட்சிகளில் உயரிய பொறுப்புகள் அது தான் உங்களுக்கு அரசியல் முகவரியை ஈட்ட்டிதருமே ஒழிய வேறொன்றும் இல்லை.



மீண்டும் தேவேந்திரகுல சமூகம் தலைமைத்துவத்தையும் தலைவனையும் தேடினால் அந்த தலைவனால் நம் சமூகம் மீண்டும் அரசியல் அடமானம் வைக்கப்படும் என்பது மறுப்பதற்கு இயலா உண்மை. ஒரு ஜாதி தலைவனை நம்பி நீ ஏன் இருக்க வேண்டும் உனக்கு திறமை இருந்தால் ஒரு மாநில தேசிய கட்சிகளில் பெரிய பொறுப்பிற்கு வா... பின் உனக்கு சமூக அக்கறை இருந்தால் உன் சமூகம் மாற்றப்பட வேண்டும் என்று நீ விரும்பினால் மறைமுகமாகவோ நேராகவோ (சானானை நாடார்களாக உயர்த்திக்காட்டிய காமராஜரை போல்) உன்னால் ஆனதை இந்த சமூகத்திற்கு செய்து இதன் இழிநிலையை மாற்ற முயற்சி செய் (பள்ள்னை தேவேந்திரனாக மாற்று) இது தான் அரசியல் சாணக்கியத்தனம்.



இதை விட்ட்டுவிட்டு தலைவர்களை இணைக்க நீ யார்? அவர்களால் நீயும் உன் சமூகமும் அடைந்த பயன் என்ன யோசித்து பார்?

இன்றைய தி.மு.க அமைச்சரவையில் ஒரு ஒரு பத்து பேர் முக்கிய அங்கத்தினர்களாக அமைச்சர்களாக இருந்திருந்தால் இன்று வரிஞ்சுகட்டிகொண்டு பசும்பொன் சென்ற அத்துணை அரசியல் கோமாளிகளும் பரம்பையை நோக்கி பயணிக்காமல் இருந்திருக்கமுடியுமா? எம் சொந்தங்களின் இடத்தில விமான நிலையம் அமைத்துவிட்டு அதற்கு தேவர் பெயர் சூட்ட பரிசீலிப்போம் என்று அறிக்கைவிட முடியுமா? சிந்தியுங்கள்!!! ஏன் இந்த நிலை? இதை மாற்ற தலைவன் தேவை இல்லை தலைமைத்துவமும் தேவை இல்லை தமிழகத்தின் எல்லா கட்சிகளிலும் உயரிய பொறுப்புகளில் தேவேந்திரர்கள் ..அது தான் இதற்கு தீர்வு.



இதையெல்லாம் கடந்து இரு சமூகமும் அரசியலில் இணைய வாய்ப்புள்ள இந்த தருணத்தில் தி.மு.க கூட்டணி அரசியல் கோமாளிகளின் வவிஷமத்தனமான அறிக்கை மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் நினைவூட்டுவோம் என்றால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெயர் பிரச்னையை பெரிது படுத்தி மீண்டும் இரு சமூகத்திற்கு இடையே பிரிவினையை தூண்டி அரசியல் ஆதாயம் காண்பது தானே அவர்களின் நோக்கம்? இதை எப்படி சாமர்த்தியமாக சமாளித்து அரசியல் அங்கீகாரம் பெற போகிறார்கள் இந்த தேவேந்திர குல ஜாதி தலைவர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



''மிரட்டுகிறார் கிருஷ்ணசாமி!''




'தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்று​மைக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி





செயல்படுகிறார். நாங்கள் நடத்தும் மாநாட்டை முடக்கப் பார்க்கிறார். மாநாடு நடக்க இருக்கும் கல்யாண மண்டப உரிமையாளரை அவர் கட்சியினர் மிரட்டுகிறார்கள்! நாங்கள் போலீஸில் புகார் கொடுத்தால், எங்களையும் அடக்கப் பார்க்கின்றனர்!'' என்று 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது அடுக்கடுக்காகப் புகார் வாசிக்கிறது, 'மத்திய, மாநில எஸ்.ஸி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு! இதனால் ராஜ​பாளை​யமே 'ரவுசு பாளையமாக' மாறி வருகிறது!



ஜான்பாண்டியனின் 'தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்', டாக்டர் கிருஷ்ணசாமியின், 'புதிய தமிழகம்', பசுபதிபாண்டியனின் 'தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு' ஆகிய மூன்று அமைப்புகளுக்குமே தென்தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மத்தியில் செல்​வாக்கு உண்டு. சட்டசபைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறார். கோவைத் தொழிலதிபர் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையில் இருந்த ஜான்பாண்டியன், சமீபத்தில் விடுதலையாகித் தனது பங்குக்குக் கொங்குமண்டலம் தொடங்கி குமரி வரை மாவட்டந்தோறும் கட்சி மாநாடுகள் நடத்திப் பரபரப்பு கிளப்புகிறார். பசுபதிபாண்டியனும் தேர்தலை சந்திக்க, தனது கட்சிக்காரர்களைத் தயார்செய்து வருகிறார்.



இந்த நிலையில்தான், ''தேவேந்திர குலத்தார், பள்ளர், குடும்பன், காலாடி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் அனைவரையும் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வேண்டும்!'' என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பிப்ரவரி 20-ம் தேதி ராஜபாளையத்தில் கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்தது, 'மத்திய மாநில எஸ்.ஸி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்​டமைப்பு' என்ற அமைப்பு. இந்த மாநாட்டில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் அனைத்துத் தலைவர்களையும் பங்கேற்க வைக்கவும் முடிவு செய்தார்கள். அதுதான் இப்போது பிரச்னையாகி இருக்கிறது!







நம்மிடம் இது குறித்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராஜாராம் பேசினார். ''ஜான்பாண்டியன், பசுபதிபாண்டியன் ஆகியோர் எங்கள் மாநாட்டுக்கு வருவதாக வாக்குக் கொடுத்துள்ளார்கள். மள்ளர் இலக்​கியக் கழகத் தலைவர் சுப.அண்ணாமலையும் வருவதாகச் சொல்லி இருக்கிறார். ஆனால், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மற்ற தலைவர்களை அழைத்தது பிடிக்கவில்லை. 'அதனால் நான் வரமாட்டேன்!' என்று சொல்லிவிட்டார். 'சரி, அவரு வராம மாநாட்டை நடத்துவோம்'னு முடிவு செய்தோம். மாநாடு நடத்துவதற்காக கல்யாண மண்டபத்துக்கு 'அட்வான்ஸ்' கொடுத்தோம். டாக்டர் கிருஷ்ண​சாமியின் கட்சிக்காரர்கள் 'இந்த மாநாடு நடக்கக்கூடாது' என்று தடுக்கிறார்கள். அந்தக் கல்யாண மண்டப நிர்வாகியிடம் சென்று தகராறு செய்கிறார்கள்...'' என்றார்.



செயலாளர் விஜயகுமார் தொடர்ந்​தார். ''தமிழகத்​தில் எங்கள் எஸ்.ஸி., எஸ்.டி. மக்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட பல பிரச்னைகள் இருக்கின்றன. அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரண்டு திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி​யில் உட்கார்ந்தாலும் எங்களுக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை. எனவே, சட்டசபைத் தேர்தல் வருவதால்... எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். டாக்டர் கிருஷ்ணசாமி, வேறு யாரையும் அழைக்கக் கூடாது என்று சொல்வதோடு இல்லாமல், ' சிவப்பு, பச்சை நிறக் கொடியையும் பயன்படுத்தக் கூடாது' என்று மிரட்டுகிறார். பிற ஆதிக்க சாதியினரிடம் இருந்து தாழ்த்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதாகத் தம்பட்​டம் அடித்துக்கொள்ளும் கிருஷ்ணசாமி, இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மீதே ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறிவிட்டார். எங்கள் மாநாட்டை முடக்குவதற்காக இன்னும் சில இடைஞ்சல்களையும் செய்து வருகிறார். மாநாட்டு நிர்வாகிகளுக்கு, அவரது கட்சியினர் போன் மூலம் மிரட்டல் விடுக்​கிறார்கள்.



கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாராட்டு விழா நடத்தி​னோம். அப்போது எங்களைப் பாராட்டியவர், இப்போது எங்கள் மீது கோபப்படுகிறார். ஆனாலும் ராஜபாளையத்தில் மாநாடு நடத்துவதற்கான வேலை​களைத் தீவிரமாக செய்து வருகிறோம். அதை நாங்கள் இவருக்காக நடத்தாமல் விடப்போவதில்லை!'' என்றார் ஆவேசமாக!



இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்டோம். ''எனக்குத் தெரியாத விஷயத்​துக்கு எல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். இது​பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. வேறு எதுவும் கேட்காதீர்கள்...'' என்று மட்டும் சொல்லி, இணைப்பைத் துண்டித்துவிட்டார்.



ஈகோ பிரச்னை காரணமாக, ஒரு கட்சித் தலை​வராக இருப்பவரே, சகோதரர்களின் உரிமைக்குரலுக்கு மதிப்பு தராமல் இருக்கலாமா?





நானா? கிருஷ்ணசாமியா? -ஜான் பாண்டியன் ஆவேசம்!

ஜான் பாண்டியன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர். தென் மாவட்டங்களில் தேவேந்திர குல சமுதாயத்தினரால் முதன் முதலில் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அம் மக்களை ஒன்று திரட்டி 1995-ல் மாநாடு நடத்தியவர். அதிரடி அரசியல்வாதியான இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 42 வழக்குகள் பாய்ந்திருக்கின்றன.




"அத்தனையும் பொய் வழக்குகள்... அதனாலேயே, அவற்றிலிருந்து மீள முடிந்தது. என் மீது ஒரு வழக்கு கூட இப்போது நிலுவையில் இல்லை. எட்டரை ஆண்டுகள் என்னை சிறையில் தள்ளிய, கோவை விவேக் கொலை வழக்கும் அந்த ரகம்தான். உச்சநீதிமன்றமே 'நான் நிரபராதி' என்று தீர்ப்பளித்து விடுதலை செய்திருக்கிறது...' என பூரிப் பில் திளைத்திருந்த ஜான் பாண்டியனை நெல் லையில் அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.



நக்கீரன் : சிறை அனுபவத்தைச் சொல்லுங்களேன்..



ஜான் பாண்டியன் : நக்கீரன் விரும்பினால் நான் தொடராகவே எழுதுகிறேன்... அந்த அளவுக்கு பல கொடுமைகள் நடக்கிறது. நானும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றேன்.



நக்கீரன் : இந்த விவேக் கொலை வழக்கில் உண்மையில் நடந்தது என்ன?



ஜா.பா. : எனக்கு கொலை செய்யப்பட்டவரை யும் தெரியாது. கொலையாளியையும் தெரியாது. நிரபராதி என இப்போது விடுதலை ஆகியிருக்கும் கரீம் என்பவரிடம் நான் போனில் பேசினேன் என்ற ஒரே காரணத்துக்காக என்னைக் கொலைகாரனாக்கி விட்டார்கள். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யாக இருந்த ரத்தின சபாபதி இப்போது ஏ.டி. எஸ்.பி.யாக இருக்கிறார். கொலையான விவேக்கும் இந்த ரத்தின சபாபதியும் ஒரே ஊர்க்காரர்கள். ஒரு சாதிக்காரர்கள். எட்டு வருடங்களுக்கு மேலாக என்னை சிறையில் முடக்கிவிட்ட அவரை நான் விடப்போவதில்லை. வழக்கு தொடரப்போகிறேன். சாதிப் பார்வையோடு எனக்கெதிராக நடந்து கொண்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, ஹை கோர்ட் நீதிபதிகள் கூட இருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த நீதிபதிகளின் பெயர்களைக் கூட என்னால் சொல்ல முடியும்.



சிறையில் அமைச்சர் வீர பாண்டியார் தம்பி மகன் பாரப் பட்டி சுரேஷை சந்தித்தேன். 2007-ல் ஒரு சொத்து வாங்கியதற்காக அவரை 6 பேர் கொலை வழக்கில் சேர்த்திருக்கிறார்கள். என்ன கொடுமை? அமைச்சரின் உற வினருக்கே இந்த நிலை.



நக்கீரன் : நீங்கள் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும் என்பதற் காகவே உங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீக்கு போக்காக நடந்து கொண்டதாக ஒரு பேச்சிருக்கிறதே..?



ஜா.பா. : இது வதந்திதான். சிறையில் தகுதியின் அடிப்படை யில் எனக்கு கிடைத்து வந்த ஏ கிளாஸ் கேன்சல் ஆனதற்கு காரணமே கலைஞர்தான். தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஒரு துளி அளவுக்கு... சிறு தூசி அளவுக்குக் கூட எனக்கு சப்போர்ட் பண்ண வில்லை.



நக்கீரன் : சிறை வாழ்க்கை உங்களை மாற்றியிருக்கிறதா? சாத்வீகமான நடவடிக்கைகளுக்கு இனி திரும்பவேண்டும் என்னும் சிந்தனை, அங்கே எந்த சந்தர்ப்பத்தி லாவது உங்கள் மனதில் ஒரு உறுத்தலாக வெளிப்பட்டதா?



ஜா. பா. : சிறையில் நான் வருந்தியதோ, சிந்தனை வயப்பட்டதோ எதுவுமே நிகழவில்லை என்பதே உண்மை. அதே நேரத்தில் படிக்க நிறைய நேரம் கிடைத்தது. சுயசரிதை கூட எழுதி விட்டேன். இயல்பிலேயே நான் சாத்வீகமானவன்தான்.



நக்கீரன் : அப்படியென்றால் இன்றுவரை நிழலாக உங்களைத் தொடர்ந்தபடியே இருக்கும் இந்த ரவுடி இமேஜ்..?



ஜா.பா. : எட்டு வருடங்களாக சிறையில் இருந்திருக்கிறேன். அப்போது எந்த ஒரு குற்றச் செயலிலாவது ஈடுபட்டிருக்க முடியுமா? ஆனால், இன்னும் இங்கே காவல்நிலையத்தில் ரவுடி லிஸ்ட்டில் என் பெயர் இருக்கிறது. 1986-ல் எம்.ஜி.ஆரே என்னை வந்து பார்த்தார். அவரது ஆட்சியில் துப்பாக்கி உரிமம் எனக்கு கிடைக்கச் செய்தார். 2001-ல் ஜெயலலிதா என்னோடு கூட்டணி வைத்துக்கொண்டு, வேட்பாளராக எழும்பூரில் நிறுத்தினார். ஒரு ரவுடியாக இருந்தால் அரசியல் தலைவர்கள் இத்தனை மரியாதை தருவார்களா? பல லட்சம் தேவேந்திர குல மக்கள் என்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா? மக்களோடு தொடர்பே இல்லாமல் இத்தனை வருடங்கள் சிறையில் இருந்த எனக்கு வழி நெடுகிலும் வரவேற்பு தந்து, பாசத்தைப் பொழிவார்களா?



ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்கு ஆளாகும்போதெல்லாம் கிளர்ந்தெழுவேன். தப்பு செய்பவன் அரசியல்வாதியாக இருந்தா லும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு நான் சிம்ம சொப்பனம் தான். என் சமுதாயத்துக்கு ஒரு அரணாக நான் நிற்பது குற்றமா?



நக்கீரன் : கொடியன்குளம் கலவரத்தையெல்லாம் மறந்துபோகும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஒரு இணக்கமான சூழல் நிலவுகிறதா?



ஜா.பா. : சாதீய அடக்கு முறை இப்போதும் இருக்கவே செய்கிறது. பல கிராமங்களிலும் இணக்கமான சூழ்நிலை இல்லாததைப் பார்க்க முடிகிறது.



நக்கீரன் : 2001-ல் உங்களோடு கூட்டணி கண்ட அ.தி.மு.க. இப்போது புதிய தமிழகத்துடன் கூட்டணி கண்டிருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?



ஜா.பா. : நான் டாக்டர் கிருஷ்ணசாமியை ஒரு பொருட் டாகவே எப்போதும் நினைப்பதில்லை. அவரும் களத்தில் இறங்கட் டும். நானா? அவரா? உண்மையிலேயே யார் தேவேந்திரர் என்பதை நிரூபிக்கட்டும். தேவேந்திர மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். 35 ஆண்டுகளாக என் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். 1805-ல் என் மூதாதையர்கள் தூக்கிய கொடி அது. புதிய தமிழகம் என்று சொல்லிக்கொண்டு இனிமேல் யாரும் எங்கள் தாய்க்கொடி யைத் தூக்க விடமாட்டேன். எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று இப்போதே சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களைச் சந்தித்தபடியே இருக்கிறேன். அவர்களின் கருத்துக்களைக் கேட்கிறேன். எம் மக்களின் விருப்பப்படிதான் கூட்டணி அமையும். என்னுடைய அரசியல் நடவடிக்கைகளும் இனி தீவிரமாக இருக்கும்.



யாருக்கும் ஒரு தொந்தரவும் தராவிட்டால் சரிதான்.. ஜமாய்ங்க ஜான் பாண்டியன்!



ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்!

மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மக்கள் தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது.




புதுக்கோட்டையில் நேற்று முன்தினம்( 09-02-11) மக்கள் தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் அரசியல் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-



* தியாகி இமானுவேல்சேகரனுக்கு மணிமண்டபம் அமைத்தி, அரசு விழா எடுப்பதுடன், தபால் தலை வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



* மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்.



* தேவேந்திர குல மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.



* சென்னை மெரீனா கடற்கரையில் வீரன் சுந்தரலிங்கம் உருவச்சிலையை நிறுவ வேண்டும்.



* மறைந்த மூதறிஞர் தேவ ஆசீர்வாதத்தின் நூல்களை நாட்டுடமையாக்கி தஞ்சையில் அவர் வாழ்ந்த வீட்டை மணிமண்டபமாக மாற்ற வேண்டும்.



* தமிழக மக்களின் சம்மதமின்றி இந்திய அரசால் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



* பன்னாட்டு முதலாளிகளுக்கு தமிழகத்தின் நீண்ட கடற்கரையைத் தாரை வார்க்க வழிவகுக்கும் இந்திய கடற்கரை மேலாண்மைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மாநாட்டுக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் அ.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில செய்தித்தொடர்பாளர் டென்னீஸ், மாவட்ட இளைஞரணிச் செயலர் சி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர் குழ.செல்லையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்குரைஞர் புரட்சிக்கவிதாசன் மாநாட்டு பேருரையாற்றினார்

படியுங்கள்! சுவையுங்கள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

குற்றப் பரம்பரை சட்டம்: சில வரலாற்றுத் தகவல்கள்






காவல் நிலையங்களிலும், சமூக பஞ்சாயத்துக்களிலும் சில குறிப்பிட்ட சமூகத்தினர், அன்றாடம் கைவிரல் ரேகையைப் பதிய வேண்டும் என்ற ஒரு மனித விரோத சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் அமுலில் இருந்தது. இந்த சட்டத்தை நீக்கும் போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை முன்வைத்து தோழர் பெரியார் டாட்காம் இணையதளத்தில் அதி.அசுரன் வெளியிட்ட கட்டுரை இது.



மறைந்த முத்துராமலிங்க தேவர் மட்டுமே இதை எதிர்த்துப் போராடியதாகவும், பெரியார், போராட்டம் எதையும் நடத்தவில்லை எனவும், அண்மையில் சில முகாம்களில் நடக்கும் தவறான பரப்புரைக்கு உரிய விளக்கமாக இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.



கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது. தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையர் மட்டுமே குற்றப்பரம்பரைச் சட்டப்படி கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று ஒரு தவறான கருத்து அனைத்து மட்டங்களிலும் உள்ளது. உண்மையில் தமிழ்நாட்டில் 89 சாதிகள் இப்பட்டியலில் இருந்தன.



அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, புலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக் கவுண்டர், டொம்பர், கேப்மாரி, தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், தலையாசி, இஞ்சிக்குறவர் போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.



குற்றப்பரம்பரைப் பட்டியலில் உள்ள சாதிகளில் பிறந்த அனைத்து மக்களும் கைரேகை வைக்கப்படச் சொல்லி கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் அப்போதிருந்த மக்கள் தொகை முழுதும் சுமார் 2 கோடிப் பேர் தினமும் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.



மேற்கண்ட சாதிகளில் குறிப்பாக கள்ளர், மறவர், அகமுடையார்களிலும் விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.



அதேபோல கைரேகை வைக்கும் இடம் காவல் நிலையம் அல்ல. உள்ளூரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும் அதிலேயே கைரேகை வைக்கலாம். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப் பெரியவர் குழுவில் இந்த அடையாளச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச் சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாக காவல்நிலையத்தில் கைரேகை வைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.



சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய குழுவின் பொறுப்பாளர் தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார் ஆவார்.



1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் தலைமையிலேயே கள்ளர்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. இப்படி கள்ளர்களை வைத்தே கள்ளர்களை அடக்கிய நுட்பத்தை ஆங்கிலேயருக்கு அறிவுறுத்தி செயல்படுத்தியவன் அப்போது மதுரை மாவட்ட துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஏ.கே. இராஜா என்ற பார்ப்பான்.



ஆகவே, இச்சட்டம் தேவர்களுக்கு மட்டும் இருந்த சட்டமல்ல. தேவர்களிலும் அனைத்து மக்களுக்கும் பொருந்திய சட்டமல்ல. அனைத்து ஜாதிகளிலும் இருந்த உண்மையாகவே திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையில் ஈடுபட்ட மக்களைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரப்பட்ட சட்டம். 1932 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பசும்பொன்தேவர் இப்படிப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை ஒடுக்குவது தவறில்லை என்றே பேசியிருக்கிறார்.



இச்சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுமைக்கும் பல்வேறு தலைவர்கள் போராடியிருக்கிறார்கள். எதிர்த்திருக்கிறார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். சரியாக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் பட்டியலில் கடைசியாக இடம்பெற வேண்டிய பெயர் தேவரின் பெயர் என்ற உண்மையை அறியலாம்.



தமிழ்நாட்டில் செய்யூர் ஆதி திராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த ஜாதிகளை பட்டியலில் இருந்து விடுவித்தன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911-லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப் பகுதி ஈச நாட்டுக் கள்ளர்களை மீட்டிருக்கிறார். இந்தப் போராட்டங்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்போது அவருக்கு வயது 3.



1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச் சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 கள்ளர்கள் வீரமரணம் அடைந்தனர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் இதுதான். இந்தப் போராட்டத்திற்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்கு அப்போது வயது 12. மதுரைக்கு அருகே பசுமலையில் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்.



அதன் பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கேரளாவைச் சேர்ந்தவரும் மதுரையில் குடியிருந்தவருமான ஒரு வழக்கறிஞர், வைக்கம் போராட்டத்திற்கு பெரியாரை வரவழைத்த மலையாளியான ஜார்ஜ் ஜோசப். இவர்தான் முதன்முறையாக கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களைத் திரட்டி குறிப்பாக குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கெதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தவர். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பு துரை’ என்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.

1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து,



.... இந்தியா மந்திரி அவர்களே குற்றப் பரம்பரையினர் எனப்படுபவரின் கொடூர நிலையை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். குற்றப் பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக் கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகிறேன்.



.... இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், நலன்களைப் பாதுகாக்கவும் அந்த சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டம் பத்தி 108-ன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பித்து, நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன?



.... ஒருவர் ஆதிவாசியா அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன் அவர்களது நலனுக்குச் சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? கிரிமினல் இன மக்கள் சம்பந்தப்பட்ட சட்டம் அந்தக் குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது.



என விரிவாகப் பேசி, இந்திய அரசின் சாதகமான பதிலையும் பெற்றார். இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாக குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. அதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்.



இதற்கெல்லாம் பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் வருகிறார். 1933 செட்பம்பர் 25 ஆம் தேதி பசும்பொன் தேவரது சொந்த ஜாதியான அவர் பிறந்த உட்பிரிவான ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப் பழங்குடியினர் சட்டத்தில் இணைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் தான் தேவர் அச்சட்டத்தை எதிர்க்கத் தொடங்குகிறார். 1934 மே மாதம் 12 ஆம் தேதி கமுதி அருகே உள்ள அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவரும் பெரியாருடன் சேரன்மாதேவி குருகுலக் கிளர்ச்சியில் இணைந்து போராடியவருமான பி. வரதராஜூலு நாயுடு தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு 6 மாதத்திற்கு முன்பு பெரியார் இன்றைய ஆட்சிமுறை ஒழிய வேண்டும் ஏன்? என்ற கட்டுரையை எழுதியதற்காக இராஜதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, இராஜமகேந்திரம் சிறையில் கடுங்காவல் தண்டனையில் இருந்தார். அவரை வரதராஜூலு நாயுடு நேரில் சந்தித்தார். அதன் பிறகுதான் குற்றப் பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வருகிறார். ஆப்ப நாட்டு மறவர்களை இப்பட்டியலில் இருந்து நீக்கக் கோரி அரசைச் சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜூலு நாயுடு. உறுப்பினர்களாக நவநீதிக்கிருஷ்ணத் தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ணத் தேவர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போதைய அரசை சந்தித்து இக்குழு மனு ஒன்றை அளித்துள்ளது.



மிக முக்கியமாக தினகரன் என்ற பத்திரிகையின் ஆசிரியரும், முதுகுளத்தூர் கலவரம் என்ற மிக முக்கிய வரலாற்றுப் பதிவை வெளியிட்ட தேவர் ஜாதியைச் சேர்ந்த தினகரனும் இக்கொடுஞ் சட்டத்தை எதிர்த்துப் போராடியுள்ளார்.



1934 இல் அபிராமத்தில் நடைபெற்ற மாநாட்டைத் தவிர குற்றப் பழங்குடி சட்டத்திற்கு எதிராக குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தப் போராட்டத்தையும் பசும்பொன்தேவர் நடத்தவில்லை. பல கூட்டங்களில் அது பற்றி பேசியுள்ளார். இரண்டாம் உலகப் போர் நடந்த காலங்களில் 1945 வரை தேவர் ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இருந்தார். 1945 செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை ஆனார். 1947 ஜூன் 5 ஆம் நாள் வெள்ளைக்காரன் இருக்கும் போதே குற்றப் பரம்பரைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப் பட்டது. அச்சட்டம் நீக்கப்படுவதற்கு முன்பு சுமார் 10 ஆண்டுகளாக முத்துராமலிங்கத் தேவர் உட்பட யாரும் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களையோ குறிப்பிடத்தகுந்த போராட்டங்களையோ நடத்தவில்லை. தேவர் காங்கிரசோடு அனுசரித்து, இச்சட்டம் பற்றி கவலைப்படாத போதும் பெரியார் உறுதியாக அச்சட்டத்தை கடைசி வரை எதிர்த்திருக்கிறார்.



திராவிடர் இயக்கத்தின் சாதனைகள்



1919 இல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையின் இந்திய அரசின் செயலரான எட்வின் சாமுவேல் மாண்டேகு மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் பிரடிரிக் ஜான் நேப்பியரின் பேரனான செம்ஸ்போர்ட் ஆகியோர் இந்தியர்களுக்குப் படிப்படியாக அதிகாரங்களை வழங்க, அது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்தனர். அப்போது நீதிக்கட்சி, திராவிட சங்கம் ஆகியவற்றின் சார்பாக டி.எம்.நாயர், கே.வி. ரெட்டி, சர்.ஏ. இராமசாமி முதலியார் ஆகியோர் கருத்துருக்களை முன் வைத்தனர். அச்சமயத்தில் மறவர் மகாஜனசபை என்ற அமைப்பை உருவாக்கச் சொல்லி, அதன் சார்பிலும் கருத்துருக்களை வைக்கச் செய்தவர் டி.எம். நாயர். இலண்டனில் மாண்டேகு - செம்ஸ்போர்டு குழுவை நேரில் சந்தித்து இறுதி வடிவான கருத்துருக்களை சமர்பிக்கச் சென்றபோது இலண்டனில் மருத்துவமனையில் மறைந்தார் டி.எம்.நாயர். அதையடுத்து கே.வி. ரெட்டி அந்த கருத்துருக்களைச் சமர்பித்து, அதன் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கடலூர் சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்சராகக் கொண்டு நீதிக்கட்சி ஆட்சி தொடங்கியது. அதன் பிறகு பனகல் அரசர் 1921 முதல் 1926 வரை முதல்வராக பணியாற்றினார்.



பெருங்காமநல்லூர் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசுதான் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அச்சட்டத்தின் கோரப்பிடியிலிருந்து விடுவித்தது.



கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு ஐ.சி.எஸ். அலுவலரை நியமித்தது. லேபர்கமிஷனர் என அப்பதவி இருந்தது. அந்த லேபர் கமிஷனர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழு வீச்சில் செயல்படுத்தியது.



கள்ளர்கள் விவசாயம் செய்ய இலவச நிலங்களை வழங்கியது.



கள்ளர்கள் தனியாக நிரந்தரத் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி அளித்தது.



கள்ளர்களுக்கென்று இலவசக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, அவற்றை நிர்வகிக்கவும் செய்தது.

இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சி அளித்து அவர்களை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியது.



மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, திருமங்கலம், தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளை உருவாக்கியது.



தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் மகாஜன சங்கத்தாலேயே கைவிடப்பட்ட கள்ளர் பள்ளிகளை அரசு ஏற்று நடத்தியது.



பெரியாறு அணைப் பாசனத் திட்டத்தில் கள்ளர் நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தது.



1922 இல் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கள்ளர்கள், விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்ட இயலாத நிலையில் அந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி அளித்திருந்த சென்ட்ரல் வங்கி சங்கங்களை கடுமையாக நெருக்கத் தொடங்கியது. அப்போது திக்கற்று இருந்த 34 கள்ளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மாகாண அரசே நிதி கொடுத்து சங்கங்களின் கடனை அடைத்து, அடுத்த கட்ட விவசாயத்திற்கும் கடனை அளித்தது.



இப்படி கள்ளர்கள் வாழ்வில் ஒரு புரட்சியை உருவாக்கியது நீதிக்கட்சி அரசுதானே ஒழிய முத்துராமலிங்கத் தேவர் அல்ல. இந்த மாற்றங்கள் நடக்கும்போது தேவர் பொது வாழ்வுக்கே வரவில்லை.



அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஆப்ப நாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப்பழங்குடி சட்டப் பட்டியலிலிருந்து மீட்டதும் நீதிக்கட்சி அரசுதான். வரதராஜூலு நாயுடு தலைமையில் முத்துராமலிங்கத் தேவரும் இடம் பெற்றிருந்த குழு இந்த நீதிக்கட்சி அரசிடம்தான் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே அப்பிரிவு மக்களை அப்பட்டியலில் இருந்து நீக்கியது. பெரியாரின் நண்பரான பெரியாரின் ஆதரவு பெற்ற ஆட்சியின் தலைவரான பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையிலான நீதிக்கட்சி அரசுதான்.



இறுதியாக 1947 இல் ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த பெரியாரின் தொண்டரும், சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி. சுப்பராயன் தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்ட முன் வடிவை ஆளுநரிடம் சமர்பித்து அவரது ஒப்புதலுக்குப் பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இச்சட்டத்தை ஒழித்தார்.



ஆக குற்றப் பழங்குடியினர் சட்டத்தை ஒழிப்பதற்கும் அச்சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட கள்ளர்கள் உட்பட அனைத்து ஜாதி மக்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை உழைத்தது பெரியாரின் தொண்டர்கள் தான். காங்கிரஸ் அரசானாலும், நீதிக்கட்சி அரசானாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் அரசுப் பதவியில் இருந்தாலும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து சரியான செயல்களைச் செய்தவர்கள் பெரியார் ஆதரவாளர்களே! பெரியார் தொண்டர்களே! திராவிடர் இயக்கத்தவர்களே!

இமானுவேல் சேகரனாரின் தபால்தலை வெளியீட்டை மறைத்த கருணாநிதிகும்பல்

நினைவுத் தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை(Commemorative stamp) என்பது ஏதாவதொரு இடத்தை நிகழ்வை அல்லது ஒரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால் தலைகளின் முதல் நாள் வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் ஒரு சிறிய விழாவாகவும் நடைபெறுவதுண்டு. இந்த முதல் நாள் வெளியீட்டின் போது இதற்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கடித உறையில் இத் தபால்தலை ஒட்டப்பட்டு குறிப்பிட்ட நாளுக்குரிய நாள் முத்திரையும் பதிக்கப்பட்டு முதல்நாள் உறையாக FDC- First Day Cover விற்கப்படும்.




இதைப்போல் தான் இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபின் 2200க்கும் மேற்பட்ட ஞாபகார்த்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு தபால்தலை வெளியிடப்படும்போதும், குறிப்பாக தியாகிகளுடைய அல்லது தலைவர்களுடைய தபால் தலை வெளியிடும் போது, அவர்களுடைய சம்பந்தப்பட்ட ஊரிலோ அல்லது மாநிலத்திலோ, அவர்களின் பிறந்த நாளிலோ அல்லது நினைவு நாளிலோ பெரிய விழா எடுத்து மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்கள் முன்னிலையிலேயே இந்த தபால் தலை வெளியிடப்படும். அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது தியாகிகளின் குடும்பத்தினரை அழைத்து கௌரவிப்பார்கள். ஆனால் ஒன்றரை கோடி தேவேந்திரர்களின் மதிப்புமிக்க தலைவராக கருதப்படும் தியாகி இமானுவேல் சேகரனார் தபால் தலையை மேலே சொன்ன எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தியாகி இமானுவேல் சேகரனாருக்கு செய்த மிகபெரிய அவமரியாதை.



தற்போது முன்னெப்போதுமில்லாத அதிகளவு மத்திய அமைச்சர்களை கொண்டிருக்கிற திமுக மற்றும் காங்கிரசின் தேவேந்திரர் விரோத போக்கையே இது காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்ள முயலும் காங்கிரசும் இந்த கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.



இதைவிட கொடுமை பல்லாயிரக் கணக்கான தபால் தலைகளை வெளியிட்ட நாள், அந்த தபால் தலையின் புகைப்படம், அதன் விவரம்(Broucher) இவை மூன்றையும் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி வைத்திருக்கின்ற http://www.indiapost.gov.in/ என்ற அரசு தபால்துறை இணையதளத்தில் கூட இந்த தபால்தலை வெளியிடப்பட்ட செய்தியை மறைத்திருக்கிறார்கள். ஆனால் http://stampsofindia.com/ போன்ற தபால்தலை சேகரிப்பாளர் சேவை இணையதளங்களில் இதைப்பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு FDC என்று சொல்லப்படுகின்ற முதல்நாள் உறை, அதாவது தபால் துறையே தியாகி இமானுவேல் சேகரனார் படம் போட்ட ஒரு தபால் உறையில், இமானுவேல் தபால் தலை ஒட்டி, அதிலே அரசு தபால் நிலைய முத்திரையும் இட்டு விற்பனை செய்துள்ளனர். அந்த கவர் படங்கள் கூட தனியார் இணையதளங்களில் உள்ளது.



மற்றும் ஒவ்வொரு தபால் தலை வெளியிடப்படும் பொழுதும் அதன் இணைப்பாக ரூபாய் 2க்கு வெளியிடப்படும் பிரௌச்சர் என்று சொல்லக்கூடிய அந்த தபால்தலையைப் பற்றிய விளக்க கையேடும் நேரடியாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனுடைய புகைப்படமும் தனியார் இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன.



அப்படியானால் திட்டமிட்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்கு வெளியிடப்பட்ட தபால் தலையை மறைத்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர் யார்?



இந்த தபால் தலை வெளியிடப்பட்ட போது, அத்துறையின் அமைச்சர் கலைஞர் பாணியில் சொன்னால் ஒரு தலித். ஆனால் அவரும் சேர்ந்து கலைஞரின் ஆலோசனைப்படி, ப.சிதம்பரத்தின் வேண்டுகோளின்படி மற்றும் ஆதிக்க சாதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வேண்டுகோளின் படி, திருமாவளவனின் வேண்டுகோளின்படியும் இந்த சதித்திட்டம் நிறைவேறியுள்ளது. தேவேந்திரர்களின் வரலாறுகளை தொடர்ந்து மறுத்து வரும் கலைஞரும் அவரது கூட்டமும் மீண்டும் ஒரு வரலாற்று தவறு செய்திருக்கிறது.



இமானுவேல் சேகரனாரின் தபால் தலை வெளியிடப்பட வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் தேவேந்திரர்கள் கலைஞருக்கு எதிராக ஒன்றுதிரண்டார்கள் என்ற காரணத்திற்காகவே இது நடந்திருக்கக் கூடும்.



1. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைத்தது.



2. உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களை அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தேவேந்திரர்கள் ஒன்று திரண்டு போராடியது



3. மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவேண்டும் என்று பெரிய அளவில் போராட்டங்கள் எழுந்தது போன்ற காரணங்களை வைத்து எப்படியும் தேவேந்திரர்கள், வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைத்தே கலைஞர் இந்த தேவேந்திரர் விரோதச் செயலலை செய்திருக்கிறார்.



துரோகத்தின் விளைநிலம் கருணாநிதிக்கும், துணை நின்ற காங்கிரசுக்கும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு இதைவிட மிகப்பெரிய காரணம் தேவையில்லை. சிந்திப்பீர் தேவேந்திரர்களே!…

புதன், 2 பிப்ரவரி, 2011

முதுகுளத்தூர் பயங்கரம் வரலாற்றின் குருதியிலிருந்து இன்னுமொரு துளி


முதுகுளத்தூர் பயங்கரம்
வரலாற்றின் குருதியிலிருந்து இன்னுமொரு துளி
பழ. அதியமான்
முதுகுளத்தூர் பயங்கரம்
ஆசிரியர்: டி. எஸ். சொக்கலிங்கம்
பதிப்பாசிரியர்: அ. ஜெகநாதன்
முதல் பதிப்பு: நவம்பர் 1957
இரண்டாம் பதிப்பு:
பிப்ரவரி 2008
பக். 158
விலை ரூ. 100
கவின் நண்பர்கள் வெளியீடு
ஆர்சி. நடுத்தெரு,
வ. புதுப்பட்டி - 626116, விருதுநகர்.
1957 பொதுத்தேர்தல் அதற்கடுத்த இடைத்தேர்தல் ஆகியவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரு சாதிகளுக்கிடையில் கொந்தளிப்பு எழுந்தது. அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுசெய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் இம்மானுவேல் சேகரன் அம்மக்கள் சார்பாகக் கலந்துகொண்டார். மறவர்கள் சார்பில் உ. முத்தராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேலின் தலைமைத் தகுதி குறித்து விவாதம் எழுந்தது. இருவரும் சேர்ந்து கையெழுத்திடும் கூட்டறிக்கைக்கு முத்துராமலிங்கத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகள் வெளியிடும் ஆட்சியரின் முயற்சியில் உருவான சமாதானத் திட்டத்தோடு கூட்டம் முடிந்தது. மறுநாள் செப்டம்பர் 11இல் இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இரு சமூகத்தினரிடையே எழுந்த மோதல் பல உயிர்களையும் பலிகொண்டது. சேதமான சொத்துகள் இருதரப்பிலும் இருந்தன. ஒரு மாதத்திற்கும் மேலாக இம்மோதல் நீடித்தது. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாகத் தமிழக வரலாற்றில் முதுகுளத்தூர் பதிவானது. அடங்க மறுத்ததும் திமிறி எழுந்ததுமான செயல்பாடுகளால் தலித்துகள் எழுச்சி பெற்றது உண்மை.
1957இல் முதுகுளத்தூரில் நேர்ந்த தலித் எழுச்சியைக் குறித்து அந்தக் காலகட்டத்தில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன. இதைக் கலவரமாகச் சித்திரித்து தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் (1958), பயங்கரமாக அதை வர்ணித்து டி.எஸ். சொக்கலிங்கம் எழுதிய முதுகுளத்தூர் பயங்கரம் (1957). 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவ்விரண்டு நூல்களும் அடுத்தடுத்து மறுபதிப்புக் கண்டுள்ளன.
முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான காங்கிரஸின் தலித் ஆதரவு நூல்களேயானாலும் இவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. ஒடுக்கப்பட்ட சாதி, ஆதிக்கச் சாதிக்கு எதிராக மேல் எழும் ஒரு நிகழ்வைக் கலவரமாகப் பார்ப்பதற்கும் பயங்கரமாகப் பார்ப்பதற்குமான வித்தியாசமே அது.
தினகரன் சுயசாதி அபிமானத்தையும் கடந்து தலித் ஆதரவு நிலைப்பாடெடுத்து எழுதினார். விளைவாகச் சொந்தச் சாதியினரால் கொல்லவும்பட்டார். சொக்கலிங்கத்தின் நூலிலும் தலித் ஆதரவு இழையோடுகிறது. அது காங்கிரஸ், குறிப்பாகக் காமராஜ் என்ற தறியிலிருந்து புறப்பட்ட இழையாகும்.
சம்பவக் காலத்தில் டி.எஸ். சொக்கலிங்கம் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளைப் பத்திரிகையாளர் மயிலைநாதன் தொகுத்து முதுகுளத்தூர் பயங்கரம் என்னும் பெயரில் இந்நூலாக்கினார். முதுகுளத்தூர் சம்பவம், அரசியல் நிகழ்வல்ல, வகுப்புகளுக்கிடையிலான போராட்டமே என்பதை நிறுவிக்காட்டுவதே ஆசிரியரின் நோக்கம். குறிப்பிட்ட நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்த சம்பவங்கள், அவற்றைக் குறித்த பத்திரிகைச் செய்திகளில் படிந்துள்ள அரசியல் சாயம், அறியாமையின் தூசு, சதியின் பகுதி ஆகியவற்றை விளக்குவன நூலின் முதல் இரண்டு பகுதிகள். முதுகுளத்தூர் பகுதி நிலவரிகூட வசூலிக்க முடியாதபடி அராஜகப் பிடியில் இருந்தது பற்றிய விவரம் மூன்றாம் பகுதி. தலைவிரித்தாடிய அராஜகமும் அப்பகுதியைப் பார்வையிட வந்த மத்திய உள்துறை அமைச்சர் தத்தாரின் வருகையைப் பற்றிய விவரணையும் தொடரும் பகுதிகள். தலித்துகளின் துயர வரலாறும் சட்ட சபையில் காங்கிரஸ் கட்சிமீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் அரசின் நடவடிக்கைகள் பற்றியதும் இறுதிப் பகுதிகள். இந்நூலின் முன் இணைப்பாக 'மதுரைக் கோயில் நுழைவு',
'உ. முத்துராமலிங்கம் பொய்மையால் வேயப்பட்ட காகித ஓடம்' என்னும் பதிப்பாசிரியரின் இரு கட்டுரைகளும்,
டி. எஸ். சொக்கலிங்கம் பற்றிய பொன். தனசேகரனின் அறிமுகக் கட்டுரையும் உள்ளன. பின்னிணைப்பாகத் தலித் தலைவர் பி. மருதையாவின் அறிக்கையும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது சகஜானந்தரின் சட்டசபைப் பேச்சும் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பவ காலத்தில் எழுதப்பட்ட இப் பிரதிகளை, நிகழ்ச்சிகளை வரலாற்றில் வைத்துப்பார்க்கும் அரிய வாய்ப்பை மறுபதிப்பு செய்திருக்கும் பதிப்பாசிரியருக்குக் காலம் அளித்திருக்கிறது. அதனால் நிகழ்வுகளை அலசிக் கொள்கைரீதியான தர்க்கங்களோடு
அ. ஜெகநாதன் முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் சூழலை விளக்கும் இன்னும் பல அம்சங்கள் தேவைப்படினும் பயனுள்ள முன்னுரை.
சொக்கலிங்கத்தின் நூல் சந்தேகமில்லாமல் காங்கிரஸ் சார்பு எழுத்துகள்தாம். அவை முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக இருப்பதால் தலித் ஆதரவு எழுத்துகளாகத் தோற்றம் தருகின்றன. தன் தொகுதிவாழ் மக்களின் சாதிகளைத் தம் கைப்பட எழுதிவைத்திருந்த காமராஜரின் சுயசாதி ஆதரவு நிலைப்பாட்டை, அவர் தலித்துகளை ஆதரிப்பதால் நாம் புறக்கணித்துவிட முடியாது. கட்சி அரசியலில் சாதிகளின் செல்வாக்கை மறுக்க முடியாத மோசமான நிலையை ஒப்புக்கொண்டு சொக்கலிங்கமும் வருந்துகிறார் என்பது தான் நிலைமை.
அது அரசியல் கலவரமல்ல, வகுப்பு மோதல், அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தம் ஆதிக்கத்திலேயே இன்னொரு சாதியினரை வைத்திருக்க விரும்பி அதன் பொருட்டு வன்முறையில் ஈடுபட்டதன் விளைவே முதுகுளத்தூர் பயங்கரம் என்பதாக இந்நூல் பேசுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் தற்காத்துக்கொள்ள மேற்கொண்ட எதிர்ப்பு தன்னெழுச்சியாக நேர்ந்ததாகச் சொக்கலிங்கம் நூல் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாகக் காங்கிரஸ் சேவையின் விளைவு அது என்பதாகப் பீற்றிக்கொள்கிறது. அது காங்கிரஸ் சேவையின் விளைவென்றால் காங்கிரஸ்காரர் அனைவருக்கும் அதில் பங்கு உண்டுதானே.
சொக்கலிங்கத்துக்குத் தன் காங்கிரஸ் ஆதரவு வாதத்திற்கு வலுச் சேர்க்கப் பெரியாரின் நிலைப்பாட்டையும் பாராட்ட நேர்ந்துவிடுகிறது. முதுகுளத்தூர் சம்பவத்தில் தலித்துகளின் பக்கம் பெரியார் சார்புநிலை எடுத்ததற்கு அரசியல் காரணம் கற்பிக்கும் பிந்தைய வரலாறுகளை முன் உணர்ந்தோ என்னவோ ஒடுக்கப்படும் பிரிவினர்மீது எப்போதும் கவனம் குவிக்கும் பெரியாரின் இயல்பே தலித் சார்பு நிலைக்குக் காரணம் எனச் சொக்கலிங்கம் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். பெரியார், திராவிடம் என்ற கருத்தாக்கங்கள்மீது எப்போதும் எதிர் நிலை எடுப்பவர் சொக்கலிங்கம் என்பது வரலாறு அறிந்த செய்தி. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலும் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பது சொக்கலிங்கத்தின் புகழ்பெற்ற கிண்டல். திராவிடர் கழகங்களின் உயிர்மூச்சான இட ஒதுக்கீட்டையே கிண்டல் செய்த சொக்கலிங்கம் பெரியாரை வேறு வழியின்றிப் பாராட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
தலித்துகளின் தன்னெழுச்சியைப் போற்றி விதந்தோத வேண்டிய இந்நூல், காங்கிரசின் தலித் நிலைப்பாடுமீது சார்புணர்ச்சி எழுமாறு உருவாகிவிட்டது. அதற்கு உதவுவதுபோல் நூலின் முன் இணைப்புக் கட்டுரைகள் இரண்டும் தலித்துகளுக்காக உழைத்ததாகக் காங்கிரஸ் பலபடப் பேசும் வைத்தியநாத அய்யரையும் ராமேசுவரி நேருவையும் (நூல் நெடுக இவர் பெயர் ராஜேசுவரி நேரு என்று பதிவாகியுள்ளது. நூலில் காணலாகும் பல பிழையான பெயர்களுடன் இதுவும் சேர்த்தி) புகழ்ந்து தள்ளுகின்றன.
உணர்ச்சியின் பெருக்கில் கோபத்தின் திசைவழியில் இயங்கும் முன் இரு கட்டுரைகளின் மிகை அழுத்தம் காங்கிரஸ் சார்பு எழுத்தான இந்நூலைச் சொக்கலிங்கம் என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் சமத்துவ இந்தியா நோக்கிய கனவு பற்றிய எழுத்தாக நினைக்கவைத்துவிடுகின்றது.
ஒரு காலகட்டத்தில் ஒருவருக்கு எதிராக இருந்தவர்கள் இன்னொரு காலகட்டத்தில் அவருக்குச் சார்பான நிலை எடுப்பது நாடாளுமன்ற அரசியலில் தவிர்க்க இயலாதது. தேவரை எதிர்த்த தினகரனோடு தோள் சேர்ந்து நின்ற ஆறுமுகம் பின்னாளில் தேவரைப் பாராட்டிப் புத்தகம் எழுதினார். சொக்கலிங்கத்தின் நிலைப் பாட்டையே அவருக்குப் பிறகும் வாழ்ந்த மயிலைநாதன் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அது நடக்காதபோது அவரைக் குருத்துரோகி என்று சொல்வதும் மீண்டும் யோசிக்க வேண்டியவை. ஏ.கே. செட்டியார், மயிலைநாதன், தி.வ. மெய்கண்டார், அன்பு பொன்னோவியம் போன்றோர் வரலாற்றின் தொடர்ச்சிக்கு அளிக்கும் ஆவணச் சேகரிப்புப் பங்களிப்பை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. நமது விமர்சனங்கள் வரலாற்றுக்குதவும் அவர்களின் இருப்பைக் காலிசெய்துவிடக் கூடாது. அதேசமயம் சந்தர்ப்பவாதப் புத்தக வியாபாரிகளைச் சாடுவதை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.
முதுகுளத்தூர் சம்பவத்தைப் பள்ளர்களின் விடுதலைப் போராட்டமாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த தலித்துகளின் எழுச்சியாகப் பார்ப்பதும் உணர்வதும் தலித் எழுச்சிப் பயணத்தில் நல்ல சமிக்ஞைகள்.
கடைசியாக ஒரு வார்த்தை. முதுகுளத்தூர் கலவரம் நூலில் நேர்ந்திருந்த இரண்டு தவறுகளுக்காகத் தமிழ் அறிவுலகத்திடம் இந்நூலில் மன்னிப்பைக் கோரியுள்ளார் பதிப்பு ஆசிரியர். அம்மாதிரியான தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் விமர்சகர்களுடையவை. ஆனால் விமர்சகர்கள் அவற்றை உணர்ந்திருந்தாலும் சொல்லாமல் இருந்திருக்கலாம். அதற்குக் காரணங்கள் இரண்டு: இம்மாதிரியான நூல் முயற்சிகளுக்குப் பின்னால் நிற்கும் உழைப்பு பற்றிய மதிப்பும் தங்கள்மேல் ஊற்றப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் தார் டின்களின் மீதான கவனமும்.