ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 28 நவம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு - வாக்குமூலங்கள்


பரமக்குடி துப்பாக்கிச் சூடு - வாக்குமூலங்கள்

துப்பாக்கிச் சூட்டில் பலியான தீர்ப்புக்கனியின் (வயது 22, கீழக்கொடுமலூர்) தகப்பனார் வேலு அளித்த வாக்குமூலம் :
"எனது மகன், தீர்ப்புக்கனி, வயது 22, டி.எம்.ஈ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தான். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, நானும் இம்மானுவேல் சேகரன் குருபூசைக்குப் போயிருந்தேன். எனக்கு முன்பே தீர்ப்புக்கனி வேன் மூலம் அங்கு சென்றுவிட்டான். திடீரென கலவரம் வந்தவுடன், எல்லோரும் ஓடி ஒளிந்தார்கள். நானும் ஒளிந்தேன். 4.30 மணியிருக்கும். பரமக்குடி டவுனை ஒட்டியுள்ள ரயில்வே கேட் அருகே, நான் ஒரு கடையில் ஒளிந்திருந்தேன். அப்போது, போலிஸ்காரர்கள், எனது மகன் தீர்ப்புக்கனியையும், செந்தில் என்ற இன்னொரு பையனையும் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றனர். இதை நான் பார்த்தேன். அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு 10 மணிக்கு மேல், எனது மகன் தீர்ப்புக்கனி, இளையாங்குடி ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னார்கள். நானும் எனது இன்னொரு மகன் திருநாவுக்கரசும் இளையாங்குடி ஆஸ்பத்திரிக்குப் போனோம். அங்கிருந்து தீர்ப்புகனியை மதுரைக்கு கொண்டு சென்று விட்டதாகச் சொன்னார்கள். அங்கிருந்து மதுரை வந்தோம். மதுரை ஆஸ்பத்திரியில், எனது மகன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, கை கால் எலும்புகள் நொறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தான். பார்த்து கதறி அழுதேன். சம்பவம் நடந்த அன்று, 5 மணிக்குப் பிறகுதான் போலிஸ் துப்பாக்கியால் சுட்டு, எனது மகனை கொன்றிருக்க வேண்டும்.''
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பன்னீர் என்பவரின் மகள் ரெபேக்காள் (வீரம்பல்) அளித்த வாக்குமூலம் :
"பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூசைக்கு எனது தகப்பனார் சென்றிருந்தார். நான் பரமக்குடி பொன்னையாபுரத்தில் திருமணம் செய்து, அங்கேயே எனது கணவருடன் வாழ்ந்து வருகிறேன். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மதியம் 12 மணிக்கு, அப்பா என்னோடு பேசினார். பரமக்குடியில் அஞ்சு முக்கு ரோட்டில் போலிஸ் துப்பாக்கியால் சுட்டு, நினைவிடத்திற்கு செல்லவிடாமல் விரட்டியடிக்கின்றார்கள் என்றும், என்னை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சொன்னார். அதற்குப் பிறகு, மதியம் 2 மணிக்கு நான் அப்பாவை மதிய உணவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைத்து, அவருக்கு போன் செய்தேன். அப்போது அவரது போன் "ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் மறுபடியும் அழைத்துப் பார்த்தேன். "லைன்' கிடைக்கவில்லை. மாலை 7 மணிக்கு, என் அப்பா செல்போனிலிருந்து ஒருவர் என்னிடம் பேசினார். என்னைப் பற்றி விவரம் கேட்டார். நான் அங்குதான் திருமணம் செய்துள்ளதாகக் கூறினேன். அப்போது ராமநாதபுரம் மருத்துவமனையில், என் அப்பாவை வைத்துள்ளதாகச் சொல்லிவிட்டு, மீண்டும் "ஸ்விட்ச் ஆப்' செய்துவிட்டார். பேசியது யார் என்றுகூட எங்களுக்கு அவர் சொல்லவில்லை. ராமநாதபுரம் மருத்துவமனையில் போஸ்ட் மார்டம் முடித்து, எனது தகப்பனார் உடல் இருந்தது. நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பின்புறத் தலை வெடித்துச் சிதறிக் கிடந்தது. உடலை வாங்கி வந்து புதைத்தோம். "போலிஸ் ரெய்ட்' என்று சொல்லி ஒரே பதற்றமாக இருக்கிறது. மக்கள் எல்லோரும் காடுகரைகளில் ஓடிப் பதுங்குகிறார்கள்.''
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஜெயபாலின் (வயது 20, மஞ்சூர்) தந்தை பாண்டி அளித்த வாக்குமூலம் :
"எனது மகன் ஜெயபாலைத்தான், போலிஸ் முதலில் சுட்டுக் கொன்றுள்ளது. எந்த வம்பு தும்புக்கும் அவன் போனதில்லை. சுட்டுக் கொன்று, கால்களை இருவர் பிடித்துக் கொண்டு, இடுப்பில் கட்டையை கொடுத்து இரண்டு போலிஸ்காரர்கள் தூக்கி வருவதை டி.வி.யில் தான் முதலில் பார்த்தேன். அவன் போட்டிருந்த சிவப்புச் சட்டையை பார்த்தவுடன் அது எனது மகன்தான் என்பதை உறுதி செய்து கொண்டேன். ராமநாதபுரத்திற்கு 10 ஆம் தேதி காலையில் சென்று, அரசு மருத்துவமனையில் இருந்த எனது மகன் உடலைப் பார்த்தேன். வலது பக்க மார்பில் துப்பாக்கிக் குண்டு துளைத்து, இடது பக்கமாக வெளிவந்தது. இடது பக்க முதுகிலும் துப்பாக்கிச் சூடு இருந்தது. குண்டு பாய்ந்த இடத்தை நான் தொட்டுப் பார்த்தபோது, சதை பிய்ந்து வெளியே வந்தது. வலது தொடையில், துப்பாக்கியின் பின் புற கட்டையால் அடித்து, சிதைத்திருந்தார்கள். எனது மகன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டை கழட்டிப் பார்த்தேன். தொடை வெள்ளரிப் பழம் பிளந்தது போல் மூன்று பாளமாகப் பிளந்து கிடந்தது. வெள்ளைக் கறி வெளியில் தெரியும்படி உடலைச் சிதைத்திருந்தார்கள். எனது மகனை அடித்துக் கொன்று, பின்னர் துப்பாக்கியால் சுட்டார்களா அல்லது சுட்டுக் கொன்ற பின்னர், உடலை அடித்துச் சிதைத்தார்களா என்று தெரியவில்லை. உடலை வாங்கிக் கொண்டு வந்து புதைத்துள்ளோம். இன்னமும் போலிஸ் விரட்டுகிறது. நான் பையனைப் பறிகொடுத்துவிட்டு, போலிசுக்குப் பயந்து ஓடுகிறேன். நிம்மதியாக வாழ முடியவில்லை.''
காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட வெள்ளைச்சாமி (வயது 54, காக்கனேந்தல்) என்பவரின் அண்ணன் மனைவி மங்களேஸ்வரி அளித்த வாக்குமூலம் :
"அவர் (வெள்ளைச்சாமி) குருபூசைக்குச் செல்வதற்காக பரமக்குடிக்குப் போகவில்லை. எங்கள் உறவினர் திருமணத்திற்காக மதுரைக்குப் போகத்தான் பரமக்குடி வந்தார். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மாலை 4.30 மணி இருக்கும். பரமக்குடி வந்து எனக்கு போன் பண்ணினார். பரமக்குடி வந்திருப்பதாகவும், திருமணத்திற்கு வரும்படியும் என்னிடம் சொன்னார். நான், சமையல் வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன்; அதுவரை பரமக்குடியிலேயே இருக்கும்படி சொன்னேன். மீண்டும், வெள்ளைச்சாமி போன் பண்ணி, பரமக்குடியில் இரண்டு பேரை போலிஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டனர் என்று சொன்னார். நான் பதில் சொல்லுவதற்குள் போன் "கட்' ஆகிவிட்டது. அதற்குப் பிறகு வெள்ளைச்சாமியிடமிருந்து போன் வரவில்லை. நானும் அவரது போனுக்கு போன் பண்ணினேன். "ஸ்விட்ச் ஆப்' ஆகிவிட்டது. பிறகு என்ன நடந்ததோ என்பதை அறிந்து கொள்ள, நான் பரமக்குடி அஞ்சு முக்கு ரோட்டுப் பக்கம் போனேன். அப்போது 7 மணி இருக்கும். போலிஸ்காரர் ஒருவர், சிமெண்ட் பைப்பை எடுத்து வைத்துக் கொண்டு ரோட்டில் நின்று கொண்டிருந்த காரை, அடித்து நொறுக்குவதைப் பார்த்தேன். இன்னும் சில போலிசார், அந்த வழியாக வந்த பையனை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து விரட்டினர். அந்த பையன் அவர்களிடம் சிக்கிக் கொண்டான்.
"அப்போது, துப்பாக்கிக் குண்டு நெற்றியில் சொருகியிருந்த ஒருவர், பதற்றமாக அந்தப் பக்கம் ஓடிவந்தார். நான் ரயில்வே கேட் தாண்டி நின்று கொண்டிருந்தேன். என்னிடம் வந்து, அவர் நெற்றியில் சொருகி நின்று கொண்டிருந்த குண்டை எடுத்துவிடும்படி சொன்னார். நான் உருவி எடுத்தேன். அது ரப்பர் குண்டு போலிருந்தது. பின்னர் அவர் ஓடிவிட்டார். நானும் வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்போதும், அஞ்சு முக்கு ரோட்டுப் பகுதியில் போலிசார் துப்பாக்கியை ஏந்தியபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். ரயில்வே கேட் அருகே உள்ள மொட்டை மாடிகளில் ஏறி, போலிசார் துப்பாக்கியால் சுடுவதைப் பார்த்தேன். இரவு 12 மணிக்கு, இளையாங்குடி அரசு பொது மருத்துவமனையில் வெள்ளைச்சாமி இருப்பதாக தகவல் வந்தது. பிறகு மதுரையில் இருப்பதாகச் சொன்னார்கள். பிறகுதான் சக்திவேல் போய் மதுரையில் பார்த்தான்.''
வெள்ளைச்சாமியின் மகன் சக்திவேல் (30) அளித்த வாக்குமூலம் :
"நாங்கள் 12 ஆம் தேதி காலையில், மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் எனது தகப்பனாரின் இறந்த உடலைப் பார்த்தேன். பின்னந்தலையில் பலத்த காயம். தலைக்கு கீழே ரத்தம் திரண்டு கிடந்தது. இடது கை நசுக்கி, ஒடிக்கப்பட்டுக் கிடந்தது. உடம்பு முழுவதும் தடியால் அடிக்கப்பட்ட தடம் இருந்தது. உடம்பை நசுக்கினால் எப்படி இருக்குமோ அப்படி கிடந்தது. உடம்பில் துணியில்லாமல் எங்களுக்கு காட்டினார்கள். பல பேர் சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள். பிறகு, உடலை வாங்கிக் கொண்டு வந்து புதைத்தோம்.''
முத்துக்குமாரின் மாமியார் லட்சுமி அளித்த வாக்குமூலம் :
"எனது பெயர் லட்சுமி. எனது மகள் பாண்டீஸ்வரியை முத்துக்குமார் திருமணம் செய்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, இரவு 10 மணிக்கு, முத்துக்குமார் உடல் இளையாங்குடி மருத்துவமனையில் உள்ளதாகவும், உடனே வந்து உடலை வாங்கிக் கொள்ளும்படியும் போனில் செõன்னார்கள். உடனே அங்கு ஒடினோம். அங்கு போய்ப் பார்த்தால் மதுரைக்கு கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள். இரவோடு இரவாக மதுரைக்கு வந்தோம். மறுநாள் காலையில் தான் உடலைப் பார்த்தோம். வலது விலாவில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, இடதுபுறம் வழியாக வெளியே வந்துள்ளது. கை கால்கள் ரப்பரைப் போல் கிடந்தன. எலும்புகளை அடித்து நொறுக்கியிருந்தார்கள். வாய் வழியே ரத்தம் வெளியேறிக் கிடந்தது. மதுரையிலிருந்து உடலை வாங்கிக் கொண்டு வந்து புதைத்தோம்.''
மதுரை மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், பலர் வாக்குமூலங்கள் அளித்தனர்.
வி. பாண்டி, த/பெ. வீரபத்திரன் (வயது 34) அளித்த வாக்குமூலம் :
"நான் மரக்கடையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. சம்பவம் நடந்த அன்று, நான் குருபூசைக்கு பரமக்குடிக்குச் சென்றேன். எனது சொந்த ஊர் பரமக்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மருந்தூர். 11.9.2011 அன்று காலை 11 மணிக்கு, அஞ்சு முக்கு ரோட்டில் சிலர் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். ஜான் பாண்டியனை விடுதலை செய்யச் சொல்லி கோசம் எழுப்பினர். அப்போது அந்த இடத்தில் பத்து நூறு பேர் இருந்தார்கள். அப்போது 2000 போலிசுக்கு மேல் அங்கு இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் போலிஸ். 12 மணிக்கெல்லாம் போலிசார் திடீரென தடியடி நடத்தினர். அதனால் எல்லோரும் கலைந்து ஓடினார்கள். நானும், என்னோடு சேர்ந்து கொஞ்சம் பேரும் ஒரு வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டோம்.
ரோட்டில் கல் வீசும் சத்தமும், துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. இரண்டு மணி வரை நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக, மெல்ல வீட்டை விட்டு வெளியேறினர். எனக்கு பயமாக இருந்ததால் நான் வெளியே வரவில்லை. கடைசியில் எல்லோரும் போய்விட்டனர். நான் ஒருவன் மட்டுமே இருந்ததால், மாலை 4.30 மணிக்கு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்து வீட்டைவிட்டு வெளியே வந்தேன். வந்தவுடன் போலிசார் என்னைப் பார்த்து விட்டனர். விரட்டி வந்து, என்னைச் சுற்றி நின்று கொண்டு 15 போலிசார் என் மீது தடியடி நடத்தினர். தலையில் அடித்ததால் ரத்தம் ஒழுகி மயக்க நிலையில் கீழே விழுந்தேன். ஆனாலும் அவர்கள் விடவில்லை. சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிக் கொண்டே அடித்து நொறுக்கினர்.
துப்பாக்கியின் கைப்பிடிக் கட்டையைக் கொண்டு அடித்து, இடது கால் எலும்பை அடித்து நொறுக்கினார்கள். நான் மயக்கமாகி கீழே விழுந்த பிறகும், சிலர் அடித்துக் கொண்டே இருக்க, இரு போலிசார் எனது கால்களைப் பிடித்துத் தரையில் கிடந்த என்னை தரதரவென இழுத்துச் சென்றனர். அதனால் உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டது. வலது கை விரல்களின் எலும்புகள் நொறுங்கி விட்டன. இழுத்துக் கொண்டு வந்து அஞ்சுமுக்கு சாலையில் போட்டனர். ஏற்கனவே எனக்கு முன்னர் பலர், அங்கே கிடந்தனர். 4.30 மணி இருக்கும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினர். ஏற முடியாதவர்களை அடித்தனர். சிலரை தூக்கி வீசினர். பின்னர் 5 மணிக்கு பரமக்குடி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்புறம், மதுரை அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். இங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. எலும்புகள் நொறுங்கி விட்டன என்று மருத்துவர் சொன்னார். போலிஸ் வாகனம் எதையும் நான் தீ வைக்கவில்லை. கற்கள் வீசவில்லை. கலவரம் என்று தெரிந்ததும், வீட்டிற்குள்ளேயே பதுங்கிக் கிடந்த என்னை அடித்து நொறுக்கியது ஏன்?''
தனிக்கொடி, த/பெ. முத்துக்கருப்பன், எஸ். காவூர் (வயது 35) போர்வெல் மிஷின் உரிமையாளர் அளித்த வாக்குமூலம் :
"பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, தியாகி இம்மானுவேல் சேகரனின் குருபூசை நடந்தது. நான் பரமக்குடி வசந்தபுரத்தில் ஆழ்துளை கிணறுக்கு பைப் பதிக்க வேண்டியிருந்ததால், அங்கு போயிருந்தேன். வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, அஞ்சு முக்கு சாலையில் போலிசார் தடியடி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது மணி 12 இருக்கும். என்னைப் பார்த்ததும் 15 போலிசார் சுற்றி நின்று கொண்டு சரமாரியாக அடித்தனர். முதல் அடியே தலையில்தான் விழுந்தது. மண்டை உடைந்து, ஏராளமான ரத்தம் வெளியேறியது. ஆனாலும் தலையிலேயே அடித்தார்கள். நான் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை, சிவப்புச் சட்டைபோல் ஆகியது. ரத்தம் ஏராளமாக வெளியேறியதால், நான் அரை மயக்கத்திற்குப் போய்விட்டேன்.
கீழே விழுந்து கிடந்த என்னை இடது காலைப் பிடித்து, தரையில் தேய்த்தபடி தரதரவென இழுத்துச் சென்றனர். அஞ்சு முனைச் சந்திப்பில் ஏற்கனவே பத்து, இருபது பேர் அடிபட்டு குற்றுயிராகக் கிடந்தனர். ஒருவர் மேல் ஒருவரை தூக்கி வீசியிருந்தார்கள். என்னையும் அந்த மனிதக் குவியல் மீது போலிசார் தூக்கி வீசினார்கள். மதியம் 2 மணிக்குப் பரமக்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்கள். அங்கேயே இரவு 10.30 மணி வரை வைத்திருந்தார்கள். பலத்த காயங்களுடன் நாங்கள் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்திலேயே கிடந்தோம். 10.30 மணிக்கு வேனில் ஏற்றினார்கள். ராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே புதன் வரை இருந்தேன். வியாழக் கிழமை (15.9.2011) தான் மதுரைக்கு கொண்டு வந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார்கள். தலையில் இரண்டு இடங்களில் தடியடிபட்டு மண்டை உடைந்து, தையல் போட்டுள்ளனர். வலது கையில் எலும்பு உடைந்துள்ளது.''
சிவா (வயது 19) த/பெ. ரவிச்சந்திரன் (உடைச்சியார் வலசை) அளித்த வாக்குமூலம் :
"நான், தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூசை நாளன்று, வேடிக்கை பார்ப்பதற்காக பரமக்குடி போயிருந்தேன். நான் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். 12 மணி வாக்கில், போலிஸ்காரர்கள் திடீரென "லத்தி சார்ஜ்' செய்தார்கள். எல்லோரும் சிதறி ஓடினார்கள். "லத்தி சார்ஜ்' நடப்பதற்கு முன்பு யாரும் கல்லெறியவோ, போலிசை தாக்கவோ இல்லை. "லத்தி சார்ஜ்' நடந்தவுடன் எல்லோரும் சிதறி ஓடினார்கள். நானும் ஓடினேன். நாங்கள் சிதறி ஓடும்போதே போலிஸ் துப்பாக்கியால் சுட்டது. எனது வலது காலின் பின் பகுதியில், முட்டுக்கு மேலே, துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னரும், தப்பித்து ஓடினேன். போலிஸ் பொன்னையாபுரம் வரை விரட்டி வந்தனர். தொலைவில் நின்று பார்த்தபோது, வஜ்ரா வண்டியும், தீயணைப்பு வண்டியும் அஞ்சு முக்கு ரோட்டில் வந்து நின்றது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அது தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. வண்டி தீ பிடிக்கும்போது, ரோட்டில் போலிஸ்காரர்கள் மட்டுமே நின்று கொண்டு, துப்பாக்கியால் நாலாபுறமும் சுட்டுக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு நடந்தபோது, தலையில் யாரெல்லாம் சிவப்பு பச்சை துண்டு கட்டியிருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் குறிவைத்துச் சுட்டது போலிஸ்.''
ராஜ்குமார், வயது 22, த/பெ. தவமணி (மணிநகர், பரமக்குடி) அளித்த வாக்குமூலம் :
"நான் சென்னையில் "எல் அண்டு டி' கம்பெனியில், சிமெண்ட், மணல் லேபில் வேலை பார்த்து வருகிறேன். போன ஞாயிற்றுக்கிழமையன்று (11.9.2011) காலை, சென்னையிலிருந்து பரமக்குடி வந்து சேர்ந்தேன். நான் வரும்போது நேரம் 12.30 இருக்கும். மக்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். போலிஸ் அவர்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தார்கள். என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. அஞ்சு முக்கு ரோட்டிலிருந்து பலர் நான் நின்று கொண்டிருந்த பக்கம் ஓடி வந்தார்கள். அவர்களை விரட்டி வந்த போலிசார் என்னைப் பார்த்ததும், என் பக்கம் திரும்பி ஓடிவந்தனர். நான் பயந்து ஓடவில்லை. அருகில் வந்தவுடன் என்ன ஏது என்றுகூட கேட்கவில்லை. சரமாரியாக அடித்தனர்.
ஒரு போலிஸ், துப்பாக்கியின் பின்புறக் கட்டையைக் கொண்டு எனது பின்னந்தலையில் அடித்தான். ரத்தம் கொட்டி, சட்டையெல்லாம் நனைந்தது. என் கையிலிருந்த பையைப் பிடுங்கிக் கொண்டார்கள். அதில் ரூ. 5000 பணமும், ஆடைகளும் இருந்தன. எனது செல்போனைப் பிடுங்கிக் கொண்டார்கள். உங்களுக்கெல்லாம் குருபூசையா என்று சொல்லி, சாதிப் பெயரைச் சொல்லி அடித்தனர். உடம்பெல்லாம் தடியால் அடித்ததில் ரத்தக் காயம் ஏற்பட்டது. வலது கணுக்காலின் மேல் பகுதியில், துப்பாக்கிக் கட்டையைக் கொண்டு அடித்ததில், எலும்பு முறிந்தது. வேண்டாம் என்று சொல்லித் தடுத்ததில், வலது ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதி உடைந்து தொங்கியது. காலில் எலும்பு முறிந்ததால் என்னால் நடக்க முடியவில்லை. தரையில் தேய்த்துக் கொண்டே இழுத்து வந்தனர். வரும்போதே அடி. பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்தனர். அப்படியே இழுத்துக் கொண்டு வந்து, அஞ்சு முக்கு ரோட்டில் போட்டனர். தரையில் உரசியதால், உடம்பெல்லாம் ஒரே ரத்த காயம்.''
செந்தில்குமார் (வயது 30) த/பெ. நாகு (வெங்காலூர்) அளித்த வாக்குமூலம் :
"சம்பவம் நடந்த அன்று, பரமக்குடிக்கு வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றேன். அஞ்சு முக்கு ரோட்டில் நூறுக்கும் குறைவானவர்கள் சாலையில் நின்று கொண்டும், சிலர் அங்குமிங்கும் உட்கார்ந்து கொண்டும் ஜான் பாண்டியனை விடுதலை செய்யச் சொல்லி கோஷம் எழுப்பினர். சிலர் விசிலடித்தனர். அங்கு ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்களைவிட போலிஸ் அதிகமாக இருந்தது. செந்தில்வேலன் எஸ்.பி. எல்லாவற்றையும் படம் எடுக்கச் சொல்லி, ஒருவர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். 12 மணி இருக்கும். திடீரென "லத்தி சார்ஜ்' செய்தனர் போலிசார். எல்லோரும் சிதறி ஓடினர். என்னை விரட்டி வந்து பிடித்து, சுற்றிலும் நின்று கொண்டு போலிஸ்காரர்கள் கால், கைகளில் அடித்தார்கள். இடது கையில் பலமான அடி விழுந்ததும் எலும்பு நொறுங்கியது. தலையின் பின்புறத்தில் துப்பாக்கிக் கைப்பிடி கட்டையால் இடித்துத் தள்ளினர். அப்போதே போலிசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சிதறி ஓடியவர்கள் மீது கற்களைக் கொண்டு எறிந்தனர். பதிலுக்கு போலிசும் கற்களைக் கொண்டு எறிந்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர் உடலை, போலிஸ் ஜீப்பில் ஏற்றியதைப் பார்த்தேன். அந்த ஜீப்பில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இன்னொரு உடலும் இருந்தது. எத்தனை பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அரை மயக்கத்தில் கிடந்தேன். துப்பாக்கிச் சூடு நடத்தும்போது, பல போலிஸ்காரர்கள் கைலி, துண்டு சட்டை போட்டிருந்ததையும், அவர்கள் துப்பாக்கியால் சுடுவதையும் பார்த்தேன். இரவு7 மணிக்குதான் என்னை இளையாங்குடி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். எலும்புகள் பல இடங்களில் நொறுங்கியுள்ளதால், இளையாங்குடியிலிருந்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.''
சிங்கத்துரை (வயது 32) த/பெ. முத்து (பரமக்குடி, பர்மா காலனி) அளித்த வாக்குமூலம் :
"தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று பரமக்குடி அஞ்சு முக்கு சந்திப்பில், மாலை 4 மணி இருக்கும், 30 போலிசாரிடம் நான் சிக்கிக் கொண்டேன். காலையிலிருந்தே பதற்றமாகத்தான் இருந்தது. போலிஸ் வேண்டுமென்றே கெடுபிடி செய்தனர். நடு மதியம் தொடங்கிய துப்பாக்கிச் சூடு, நான்கு மணி வரையிலும் கேட்டுக் கொண்டிருந்தது. பரமக்குடி அஞ்சு முக்குச் சாலையில் மட்டுமல்ல பரமக்குடி முழுவதிலும், போலிஸ் கண்ணில் பட்ட எல்லோரையும் அடித்துச் சித்ரவதை செய்தது. சாதிப் பெயரைச் சொல்லிக் கொண்டே அடித்தனர். முதுகு முழுவதும் லத்தியால் அடித்துத் தள்ளினர். துப்பாக்கிக் கட்டையின் பின்புறத்தைக் கொண்டு, முகத்தில் இடித்தனர். வலது கை பெருவிரல் எலும்பு முறிந்துள்ளது. என்னை போலிசார் அடித்தபோது, அந்தக் கூட்டத்தில் பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரும் இருந்தார். வலது கால் கணுக்கால் பகுதி எலும்பு முறிந்து விட்டது. ஒரு போலிஸ், கிட்னி இருக்கும் பகுதியில், துப்பாக்கிக் கட்டையைக் கொண்டு வேகமாக இடித்தார். இதனால் கிட்னி பெரும் பாதிப்படைந்தது. சிறுநீர் ரத்தம் கலந்து வந்தது. 5 மணி இருக்கும், அஞ்சு முக்குச் சாலை சந்திப்பில், என்னைப் போலவே அடிபட்ட பதினைந்து பேர்களை வண்டியில் ஏறும்படி கெட்ட வார்த்தைகளால் பேசியபடி அடித்துக் கொண்டே வேனில் ஏற்றினர். ஏற முடியாதவர்களை, கை கால்களைப் பிடித்துத் தூக்கி, வண்டிக்குள் வீசினார்கள். அங்கிருந்து, இளையாங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். பின்பு சிவகங்கை கொண்டு சென்று, கடைசியில்தான் மதுரை கொண்டு வந்தனர்.''
எம். மாணிக்கம் (வயது 47) த/பெ. மெய்யன் (பரமக்குடி, ராஜுநகர்) அளித்த வாக்குமூலம் :
" நான் தினமும் காலையிலேயே பரமக்குடி டவுனுக்கு செல்வது வழக்கம். சம்பவம் நடந்த அன்று, அஞ்சுமுக்கு ரோட்டில் கும்பல் கூடியிருந்தது. கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் போலிசாருக்கும் வாக்குவாதம் நடந்தது. ஜே.பி.யை விடுதலை செய்யச் சொல்லி கோசம் போட்டனர். நான் ஓரத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, போலிஸ் தடியால் அடித்து விரட்டினர். கூட்டமாக இருந்தவர்கள் சிதறி ஓடினர். நானும் ஓடினேன். அடுத்த நொடி, எனக்குப் போலிசார் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அப்போது மணி 12.30 இருக்கும். இன்னும் கொஞ்ச தூரம் ஓடி, நின்றேன். எனக்கும் போலிசார் நின்று கொண்டிருந்த இடத்திற்கும் கொஞ்ச தொலைவுதான் இருந்தது. ஓரமாகத்தான் நின்று கொண்டிருந்தேன். திடீரென நான் இருந்த பக்கம் திரும்பி, ஒரு போலிஸ் சுட ஆரம்பித்தார். குண்டு வந்து என் நெற்றியில் பாய்ந்தது. உள்ளே போகவில்லை. நெற்றியிலேயே நின்று விட்டது. அப்படியே மயங்கி விழுந்து விட்டேன். பக்கத்திலிருந்தவர்கள், தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார்கள். பரமக்குடி மருத்துவமனையிலிருந்து உடனே மதுரைக்கு கொண்டு வந்தனர். அன்று இரவே குண்டை வெளியே எடுத்தனர். போலிசார் திட்டம் போட்டுத்தான் செய்தனர். இனிமேல் இம்மானுவேல் சேகரன் குருபூசையை நடத்தவிடக் கூடாது என்பதுதான் அவர்கள் திட்டம்

பரமக்குடி சம்பவம். உண்மை அறியும் குழு அறிக்கை

பரமக்குடி சம்பவம் தொடர்பாக, மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமை கண்காணிப்பகம் என்று தொடர்ச்சியாக உண்மை அறியும் குழு அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வரும் சனியன்று, சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில் பரமக்குடி சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப் பட இருக்கிறது.  இந்த அறிக்கை புகைப்படங்களுடன் வண்ணத்தில் நூல் வடிவில் வெளியிடப் படுகிறது.  அந்த நூலை பழ.நெடுமாறன் வெளியிட, விடுதலை ராசேந்திரன் பெற்றுக் கொள்கிறார்.
parama_notice_6

சட்ட எரிப்பு நாள் சிந்தனை: முதுகுளத்தூர் கலவரமே சாதி எரிப்புப் போராட்டத்தின் பின்னணி

முதுகுளத்தூரில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்களுக்கு எதிராக நடடநத சாதிக் கலவரத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே தலைவர் பெரியார் தான். 1957 ஆம் ஆண்டு பெரியார் அறிவித்த சாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புக் கிளர்ச்சியே முதுகளத்தூரில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான கலவரத்தின் தொடர்ச்சியான தாக்கம்தான். இந்த வரலாற்று உண்மைகள் - இருட்டடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆதித் திராவிடத் தோழர்களுக்குஎன்று விடுதலையில் அப்போது வெளிவந்த தலையங்கம், இந்த உண்மையை தெளிவுபடுத்துகிறது. சாதி ஒழிப்பு சட்ட எரிப்பு நாள் நினைவாக அத் தலையங்கத்தின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்:
நூற்றுக்கணக்கான பெண்கள் சட்டத்தைக் கொளுத்தப் போவது உறுதி. முதுகுளத்தூர் கலவரத்திற்குப் பிறகு தமிழ் நாட்டிலுள்ள ஆதி திராவிடர்கள் அனைவரும் காமராசர் ஆட்சிக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளை நஞ்சாக வெறுத்து விட்டனர். நூற்றுக் கணக்கான ஆதி திராவிட உயிர்கள் பலி யாக்கப்பட்டிருப்பதையும், ஆயிரக் கணக்கான குடிசைகள் தீக்கிரையாக்கப் பட்டதை யும் சிறிதும் பொருட்படுத்தாதபடி ஐந்து உயர்சாதிக்காரர்களை போலீசு சுட்டுக் கொன்றது பற்றி கண்ணீர் வடிப்பதும், திரு. முத்துராமலிங்க தேவரை விடுதலை செய்ய வேண்டு மென்று கடையடைப்பு செய்யவும் இதற்காக சட்டசபையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதும், இதற்காக சட்டசபையை விட்டு வெளியேறுவதும் போன்ற நடத்தைகளால் அரசியல் எதிர்கட்சிகள் என்பவை ஆதி திராவிட சமுதாயத்திற்கு துரோகம் செய்து விட்டன. இந்த மன்னிக்க முடியாத குற்றத் திற்காக ஆதி திராவிட சமூகம் இந்த எதிர் கட்சிகள் மீது இன்று ஆத்திரப்பட்டு கொதிப் படைந்து இருக்கிறது.
நேற்று சென்னைக் கூட்டத்தில் பேசிய தலைவர் பெரியார் அவர்கள்கூட நான் சட்ட சபையில் இடம் பெற்றிருக்கக்கூடிய பொல்லாத வேளை ஏற்பட்டிருந்தால் ஏன் முன் கூட்டியே கலகக்காரர்களை சுட்டு வீழ்த்தியாவது ஆதி திராவிட உயிர்களையும், வீடுகளையும் காப் பாற்றியிருக்கக் கூடாது?” என்று மந்திரிகளை நோக்கி கேட்டு இருப்பேன்என்று கூறினார். எனவே சாதி வெறிக்குச் சிறிதுகூட இடமளிக்கக் கூடாது என்பதில் திராவிடர் கழகத்தைப் போன்ற தீவிர லட்சியங்கொண்ட கட்சியே இந்நாட்டி லில்லை.
இன்று அரசியல் சட்டத்தைக் கொளுத்து கிறோம் என்றால், எதற்காக? அதில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்காகத்தான். சாதி உள்ள வரையில் தீண்டாமை ஒழியுமா? ஒழிந்திருக்கிறதா? அரசியல் சட்டத்திலுள்ள தீண்டாமை ஒழிப்பு விதிகூட, டாக்டர் அம்பேத்கார் அவர்களைத் திருப்தி படுத்து வதற்காகவே தவிர, உண்மையான நோக்கத்துடனல்ல. இதை உணர்ந்துதான் டாக்டர் அம்பேத்கார் அவர்கள்கூட, “இந்த அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டும். நானே இதை கொளுத்தப் போகிறேன்என்று ராஜாங்க சபையில் 3.9.1953-லேயே கூறினார். அதன் பிறகு இரண்டாண்டு கழித்துத்தான் சுமார் மூன்று லட்சம் ஆதித் திராவிடரை பவுத்த நெறியில் சேர்த்து விட்டுத் தாமும் அதைத் தழுவினார். இதன் விளைவாகத்தான் அவரைத் தந்திரமாகக் கொலை செய்தார்கள் இந்துமத வெறியர்கள். ஆகவே, அரசியல் சட்டம் ஆதித் திராவிடரின் தீண்டாமையொழிப்புக்குக்கூடப் பயன்பட வில்லை என்பதற்கு டாக்டர் அம்கேத்காரை விடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறென்ன வேண்டும் என்று கேட்கிறோம்.
விடுதலைதலையங்கம் 11.11.1957
சட்ட எரிப்பு: தஞ்சை மாநாட்டுத் தீர்மானம்
1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் பெரியார் இயக்கம் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிட்டு எரிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டத்தை நடத்தியது. இதற்கான போராட்ட அறிவிப்புக்காக 3.11.1957 அன்று பெரியார் தஞ்சையில் சிறப்பு மாநாட்டைக் கூட்டி போராட்டத்தை அறிவித்தார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது:
அரசியல் சட்டத்தில் கண்டுள்ள மதப் பாதுகாப்பு, மத உரிமை என்பதில் இந்துமதம் என்பதை எடுத்துக் கொணடால், அது வர்ணாசிரமதர்மம் என்கிற பிறவியில் மக்களை சாதிகளாகப் பிரித்து, அவரவர் களுக்குத் தொழிலையும் கற்பித்து, ஒரு பிறவி உயர்ந்தது, முதன்மையானது. மற்றொரு பிறவி தாழ்ந்தது, இழி வானது என்பதான கருத்துகளை அமைத்து, அந்த அமைப்பைக் காப்பதுதான், மத, சுதந்தரம் என்பதாக சாஸ்திரங்களிலும் மற்றும் மத ஆதாரங்களிலும் கூறுவதைக் கொள்கையாகவும், நம்பிக்கையாக வும் கொள்வதை உரிமையாக்குவதாக ஆகிறது. இந்த உரிமையானது இந்நாட்டு, இந்துப் பொதுமக்களில் 100-க்கு 3 பேர் களை மேல்சாதி, உயர்ந்த பிறவி, உடல் உழைப் பில்லாமல் இருந்து கொண்டு மற்றவர்கள் உழைப்பில் சுகவாசிகளாக வாழ்வதென்றும், 100-க்கு 97 பேர்களான மக்களைக் கீழ்சாதி இழிமக்கள் என்றும் உடலுழைப்பு வேலை செய்து கொண்டு அடிமையாய், பாட்டாளி யாய், வாழ வேண்டியவர்கள் என்றும், பின் சொல்லப் பட்ட மக்கள் கல்வியறிவுக்கும், நீதி, நிர்வாக உத்யோகங்கள் பதவிகளுக்கும் தகுதியற்றவர் களென்றும் ஆக்குவதாக இருப்பதால், இந்த மதக் காப்பாற்று உரிமை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டு மென்பதும் அவசியமென்று இம்மாநாடு கருதுகிறது.
இந்தக் காரியங்கள் சாதாரணமான தன்மையில் மாற்றப்படாவிட்டால் எந்தவிதமான முறையைக் கையாண்டாவது மாற்றித் தரும்படி செய்ய வேண்டி யது பொது மக்களின் இன்றியமையாத கடமை யென்று இம்மாநாடு கருதுகிறது. மற்றும் இந்த அரசியல் சட்டமானது பொது ஜனவோட்டு உரிமையில்லாமலும் சரியான தேர்தல் முறையில்லாமலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளப் பட்டவர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையினால் வகுக்கப்பட்ட சட்டமாதலாலும்.
இந்தச் சட்டத்தைத் தயாரித்த ஆறு பேர்களில் பெரும்பான்மையானவர் பார்ப்பனர் ஆதலாலும், பார்ப்பனர் முஸ்லீம் பஞ்சமர் ஆகியவர்களைத் தவிர்த்த பொது ஜனத் தொகையில் 100-க்கும் 75 பேர் களாயுள்ள சூத்திரர்என்று ஆக்கப்பட்டிருக்கின்ற பெருங்குடி மக்களுக்கு பிரதிநிதித்துவமில்லாத ஒரு சட்டம் செய்யும் குழுவைக் கொண்டு இச்சட்டம் வகுக்கப்பட்டிருப்பதாலும்,
இந்த சட்டமானது நான்காம் சாதிஎன்று கூறப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தத் தக்கதாக ஆகாது என்று இம்மாநாடு கருது கிறது. இப்படிப்பட்ட காரணங்களால் இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, சாதி, மதம் ஆகியவை காரணமாக, நீதி, சமத்துவம், சகோதரத் துவம், சுதந்திரம் ஆகியவை அளிக்கப்படாததா யிருப்பதால், இவைகளை முன்னிட்டு இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடானது என்று கருதுவதால், இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக, 1949 நவம்பர் 26-ந் தேதி என்ற அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து இந்த நவம்பர் மாதம் 26-ந் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பன ரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறது.
விடுதலை’ -5.11.1957

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியா?- ஜான்பாண்டியன்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியா என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஒன்றியம் பெரும்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தமமுக கழக கொடியேற்று விழா நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் ஜான் பாண்டியன் சங்கரன்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது,

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகியும் இதுவரை காவல் துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வரை சந்தித்து உண்மை நிலவரத்தை தெரிவிப்பதற்கு பலமுறை அனுமதி கேட்டும் முதல்வர் சந்திக்க அனுமதி தரவில்லை. இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல அனுமதி கேட்டும் வழங்க மறுத்து வருகிறார்கள்.

நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல. எங்களுக்கும் யாரும் எதிரிகள் இல்லை. சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியா என்பது குறித்து எங்கள் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

சனி, 26 நவம்பர், 2011

குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா?










































குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா?



இயக்குநர் தோழர் சீமான் அண்மையில் போராளி இமானுவேல்சேகரன் நினைவிடத்துக்கு சென்றார். பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கும் சென்றார். அரசியலுக்குப் போய்விட்டால் எல்லோரையும் அனுசரித்தே ஆகவேண்டும். அனுசரித்துக்கொள்ளட்டும். தேவர் நினைவிடத்துக்கு சென்றதற்காக விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் திராவிடர்கழக மாநாட்டிலேயே தேவர் படத்தைத் திறந்துவைத்த தோழர் வீரமணியை முதலில் விமர்சிக்கவேண்டும். இந்த ஆண்டுவரை தேவரின் குருபூஜைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டு வரும் விடுதலை நாளேட்டை விமர்சிக்கவேண்டும். பெரியார் தி.க, ம.க.இ.க, ஆதித்தமிழர் பேரவை மற்றும் சில நக்சல்பாரி அமைப்புகள் தவிர அனைவரையும் விமர்சிக்க வேண்டும். நமது நோக்கம் அது அல்ல.

சீமான் மட்டுமல்ல. தோழர் திருமாவளவன், தோழர் தா.பாண்டியன், தோழர் வை.கோ போன்ற பல முக்கியத் தலைவர்களும் பசும்பொன் தேவரைப்பற்றியும், குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றியும் தவறான கருத்துக்களை கூறிஉள்ளனர். இந்தத் தலைவர்கள் அரசியலுக்காக செய்யும் சில மாற்று அணுகுமுறைகளை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றையே தவறாகச் சொல்வதும், ஒரு தத்துவத்தைக் கொச்சைப்படுத்துவதும், தமிழருக்கு வரலாற்றை உருவாக்கிய தலைவனை சிறுமைப்படுத்துவதையும் விமர்சித்தே ஆகவேண்டும்.

குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து பெரியார் என்ன செய்தார்? என அந்த மக்கள் கேட்கிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட தேவர்களுக்கு பெரியார் என்ன செய்தார் என ஒரு சராசரி மனிதன் கேட்டால் ஒரு உண்மையான பெரியார் தொண்டன் அடுத்த நொடியில் என்ன சொல்லியிருக்க வேண்டும்?

கள்ளர் மறவர் அகமுடையார்கள் அனைவரும் பார்ப்பனர்களின் தேவடியாள் மகன்கள் என இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கும் இந்து மதத்தை எதிர்த்து அந்த சூத்திரப்பரம்பரைச் சட்டமான இந்து லாவை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் தேவர் என்ன செய்தார்? என்று கேட்டிருக்க வேண்டும். அதன்பிறகு ஆதாரங்களைத் தேடிப்பிடித்து குற்றப்பரம்பரைச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா இல்லையா என்பதைச் சொல்லலாம்.

நான் திருடன், திருட்டுப்பரம்பரை என்பதை விட நான் தேவடியாள் பரம்பரை என்பதைத்தான் கேவலமாகக் கருதுவேன். சூத்திரப்பரம்பரை என இன்னும் இந்து மதத்தில் இருக்கிறதே அதை இன்னும் அனுமதித்துக்கொண்டு மானங்கெட்ட வாழ்வு வாழ்கிறேனே அதைத்தான் கேவலமாகக் கருதுகிறேன். மீசையை முறுக்கும் ஒவ்வொரு தமிழனும் இதைத்தான் கேவலமாகக் கருதுவான். எங்களைத் தேவடியாள் மகன்களாக வைத்திருக்கும் இந்து மதத்தை வெட்டிச்சாய்க்க இறுதிவரை போராடிய தலைவர் பெரியார். ஆயிரக்கணக்கான தோழர்களோடு இந்திய அரசியல் சட்டதையே கொளுத்தினார். எதற்காக? சட்டப்படி நாம் சூத்திரப்பரம்பரை என்பதை அழிப்பதற்காக. தமிழ்நாட்டில் கள்ளர், பள்ளர், மறவர், பறையர், வன்னியர், கவுண்டர் யாராகப் பிறந்தாலும் அவர்களுக்குத் தலைவன் முதலில் பெரியார். அப்புறம் யாரோ இருக்கட்டும். அவரை விமர்சிக்கும் முன்னர் வரலாறுகளைக் கொஞ்சம் படித்துப்பார்த்து விமர்சிக்க வேண்டும்.

குற்றப்பரம்பரை என்பதை இப்போது சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களே பெருமையாகத்தான் கருதிக்கொள்கிறார்களே தவிர. குறிப்பாக கள்ளர்கள் யாரும் குற்றப்பரம்பரை எனச் சொன்னதை கேவலமாக கருதவில்லை. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் தேவர்கள் மட்டுமல்ல குறவர்களும் தான் கைரேகை வைத்தார்கள் என்றால் நம்மோடு அவர்களைச் சேர்த்துப் பேசாதே என சண்டைக்கு வருபவர்கள்தான் அதிகம். அதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு மீசையை முறுக்கித் திரிபவர்கள் இருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குற்றப் பழங்குடியினர் சட்டம் ( Criminal Tribes Act )

கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக்கூட்டமாக இடம் விட்டு இடம் மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்துகொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத் திருந்தது. தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையர் மட்டுமே குற்றப்பரம்பரைச் சட்டப்படி கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று ஒரு தவறான கருத்து அனைத்து மட்டங்க ளிலும் உள்ளது. உண்மையில் தமிழ்நாட்டில் 89 சாதிகள் இப்பட்டியலில் இருந்தன.

அதில் குறவர், உப்புக்குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக்குறவர், சி.கே. குறவர், ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, வலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக்கவுண்டர், டொம்பர், கேப்மாரி, தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், தலையாரி, இஞ்சிக்குறவர் போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப்பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.

குற்றப்பரம்பரைப் பட்டியலில் உள்ள சாதிகளில் பிறந்த அனைத்து மக்களும் கைரேகை வைக்கப்படச் சொல்லி கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் அப்போதிருந்த மக்கள் தொகை முழுதும் சுமார் 2 கோடிப்பேர் தினமும் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும். அப்படியெல் லாம் எதுவும் நடக்கவில்லை.

மேற்கண்ட சாதிகளில் குறிப்பாக கள்ளர், மறவர், அகமுடையார்களிலும் விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.

அதேபோல கைரேகை வைக்கும் இடம் காவல்நிலையம் அல்ல. உள்ளுரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம்பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும் அதிலேயே கைரேகை வைக்கலாம். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச்சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப்பெரியவர் குழுவில் இந்த அடையாளச்சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச்சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச்சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாக காவல்நிலையத் தில் கைரேகை வைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.

சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியகுழுவின் பொறுப்பாளர் தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார் ஆவார்.

1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் தலைமையிலேயே கள்ளர்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கிராமங்களான ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. இப்படி கள்ளர்களை வைத்தே கள்ளர்களை அடக்கிய நுட்பத்தை ஆங்கிலேயருக்கு அறிவுறுத்தி செயல்படுத்தியவன் அப்போது மதுரை மாவட்ட துணைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஏ.கே. இராஜா என்ற பார்ப்பான்.

ஆகவே இச்சட்டம் தேவர்களுக்கு மட்டும் இருந்த சட்டமல்ல. தேவர்களிலும் அனைத்து மக்களுக்கும் பொருந்திய சட்டமல்ல. அனைத்து ஜாதிகளிலும் இருந்த உண்மையாகவே திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையில் ஈடுபட்ட மக்களைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட சட்டம். 1932 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பசும்பொன்தேவர் இப்படிப்பட்ட உண்மைக்குற்றவாளி களை ஒடுக்குவது தவறில்லை என்றே1 பேசியிருக்கிறார்.

போராட்டங்கள்

இச்சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுமைக்கும் பல்வேறு தலைவர்கள் போராடியிருக்கிறார்கள். எதிர்த்திருக்கிறார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். சரியாக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் பட்டியலில் கடைசியாக இடம்பெற வேண்டிய பெயர் தேவரின் பெயர் என்ற உண்மையை அறியலாம்.

தமிழ்நாட்டில் செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த ஜாதிகளை பட்டியலில் இருந்து விடுவித்தன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப்பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911 லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப்பகுதி ஈசநாட்டுக்கள்ளர்களை மீட்டிருக்கிறார். இந்தப் போராட்டங்களுக்கும் முத்துராமலிங்கத்தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்போது அவருக்கு வயது 3.



1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 கள்ளர்கள் வீரமரணம் அடைந்தனர். குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகமுக்கியப் போராட்டம் இதுதான். இந்தப் போராட்டத்திற்கும் முத்துராமலிங்கத்தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்கு அப்போது வயது 12. மதுரைக்கு அருகே பசுமலையில் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார்.

அதன்பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கேரளாவைச் சேர்ந்த வரும் மதுரையில் குடியிருந்தவருமான ஒரு வழக்கறிஞர், வைக்கம் போராட்டத்திற்கு பெரியாரை வரவழைத்த மலையாளியான ஜார்ஜ்ஜோசப். இவர்தான் முதன்முறையாக கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களைத் திரட்டி குறிப்பாக குற்றப்பரம்பரைச் சட்டத்திற் எதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தவர். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பு துரை’ என்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்றுவரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.

1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக்குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து,



...இந்தியா மந்திரி அவர்களே குற்றப்பரம்பரையினர் எனப்படுபவரின் கொடூரநிலையை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். குற்றப்பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக்கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகிறேன். ..



...இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நலன்களைப் பாதுகாக்கவும் அந்தச் சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தச்சட்டம் பத்தி 108 ன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பித்து, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன?...

...ஒருவர் ஆதிவாசியா அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன் அவர்களது நலனுக்குச் சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? கிரிமினல் இன மக்கள் சம்பந்தப்பட்ட சட்டம் அந்தக் குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது.

என விரிவாகப் பேசி இந்திய அரசின் சாதகமான பதிலையும் பெற்றார். இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாக குற்றப்பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப்பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. அதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்2.



இதற்கெல்லாம் பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் வருகிறார். 1933 செப்டம்பர் 25 ஆம் தேதி பசும்பொன் தேவரது சொந்த ஜாதியான அவர் பிறந்த உட்பிரிவான ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப் பழங்குடியினர் சட்டத்தில் இணைக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் தேவர் அச்சட்டத்தை எதிர்க்கத் தொடங்குகிறார். 1934 மே மாதம் 12 ஆம் தேதி கமுதி அருகே உள்ள அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவரும் பெரியாருடன் சேரன்மாதேவி குருகுலக் கிளர்ச்சியில் இணைந்து போராடியவருமான பி.வரதராஜூலு நாயுடு தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு 6 மாதத்திற்கு முன்பு பெரியார் இன்றைய ஆட்சிமுறை ஒழியவேண்டும் ஏன்? என்ற கட்டுரையை எழுதியதற்காக இராஜதுரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு இராஜமகேந்திரம் சிறையில் கடுங்காவல் தண்டணையில் இருந்தார். அவரை வரதராஜூலு நாயுடு நேரில் சந்தித்தார். அதன்பிறகு தான் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வருகிறார். ஆப்ப நாட்டு மறவர்களை இப்பட்டியலில் இருந்து நீக்கக்கோரி அரசைச் சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜீலு நாயுடு. உறுப்பினர்களாக நவநீதக்கிருஸ்ணத் தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ணத் தேவர், முத்துராமலிங்கத் தேவர். ஆகியோர் நியமிக்கப் பட்டனர். அப்போதைய அரசை சந்தித்து இக்குழு மனு ஒன்றை அளித்துள்ளது.



மிக முக்கியமாக தினகரன் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும் முதுகுளத்தூர் கலவரம் என்ற மிக முக்கிய வரலாற்றுப் பதிவை வெளியிட்ட தேவர் ஜாதியைச் சேர்ந்த தினகரனும் இக்கொடுஞ்சட்டத்தை எதிர்த்துப் போராடியுள்ளார்.



1934 இல் அபிராமத்தில் நடைபெற்ற மாநாட்டைத் தவிர குற்றப்பழங்குடி சட்டத்திற்கு எதிராக குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தப் போராட்டத் தையும் பசும்பொன் தேவர் நடத்தவில்லை. பல கூட்டங்களில் அதுபற்றிப் பேசியுள்ளார். இரண்டாம் உலகப்போர் நடந்த காலங்களில் 1945 வரை தேவர் ஆங்கிலேயே அரசால் கைதுசெய்யப்பட்டு சிறையிலேயே இருந்தார். 1945 செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை ஆனார். 1947 ஜூன் 5 ஆம் நாள் வெள்ளைக்காரன் இருக்கும் போதே குற்றப்பரம்பரைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அச்சட்டம் நீக்கப்படுவதற்கு முன்பு சுமார் 10 ஆண்டுகளாக முத்துராமலிங்கத்தேவர் உட்பட யாரும் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களையோ குறிப்பிடத்தகுந்த போராட்டங்களையோ நடத்தவில்லை. முத்துராமலிங்கத் தேவருக்குப் பிறகும் - தேவர் காங்கிரசோடு அனுசரித்து இச்சட்டம் பற்றி கவலைப்படாத போதும் பெரியார் உறுதியாக அச்சட்டத்தை கடைசிவரை எதிர்த்திருக்கிறார்.



திராவிடர் இயக்கத்தின் சாதனைகள்



1919 இல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையின் இந்திய அரசரின் செயலரான எட்வின் சாமுவேல் மாண்டேகு மற்றும் இந்திய கவர்னர் ஜென்ரல் பிரடிரிக் ஜான் நேப்பியரின் பேரனான செம்ஸ்போர்ட் ஆகியோர் இந்தியர்களுக்குப் படிப்படியாக அதிகாரங்களை வழங்க அது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்தனர். அப்போது நீதிக்கட்சி, திராவிட சங்கம் ஆகியவற்றின் சார்பாக டி.எம். நாயர், கே.வி.ரெட்டி. சர்.ஏ. இராமசாமி முதலியார் ஆகியோர் கருத்துருக்களை முன்வைத்தனர். அச்சமயத்தில் மறவர் மகாஜனசபை என்ற அமைப்பை உருவாக்கச்சொல்லி அதன் சார்பிலும் கருத்துருக்களை வைக்கச் செய்தவர் டி.எம். நாயர். இலண்டனில் மாண்டேகு - செம்ஸ்போர்டு குழுவை நேரில் சந்தித்து இறுதி வடிவான கருத்துருக்களை சமர்பிக்கச் சென்றபோது இலண்டனில் மருத்துவமனையில் மறைந்தார் டி.எம். நாயர். அதையடுத்து கே.வி. ரெட்டி அந்த கருத்துருக்களைச் சமர்பித்து அதன் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கடலூர் சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்சராகக் கொண்டு நீதிக்கட்சி ஆட்சி தொடங்கியது. அதன் பிறகு பனகல் அரசர் 1921 முதல் 1926 வரை முதல்வராக பணியாற்றினார்.



பெருங்காமநல்லூர் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசுதான் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அச்சட்டத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்தது.



கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு ஐ.சி.எஸ் அலுவலரை நியமித்தது. லேபர் கமிஷனர் என அப் பதவி இருந்தது. அந்த லேபர் கமிஷனர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழுவீச்சில் செயல்படுத்தியது.



கள்ளர்கள் விவசாயம் செய்ய இலவச நிலங்களை வழங்கியது.



கள்ளர்கள் தனியாக நிரந்தரத் தொழில் தொடங்க வங்கிக்கடனுதவி அளித்தது.



கள்ளர்களுக்கென்று இலவசக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து. அவற்றை நிர்வகிக்கவும் செய்தது.



இளைஞர்களுக்குத் தொழில்பயிற்சி அளித்து அவர்களை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியது.



மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, திருமங்கலம், தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளை உருவாக்கியது.



தஞ்சைமாவட்டத்தில் கள்ளர் மகாஜன சங்கத்தாலேயே கைவிடப்பட்ட கள்ளர் பள்ளிகளை அரசு ஏற்று நடத்தியது.



பெரியாறு அணைப் பாசனத்திட்டத்தில் கள்ளர்நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச்செய்தது.



1922 இல் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கள்ளர்கள் விவசாயத்திற் காக வாங்கிய கடனை கட்ட இயலாத நிலையில் அந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி அளித்திருந்த சென்ட்ரல் வங்கி சங்கங் களை கடுமையாக நெருக்கத் தொடங்கியது. அப்போது திக்கற்று இருந்த 34 கள்ளர் கூட்டுறவு சங்கங் களுக்கு மாகாண அரசே நிதிகொடுத்து சங்கங்களின் கடனை அடைத்து, அடுத்த கட்ட விவசாயத்திற் கும் கடனை அளித்தது3.



இப்படி கள்ளர்கள் வாழ்வில் ஒரு புரட்சியை உருவாக்கியது நீதிக்கட்சி அரசுதானே ஒழிய முத்துராமலிங்கத்தேவர் அல்ல. இந்த மாற்றங்கள் நடக்கும் போது தேவர் பொதுவாழ்வுக்கே வரவில்லை.



அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப்பழங்குடி சட்டப் பட்டியலிலிருந்து மீட்டதும் நீதிக்கட்சி அரசு தான். வரதராஜீலு நாயுடு தலைமையில் முத்துராமலிங்கத் தேவரும் இடம் பெற்றிருந்த குழு இந்த நீதிக்கட்சி அரசில்தான் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே அப்பிரிவு மக்களை அப்படியலில் இருந்து நீக்கியது பெரியாரின் நண்பரான பெரியாரின் ஆதரவு பெற்ற ஆட்சியின் தலைவரான பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையிலான நீதிக்கட்சி அரசுதான்.



இறுதியாக 1947 இல் ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த பெரியாரின் தொண்டரும், சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி. சுப்பராயன் தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்டமுன்வடிவை ஆளுநரிடம் சமர்பித்து அவரது ஒப்புதலுக்குப்பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இச்சட்டத்தை ஒழிந்தது.



ஆக குற்றப் பழங்குடியினர் சட்டத்தை ஒழிப்பதற்கும் அச்சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட கள்ளர்கள் உட்பட அனைத்து ஜாதி மக்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உழைத்தது பெரியாரின் தொண்டர்கள் தான். காங்கிரஸ் அரசானாலும், நீதிக்கட்சி அரசானாலும் அரசியல் வாதியாக இருந்தாலும் அரசுப்பதவியில் இருந்தாலும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து சரியான செயல் களைச் செய்தவர்கள் பெரியார் ஆதரவாளர்களே! பெரியார் தொண்டர்களே! திராவிடர் இயக்கத்தவர்களே!



பெரியாரும் குற்றப்பரம்பரைச்சட்டமும்



முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கர் என்னும் பார்ப்பான். மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர். கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டுப்ளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.



1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார். அவரை எதிர்த்து குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார். கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நீதிக்கட்சி உழைத்த உழைப்பை நினைவுகூர்ந்து நீதிக்கட்சிக்கு ஆதரவாக தேவர் செயல்பட்டிருந்தால் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்த்த போராளி என முழுமையாக அவரைப் பாராட்டியிருக்கலாம் பெரியார் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது,



. . . முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கமுமாகியவை ஏற்பட்டு சிறிது ஞான ஒளியும், சுதந்தர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டபறகு அரசியலில் கல்வி விஷயத்திலேயே முதல் முதல் மாறுதல் ஏற்படலாயிற்று. அதாவது 1920ம் வருஷத்துக்கு முன்பு கல்விக்காக சென்னை மாகாணத்தில் 1க்கு (1,40,00,000) ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி யென்னும் பார்ப்பனரல்லாதார் மந்திரி பதவி அடைய நேர்ந்து கல்வி இலாக்காவில் ஆதிக்கம் பெற்ற பறகு இன்று கல்வி இலாக்காவுக்கு வருஷம் 1க்கு (225,00,000) இரண்டு கோடியே இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கிவைத்து அதற்கேற்றாற் போல் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் சர்வ கலாசாலைகளை யும் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக அதிகப்படுத்த “சண்டாளர்கள்’’ “மிலேச்சர்கள்’’ “சூத்திரர்கள்’’ ஆகிய மக்கள் யாவரும் இலவசமாகவும் கட்டாயமாகவும் படிக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்படுத்தி அமுலுக்கும் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.



இதன் பயனாகவே ஒவ்வொரு வகுப்புக்கும் அதாவது ஈன ஜாதி, சண்டாள ஜாதி, பரம்பரை விவசார ஜாதி, பரம்பரை திருட்டு ஜாதி என்று சொல்லக்கூடிய மக்களுக்கெல்லாம் சுதந்தர உணர்ச்சியும் சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டு அநேக வகுப்பு சங்கங்களும் ஏற்பட்டு முற்போக்குக்கு உழைக்க முன் வரலாயின.

குடி அரசு 26.12.1937

என்றார். இந்தத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் தேர்தலில் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராஜாஜி பார்ப்பனர் முதல்வாரானார். அனைத்து அடக்குமுறைச்சட்டங்களையும் ஒழிப்பேன் என்ற சூளுரைத்தவர்கள் அந்த அடக்குமுறைச்சட்டங்களை முன்பைவிட மிகக்கடுமையாக மக்களிடம் செயல்படுத்தத் தொடங்கினர். தேவர் வேடிக்கை பார்த்தார்.

சட்டசபையில் ஒருமுறை திருமங்கலம், செக்கானூரணி பகுதிகளில் இன்னும் குற்றப்பரம்பரைச் சட்டம் நடைமுறையில் உள்ளது என தேவர் பேசியபோது, இராஜாஜி, செக்கானூரணி பகுதியில் இருந்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை எனத் திமிராகப் பேசினார். பதிலுக்கு தேவர் எதுவும் பேசவில்லை. அந்தக் காலத்தில் பெரியார் குற்றப்பரம்பரை உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்.

. . .தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதி யளித்து பாமர மக்களின் வோட்டுகளைப் பறித்தனர். காங்கரஸ்காரர் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாகவும் காங்கரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுல கமே பொன்னுலக மாகிவிடுமென பாமர மக்கள் முட்டாள் தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 மாகாணங்களிலே காங்கரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லைப்புற மாகாணத் தைத் தவிர வேறு எந்த காங்கரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கரஸ்காரரால் வெறுக்கப்பட்ட ஸி.ஐ.டிகளும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்துவிட்டார்கள். காங்கரஸ் மந்திரிகள் கட்டளைப்படி ராஜத்துரோக குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடரப்பட்டு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மாகாணத்திலே இந்தி எதிர்ப்பாளர்மீது அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகம் செய்யப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை கடுங்காவல் தண்டனைகளும் வழங்கப்படு கின்றன.

காங்கரஸ்காரர் மெய்யாகவே நாணயமுடையவர்களானால் யோக்கியப் பொறுப்புடையவர் களானால் நேர்மையுடையவர்களானால் அடக்கு முறைச் சட்டங்களை இதற்குள் ஒழித்திருக்க வேண்டாமா?



அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை தமது வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒழிக்கும் ஒரு மசோதாவை அக் கட்சியைச் சேராத ஒருவர் கொண்டுவரச் சந்தர்ப்ப மளித்த காங்கரஸ்காரர் யோக்கியதையை நாட்டு மக்கள் அறிய ஒரு தருணம் வாய்த்தது நமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் கிருஷ்ணமாச்சாரியார் முயற்சி காங்கரஸ் மந்திரிகளுக்கு ஒரு சவுக்கடியென்றே சொல்ல வேண்டும். இந்த மசோதா விஷயத்தில் காங்கரஸ் சர்க்கார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம். . .



குடி அரசு 24.07.1938



இந்தக் காலத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் என்று ஒரு புதிய ஒடுக்கு முறைச் சட்டத்தை யும் இராஜாஜி அரசு பயன்படுத்தத் தொடங்கியது. நீதிக்கட்சி அரசுகளால் தோற்றுவிக்கப்பட்ட 2000 பள்ளிகளை 1938 இல் இராஜாஜி தனது ஆட்சியில் இழுத்துமூடினார். 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். மூடப்பட்ட பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான கள்ளர், தேவர் ஜாதியைச் சார்ந்த மாணவர்களும் தமது எதிர் காலத்தை இழந்தனர். இக்கொடுமையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. அதனை அடக்க பிரிட்டிஷ் அரசின் கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஏவினார் இராஜாஜி. இதில் நூற்றுக்கணக்கான கள்ளர்கள் தேவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர். அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் தேவர். பெரியாரும் இக்கொடிய சட்டத்தில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அப்போது குடி அரசில் பெரியார்தான் அடக்குமுறைச்சட்டங்களை எதிர்த்து எழுதினார்.

…இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி “நமது சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 71எ படி 4மாதம், 6மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள்.

மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.எ. (ஒரு சந்யாசி), கே. எம். பாலசுப்பிரமணியம் பி.எ.பி.எல்., ஷண்முகநந்த சுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை எம்.ஏ. (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர், 4 பேர் வீதம் கைது செய்யப்பட்டுக் கொண்டும் தினமும் 10 பேர், 15 பேர் வீதம் தண்டிக்கப்பட்டுக் கொண் டும் வருகிறார்கள். “இந்த சுயராஜ்ய சர்க்கார் இந்தக் காரியங் கள் மாத்திரம் தான் செய்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்துவிடு வார்கள்? என்று மக்கள் கருதி மேலும் மேலும் கைதியாக ஆயிரக் கணக்கான பேர்கள் முன்வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று கருதி “நமது தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தமது அறுப்புக்கோட்டை அரசியல் மகாநாடு தலைமைப் பிரசங்கத்தில் “இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் பெரிய ராஜத் துரோகிகளாவார்கள் என்றும் அவர்கள்மீது ஆயுள் பரியந்தம் அல்லது தூக்குப் போடும்படியான குற்றப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மிக “தயாள குணத்தோடு “இழகிய மனம் கொண்டு பேசியிருக் கிறார். இதை மெயில் பத்திரிகை மாத்திரமே கண்டித்து தலையங்கம் எழுதி இருக்கிறது.

. .மகாத்மா அறிக்கையில் ஒரு குழப்பமும் இருக்கிறது. ராஜாஜி கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக் காமல் போயிருந்தால் அது பெரும் முட்டாள் தனமாயிருந் திருக்கும் என்று ஒரு விடத்தில் காந்திஜி கூறுகிறார்.

. . . நாம் வெறுத்த நாம் ரத்துச் செய்தே தீருவோமென்று கூறி வந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத் தானா நாம் கையாளவேண்டுமென்பதுதான் என் கேள்வி. அச்சட்டத்தை காங்கரஸ் மந்திரிகள் கையிலெடுத்தது பாவமில்லையென்று மகாத்மா ஜியே கூறினாலும் அது குற்றங்குற்றமே யென்று தான் நான் கூறுவேன். இதற்காக சிலர் எனக்கு ""தேசத்துரோகி''ப் பட்டஞ் சூட்டினாலும் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

குடி அரசு 02.10.1938

1937 ஆம் ஆண்டு தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் எடுத்த தவறான நிலைப்பாடு குற்றப்பரம்பரைச் சட்டத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. 1934 அபிராமம் மாநாட்டுக்குப் பிறகு - அந்த மாநாட்டுக் கோரிக்கையை அப்போதைய பெரியாரின் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி அரசு செயல்படுத்திய பிறகு கைரேகைச்சட்டம் நீக்கப்பட்ட 1947 ஜீன் 5 வரை தேவர் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து எந்தப் போராட்டமும் செய்யவில்லை என்பதோடு, கூடவே இன்னும் கடுமையான அடக்குமுறைச்சட்டங்கள் வந்தபோதும் அமைதியாகவே இருந்தார். 1937 தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி குற்றப்பரம்பரைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச்சட்டங்களை ஏன் நீக்கவில்லை என காங்கிரசையோ இராஜாஜியையோ எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக 1939 வரை காங்கிரஸிலிருந்து நேதாஜி வெளியேற்றப்படும் வரை காங்கிரசிலேயே இருந்துவிட்டு தனது அரசியல் ஆசான் சீனிவாச அய்யங்கர் அறிவுரையின் பேரில்தான் நேதாஜியுடன் பார்வர்டு ப்ளாக்கில் இணைகிறார். 1938 இல் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவித்த பின்னரும் தனது ஜாதி மக்கள் கல்வி வாய்ப்பை இழந்தபின்னும் 1939 இல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் சீனிவாச அய்யங்காருடன் பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார்.

பெரியாரும் தேவர்களும்

1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகத்துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடைஎன்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார். 1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும்தான் என்பது இராமச்சந்திர சேர்வைக்குத் தெரியும். அதனால் தன் குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் பெரியாருக்கு துணையாக்கினார்.

1952 இல் இராஜாஜி மீண்டும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்கிறார். தகப்பன் தொழிலையே பிள்ளைகளும் செய்யவேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார். சுமார் 6000 பள்ளிகளை மீண்டும் இழுத்து மூடினார். குற்றப்பரம்பரையினரின் வாரிசுகள் என்ன செய்யமுடியும்? திருடத்தானே முடியும்? அதை எதிர்த்துக் களம் கண்டவர் - இராஜாஜியை விரட்டி அடித்து குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர் பெரியார். அந்தக் காலத்தில் குலக்கல்வித்திட்டத்தை ஒழிக்க தனது கள்ளர், மறவர், அகமுடையர்களுக்காக தேவர் என்ன செய்தார்?

1956 இல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தில் பிறந்த ஆர்.எஸ்.மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்டஆட்சித்தலைவராக இருந்தார். ஒரு நிலச்சிக்கல் தொடர்பாக அவர் எடுத்த நிலைப்பாட்டைக் கண்டித்து அவரை வேலையை விட்டே நீக்கம் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பெரியார் கொதித்தெழுந்தார். 1956 நவம்பர் 4 ஆம் நாள் திருச்சியில் இதற்காக ஒரு சிறப்பு கண்டனக்கூட்டத்தை நடத்துகிறார். ‘பார்ப்பான் ஆளும் நாடு கடும்புலிகள் வாழும் காடு’ என அந்தக் கூட்டத்தில்தான் முழங்கினார். நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் அந்த உரை நூலாகவே வெளிவந்துள்ளது. அந்த உரைக்காக நீதிமன்ற அவமதிப்புக்காக 1957 ஆம் ஆண்டு பெரியாருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கள்ளர் சமுதாயக் கலெக்டருக்காக கடுங்காவல் தண்டனை பெற்றவர் பெரியார். 1960 செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாள் அன்று அதே ஆர்.எஸ். மலையப்பன் பெரியாருடன் ஒரே மேடையில் உரையாற்றினார். இன்றுவரை அந்த மலையப்பனின் ஊரிலும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் பெரியார் சிலையும் பெரியார் படமும் சிறப்பாக வீற்றிருக்கிறது. இன்றும் திராவிடர் கழகக் கோட்டை என்று சொல்லப்படும் பகுதியாக அப்பகுதி உள்ளது. மலையப்பன் விவகாரத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?

சட்டப்படி கள்ளர்களையும் மறவர், அகமுடையார்களையும் அனைத்து பிற்படுத்தப்பட்ட. தாழ்த்தப்பட்ட மக்களையும் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களென்றும் சூத்திரர்களென்றும் இழிவுபடுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை எரிக்குமாறு 1957 இல் பெரியார் ஆணையிட்டார். நூற்றுக் கணக்கான தேவர்கள் எரித்துச் சிறை சென்றார்கள். இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்தில் தேவரின் பங்கு என்ன?

மண்டல்குழு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளில் ஒருவர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி இரத்தினவேல்பாண்டியன். அவர் தனது தனிப்பட்ட தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமைக்காக பெரியார் உழைத்த உழைப்பை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.



குற்றப்பரம்பரையில் பிறந்தவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கியது திராவிடர்இயக்கம். அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளே நினைவுகூறும் பெரியார் பணியை யாரோ சிலர் கேவலமாகப் பேசுவதை ஒரு முக்கியச் செய்தியாக ஒரு பெரியார் தொண்டர் என்பவரே சொல்வது வருத்தத்துக்கு உரியது. கடும் கண்டனத்துக்கு உரியது. குற்றப் பழங்குடி சட்டத்தைப் பற்றியும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்களில் அப்போதைய ஆட்சியாளரின் நடவடிக்கைகள், அப்போதைய சமுதாய இயக்கங்களின் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்தால் அச்சட்டம் பற்றிய பல மூடநம்பிக்கைகள் ஒழியும்.



தமிழ்நாடு பிரிவினையில் தேவரும் பெரியாரும்



1956 இல் நேரு தட்சிணப்பிரதேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை ஒன்றிணைந்த மண்டலமாக அது அமைய இருந்தது. தமிழ் தேசியர்கள் பார்வையில் அது திராவிட நாடு. அதை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்றார். ‘தென்மாநிலக் கூட்டமைப்பாக’ நான்கு மாநிலங்களும் இணைந்த பகுதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் தேவர். பி.டி.இராஜன் தலைமையில் அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம், நாம் தமிழர் ஆதித்தனார், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட தமிழ்நாட்டின் 20 அரசியல் கட்சிகளும் எதிர்த்த தட்சிணப்பிரதேசத் திட்டத்தை முத்துராமலிங்கத்தேவர் ஆதரித்தார். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவதை எதிர்த்தார். ஆனால் பெரியார் மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்கவேண்டும் என்றார். தட்சிணப்பிரதேச திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். பெரியாரது அறிக்கையில்,



“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங் களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால்,



ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள்.



இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை.ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.



மூன்றாவது - இவர்கள் இருநாட்ட வர்களும் பெயரளவில் இருநாட்ட வர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள்.அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொருளா தாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்ப தால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக் கிறார்கள்.



இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந் திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.”



என முழங்கினார்.

தட்சிணப்பிரதேச எதிர்ப்புப் போராட்டக்குழுவில் பெரியார் வைத்த கருத்துக்கள் மிக முக்கியமானவை. மொழிவாரிமாகாணபிரிப்பு மட்டும் போதாது.

1. மத்திய அரசுக்கு படை, போக்குவரத்து, வெளியுறவு ஆகிய துறைகளைத் தவிர மீதமுள்ள அனைத்துத்துறைகளும் பிரியப்போகும் மொழிவாரி மாகாணங்களுக்கே இருக்கவேண்டும்.

2. பிரியப் போகும் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர்சூட்ட வேண்டும்.

என இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தக் கருத்துக்களுக்கு அப்போதைய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனார், தமிழரசுக்கழக ம.பொ.சிவஞானம், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட குழுவினர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே பெரியார் இக்குழுவில் சேராமல் தனியே போராடினார்.

“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ..தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை”.

என்பது தான் அப்போது பெரியாருடைய நிலைப்பாடு. எல்லோரும் அப்போது வெறும் பிரிவினைக்காக மட்டும் போராடியபோது பிரிவினையோடு உரிமைக்காகவும் போராடியவர் பெரியார்.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பிற்படுத்தப்பட்டோர் நலனாகட்டும், தாழ்த்தப்பட்டோர் நலனா கட்டும், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, பொதுவுடைமை, தேசிய இன விடுதலை, பகுத்தறிவு, மாற்று வாழ்வியல் என எந்த இலக்கை எடுத்துக்கொண்டாலும் அந்த இலக்குகளுக்காகப் போராடுபவர்களுக்கு அடிப்படைப் பாடம் பெரியாரியல். அனைத்துத் தளங்களிலும் போராடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி பெரியார். அவரது சிந்தனைகள் பெரியார் திராவிடர் கழகத்தால் காலவரிசைப்படி தொகுக்கப் பட்டு அச்சிடப்பட்டும் தோழர் வீரமணி அவர்களால் வெளியிடத் தடைசெய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. பெரியார் சிந்தனைகள் முழுமையாக வெளிவந்தால் தோழர் தா.பாண்டியன், தோழர் திருமாவளவன், தோழர் சீமான் போன்றோர் வினா எழுப்பும் சூழலே வந்திருக்காது.

- அதி அசுரன்

வெள்ளி, 25 நவம்பர், 2011

திரும்பும் திசை எங்கும் காக்கி கும்பல்கள்

பரமக்குடி, மதுரை, இராமநாதபுரம் என தொடரும் கலவரங்கள். அங்கும் இங்கும் அலைந்து திரியும் அப்பாவி மக்கள். நினைவு தினத்தை அனுசரிக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நிற்க்கும் கூட்டங்கள். வீட்டுக்கு உபயோக பொருள்கள் வாங்க, குழந்தைக்கு மருத்துவம் பார்க்க, உறவினர் வீட்டிற்கு என்று வந்த பெண்கள், குழந்தைகள் திரும்பி செல்ல பேருந்து இல்லாமல் அலையும் அவலம். கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டு, அலறி ஓடும் ஆண்களை கண்டு அஞ்சி நடுங்கி சாலையின் ஓரங்களிலும், பேருந்து நிலையங்களின் இடுக்குகளிலும் நுழைந்து மரண பீதியில் கதறும் குடும்பங்கள். கையில் நீண்ட லத்தி, தங்களை பாதுகாத்து கொள்ளும் கவச ஆயுதம், துப்பாக்கி முழக்கம், திரும்பும் திசை எங்கும் காக்கி கும்பல்கள் என ஒரு கனம் நம் கண்முன் கஷ்மீரின் அவலநிலை வந்து சென்றது.

என்ன நடக்கிறது என்பதனை யூகிப்பதற்குள் 5 பேரின் உயிர் பலிகொடுக்கப்பட்டுவிட்டது. ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்படி என்ன? நடந்தது பரமக்குடியில்.

ஒரு இனம் ஆண்டாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டு, அநியாயதிற்குள்ளாக்கபட்டு, அடக்குமுறைகளுக்குட்பட்டு கிடந்தது. அதிலிருந்து விடுதலை பெற, உரிமைகளை மீட்டெடுக்க வழிதெறியாது விழி பிதுங்கி நிண்ட நேரத்தில். அவர்களுக்காய் குரல் கொடுத்து, உரிமையை பறித்தெடுக்க போராடியவர் இமானுவேல் சேகரன்.

சுதந்திர போராட்ட தியாகி, இராணுவ வீரன் என தனது இளமை பருவம் தொட்டு போராட்ட களத்தை நோக்கி பயனித்தார் இமானுவேல். இரட்டை குவளை, நாய் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதிக்கும் கூட்டம் மனிதன் தண்ணீர் எடுக்க தடைவிதிப்பதா? என்று ஆதிக்க சக்திகளை எதிர்த்து விவேகத்துடன் போராட்டத்தை தொடங்கினார். 1950-ல் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்” என்று ஆரம்பித்து ஒரு சில வருடங்களுக்குள் தன் சமூக பலத்தை அரசியல் சக்தியாக மாற்றினார். 1957-ல் நடந்த தேர்தலில் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான கடும் உழைப்பினால் தங்கள் இனத்தின் சக்தியை நிரூபித்தார்.

அதன் பின் பல பிரச்சனைகள், சமரச கூட்டங்கள், சிறைகள் என கழிந்து கொண்டிருந்தன நாட்கள். 5-9-1957 அன்று லாவி என்னும் கிராமத்தில் குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண 10-9-1957 அன்று பணிக்கர் என்னும் உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த இமானுவேல் வருகிறார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்ற போதிலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக அங்கே தங்கிய இமானுவேல் அடுத்த நாள் 11-9-1957 பரமக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின் சுமார் 9 மணி அளவில் தன் சொந்த கிராமத்திற்க்கு புறப்பட்ட இமானுவேல் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அன்று முதல் தங்கள் சமூகத்திற்காக தனது உயிரை கொடுத்த வீரர்களின் பட்டியலில் சேர்ந்து தலித் சமூக மக்கள் மனங்களில் என்றும் மறையா இடத்தை பிடித்தார்.

இதன் காரணமாக ஒவ்வொரு 9/11 போது இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாள் அமைதியான முறையில் நீண்ட காலம் நடைபெற்று வந்தது குறிப்பிடதக்கது. அதன் பின் சுமார் 4 வருடங்களாக 1000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மரியாதை செய்யும் நிகழ்சியாக உருவெடுத்தது.

இதற்கு அரசியல் ரீதியான பல காரணங்கள் மறைந்து கிடக்கின்றன. பொதுவாகவே ஆண்டாண்டு காலமாக தேவர்-பள்ளர் பிரச்சனை வழக்கத்தில் இருந்து வருகிறது. எதேனும் விழாக்கள் நடத்தப்பட்டு மக்கள் அதிகமாக கூடும் காலங்களில் இது கலவரமாக வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அப்படியிருந்தும். தேவர்கள் தங்கள் இனத்தலைவரான் முத்துராமலிங்க தேவர் நினைவாக ஒவ்வொரு அக்டோபர்-2 அன்று தேவர் குருபூஜை என்று விழா எடுப்பதும். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அசிங்கபடுத்துவதும், அவர்களை வம்புக்கிழுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நேரங்களில் காவல் துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற போர்வையில் கலவரம் செய்பவர்களை கட்டுப்படுத்தாமல் தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் போலீஸை குவித்து வழக்கம் போல் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்து செல்ல தடை என பதற்றம் பற்றி கொள்ளும். ஆனாலும் அரசியல் தலைவர்கள் பாகுபடின்றி இப்பூஜையில் கலந்து கொண்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி செல்வர். அதில் ஜெ, ஸ்டாலின், காங்கிரஸ்காரர்கள், விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைவரையும் அங்கு காணலாம்.

இதற்கு மாற்றமாக தலித் மக்கள் சார்பில் இமானுவேல் சேகரனது நினைவு தினம் விமர்சியாக்கப்பட்டது. ஆனால் தேவர் குரு பூஜைக்கு கொடுத்த முக்கியத்துவமும், அந்தஸ்தும் இமானுவேல் சேகரனது குரு பூஜைக்கு கொடுக்கபடவில்லை. அதை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கண்டுகொள்வது கூட இல்லை. தலித் கட்சி தலைவர்களைத் தவிர. இது அம்மக்கள் மத்தியில் குமைச்சலாக புகைந்து கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில் 9/11 குருபூஜைக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பாதுகாப்பு என்கிற போர்வையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிகழ்வில் தமிழக மக்கள் கழக தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிரார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக நினைவிடத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். தீடீர் என ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கூட்டத்தில் கசிந்தவுடன் “தாங்களும் வருவதில்லை வருபவனையும் விடுவதில்லையா?” என்று ஆத்திரம் கொண்ட மக்கள் பரமக்குடியின் முக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஆதிக்க சக்தியின் கைக்கூலிகளான காக்கிகள் கூட்டத்தை களைக்க தடியடியை தொடங்கியிருக்கிறார்கள்.

கூட்டத்தை கலைக்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்ட தடியடி தான், மறியல் போராட்டம் மிகப்பெரும் கலவரமாக மாற வித்திட்டது. அதன் பின் போலீஸ் வாகனம் எரிப்பு, கல்வீச்சு, அதிகாரிகள் காயம் என அனைத்தும் ஒன்று சேர்ந்து 7 அப்பாவிகளின் உயிர் துப்பாக்கிக்கு இரையாக்கப்பட்டுவிட்டது.

பலமுல்ல காவல்துறை கையில் தடி, பாதுகாப்பு கவசம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகணம், கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டு என கலவரத்தை தடுக்க பல வழிகள் இருந்தும் போராடியவர்கள் சிறுபான்மை சமூக மக்கள் ஆதாலால் தனது ஆதிக்க வெறியை தன் கையில் இருந்த துப்பாக்கியின் மூலம் தனித்து இருக்கின்றனர். துப்பாக்கியால் மனித உயிர்களை காவு கொண்டது நிச்சயம் கண்டனத்திற்குரியது.

மற்ற சமூகத்தை இழிவுபடுத்துவதற்காகவும், மனித சமூகத்தை பிரிவினைபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த கொண்டாடப்படும் விழாக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. வட நாட்டின் இறக்குமதியான விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்து ஆரத்தியெடுத்து பாதுகாப்பு கொடுக்கும் ஆதிக்க, பார்ர்ப்பன சக்திகள் மற்றும் அதன் கைகூலிகள் அமைதியான முறையில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அனுமதிமறுப்பதும், அதுவே சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்தால் அடக்குமுறைகளை கையாள்வதும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் அமைப்பு சுதந்திர தினத்தை கொண்டாட சட்ட ரீதியான அனைத்து ஒழுங்குகளையும் கடைபிடித்து, அரசிடம் உரியமுறையில் அனுமதி பெற்றிருந்தும் கடைசி தருவாயில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று உப்பு சப்பில்லாத காரணங்களை காட்டி சுதந்திர தின கொண்டாட்டதை தடை செய்தது. அத்துடன் நிகழ்ச்சி நடக்கயிருந்த மேலப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்து பதட்டமான சூழ்நிலை போல் படம் காட்டியது குறிப்பிடதக்கது.

இதை நான் இங்கு குறிப்பிட காரணம் இத்தடையை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இதில் அதன் பொது செயளாலர் ஹாலித் முஹம்மது இராமநாதபுரத்தில் கண்டன உரை நிகழ்த்தும் போது உங்கள் தடைக்கு பயந்து நாங்கள் எங்களது விழாவை நிறுத்திவிடவில்லை. எங்கள் தலைமை எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் சட்டம் ஒழுங்கை பேணுபவர்கள். சுதந்திர தின விழாவை தடைசெய்தது போன்று தேவர் குரு பூஜையையோ அல்லது விநாயகர் ஊர்வலத்தையோ தடை செய்து பாருங்கள் என்ன நடக்கும் என்று தெரியும். சட்டம் ஒழுங்கு பற்றி புரியும் என்று அவர் கூரிய வரிகளின் எதிரொளியை இன்று நாம் காண்கின்றோம்.

சட்டத்தை மதிப்பவர்களை சட்டம் மேலும், மேலும் நசுக்குகிறது. சட்டத்தை மீறுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இன்று பரமக்குடியில் நடந்த கலவரத்திற்கும், உயிர் பலிக்கும் காவல்துறை சட்டம் ஒழுங்கை மீறியதே காரணம். விழாவிற்கு அனுமதி அளித்துவிட்டு இறுதி தருவாயில் அதற்கு வந்த தலைவரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்தேறி இருக்காது. உயிர்களும் போயிருக்காது.

பரமக்குடி படுகொலைகளுக்குப் பின்….. அ.மார்க்ஸ்




பரமக்குடியில் சென்ற செப்டம்பர் 13 அன்று ஆறு தேவேந்திர குல வேளாளர்களின் உயிர்களைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூடு, தொடர்ந்து அம்மக்கள் மீது மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஆகியன முழுக்க முழுக்கக் காவல் துறையினர் அரசு ஆதரவுடன் மேற்கொண்ட ஒரு வன்முறை என்பதை இது தொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன. அ.இ.அ.தி.மு.க தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இது குறித்து அரசைக் கண்டித்துள்ளன. எதிர்க்கட்சித் தகுதியைச் சட்டமன்றத்தில் பெற்றுள்ள தே.தி.மு.க முதலில் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்தபோதும் விரைவில் அதுவும் தன் நிலையை மாற்றிக் கொண்டது.



தமிழக அரசு முழுக்க முழுக்கக் காவல் துறை நடவடிக்கையை ஆதரித்தது. வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு முதல்வர் காவல்துறையை விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்கிற நிலையைத் தாண்டி இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் ஆங்காரமாகத் துப்பாக்கிச் சூட்டை அதரித்தார். தேவர் சாதி வெறியர்களால் பழனிக்குமார் என்கிற அப்பாவிச் சிறுவன் கொலை செய்யப்பட்டதையும் கூட அவர் சட்டமன்றத்தில் ஆதரித்துப் பேசினார். முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து எழுதினான், எனவே கொலை செய்யப்பட்டான் என ஒரு முதல்வர் சட்ட மன்றத்தில் பேசுகிறார் என்றால் வேறு எப்படி நாம் அதைப் புரிந்து கொள்வது?



துக்கம் விசாரிக்கும் பெயரில் பழனிக்குமாரின் கிராமத்திற்கு ஜான் பாண்டியன் படைஎடுத்துச் சென்றார், நாங்கள் அதைத் தடுக்க வேண்டியிருந்தது எனச் சொல்லி அவரைக் கைது செய்ததை நியாயப் படுத்தினார். தேவரை இழிவு செய்து பழனிக்குமார் எழுதினான் என்பதும் பொய், ஜான் பாண்டியன் படை எடுத்துச் சென்றார் என்பதும் பொய். எங்களது அறிக்கை அதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. அப்புறம் சாலை மறியல், போக்குவரத்திற்கு இடைஞ்சல், போலீஸ் அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்றது, பொலீஸ் வாகனங்களுக்குத் தீ வைத்தது என ஆறு படுகொலைகளும் நியாயப்படுத்தப்பட்டன. இப்படியான நியாயப் படுத்தல்கள் வழக்கமாகச் செய்யப்படுவதுதான். உண்மை என்னவென்பது அன்று அங்கிருந்தவர்களுக்கும், அத்தகையோரைச் சந்தித்து, விரிவாகப் பேசி எழுதப்பட்ட எங்களின் அறிக்கையைப் படித்தோருக்கும் தெரியும். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கண்டமேனிக்கு அலைக்கழிக்கப்பட்ட பின்னரே அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோருக்கு மதுரை அரசு மருத்துவ மனையில் கட்டணம் பெற்றுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ம.தி.மு.க தலைவர் வைகோ தலையிட்டு காயம்பட்ட ஒருவரது சிகிச்சைக்குத் தானே பொறுப்பேற்றார். வழக்குரைஞர்கள் ரத்தினம் அவர்களும் ரஜினி அவர்களும் தனித்தனியே நீதிமன்றத்தை அணுகிக் காயம்பட்டவர்களுக்கு அப்பொலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.



இதற்கிடையில் பரமக்குடி நகரில் எராளமாகக் காவற் படையினர் குவிக்கப்பட்டனர். 1000 பேர்கள் மீது வழக்கு என ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு தேவேந்திரகுல மக்கள் மத்தியில் பீதியூட்டப் பட்டது. இரவு நேரங்களில் ரோந்துப் படைகள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு மக்கள் மத்தியில் பேரளவில் அச்சமூட்டப்பட்டது. ஆண்கள் இரவு நேரங்களில் காடுகளுக்குள் ஓடிப் பதுங்க நேரிட்டது. பரமக்குடி காவல் நிலையம் அருகே செல்பவர்கள் எல்லோரும் வீடியோப் பதிவுக்குள்ளாயினர்..



துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு வெறும் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கப் பட்டதை கண்டிக்காதார் யாருமில்லை. அடுத்த சில நாட்களில் ரயில் விபத்தில் மாண்டவர்களுக்குக்கூட மூன்று இலட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது. அநியாயமாக அரச வன்முறையால் உயிர் நீத்த இந்த அறுவர் குடும்பத்திற்கும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினரும், மனித உரிமை ஆர்வலர்களும் வற்புறுத்தினர்.



ஆனால் இன்றுவரை ஜெயா அரசு இது குறித்து இரக்கம் காட்டத் தயாராக இல்லை. கண்துடைப்பு நடவடிக்கையாக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் ஆணையத்தை எல்லோரும் எதிர்க்க நேரிட்டது. வரலாறு காணாத வகையில் மக்கள் அதைப் புறக்கணித்தனர். வேறு வழியின்றி சம்பத் வீடு திரும்பினார்.



அ.தி.மு.க ஆட்சிக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. முதலாவது அது ஒரு போலீஸ் ஆட்சியாக இருக்கும். காவல் துறைக்கு முழுச் சுதந்திரமும் அளிக்கப்படும். எத்தகைய அத்துமீறல்களுக்காகவும் காவல்துறையை அது விட்டுக் கொடுக்காது. இரண்டாவது, அது முக்குலத்தோருக்குச் சாதகமான ஆட்சியாக இருக்கும். அப்படியாகக் குற்றஞ் சாட்டப்படுவது பற்றிய கவலை அதற்கு இருக்காது. இந்த அம்சங்களில் ஜெயா எந்த வகையிலும் மாறவில்லை என்பதற்கு அவர் பரமக்குடி பிரச்சினையில் நடந்து கொள்வதே சாட்சி.



துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ளது, எக்காரணம் கொண்டும் இழப்பீட்டுத் தொகையைக் கூட்ட மறுப்பது தவிர, சென்ற வாரத்தில் நடை பெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் தமது ஆட்சியில் காவல் துறைக்கு முழுச் சுதந்திரமும் உண்டு என்று மீண்டும் ஒருமுறை பிரகடனப் படுத்தியுள்ளதைப் பத்திரிக்கைகளில் பார்த்தோம். அடுத்த நாள் (நவ 19, 2011) போலீஸ் கான்டீனுக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர், எப்படிப் படைவீரர்கள் அந்நிய நாட்டு ஆக்ரமிப்புகளிலிருந்து நாட்டைக் காக்கிறார்களோ அப்படிப் போலீஸ்காரர்கள் உள்நாட்டுச் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்கிறார்கள் என்றார். தமது ஆட்சியில் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்குக் காவல் துறையே காரணம் எனப் பராட்டினார். இந்தப் போலீஸ் கான்டீன்களில் காவல் துறையினர் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.



ஆக ஆறு பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றால் அதெல்லாம் நாட்டை அமைதிப் பூங்காவாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று. சமூக அமைதியைக் குலைக்க முற்பட்டவர்களுக்கு எப்படி இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க முடியும்? சமூக அமைதியை நிலை நாடியவர்களுக்குத்தான் பரிசளிக்க முடியும்.



இங்கொன்றைச் சொல்லியாக வேண்டும். அ.தி.மு.க ஆட்சி முக்குலத்தோருக்கு ஆதரவானது, போலீஸ் அதிகாரம் கொடிகட்டிப் பறப்பது என்பதன் பொருள் தி.மு.க ஆட்சி இதற்கு நேரெதிரானது என்பதல்ல. அப்படியான பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் அது ரொம்பக் கவனமாக இருக்கும். சென்ற முறை தி.மு.க பதவி ஏறியவுடன் அடுத்தடுத்து நான்கு என்கவுன்டர் கொலைகள் நடத்தப்பட்டன. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தளர்ந்து விடும் என்கிற பிம்பத்தை உடைக்க வேண்டுமென்பதற்காகவே இப்படி என்கவுன்டர்கள் செய்யப்பட்டன எனப் பத்திரிக்கைகள் எழுதின. ஆக தலித் மக்களுக்கு ஆதரவான ஆட்சி என்பது இன்றைய சாதீயச் சமூகத்தில் சாத்தியமே இல்லை என்கிற உண்மையே மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.



இன்று எதிர்க்கட்சித் தகுதி பெற்று சட்டமன்றத்தில் உல்ள தே.தி.மு.க துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் துப்பாக்கிச்சூட்டை ஆதரித்துப் பேசினார். துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை எல்லாம் தேவையில்லை என்றார். ராமச்சந்திரன் கட்சியை உடைத்துக் கொண்டு அ.தி.மு.க பக்கம் சாயப் போகிறார் என்று ஒரு பேச்சு உலவுவது குறிப்பிடத்தக்கது. கடும் விமர்சனம் வந்த பின் சற்றே சுதாரித்துக் கொண்ட விஜயகாந்த் பரமக்குடிக்கு ஓடி வந்தபோது பாதிக்கப்பட்ட மக்கள் சமாதானம் அடைந்துவிடவில்லை.



இரண்டு பொதுவுடைமைக் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க எல்லோரும் கண்டன அறிக்கைகள் விட்டார்கள். வந்து போனார்கள். சட்ட மன்றத்தில் கண்டித்தார்கள். கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினார்கள். பரமக்குடி அல்லது இராமநாதபுரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் மதுரை, சென்னை என தூர நகரங்களில் இதைச் செய்தனர். சம்பத் ஆணையம் அறிவிக்கப்பட்ட போது மார்க்சிஸ்ட் கட்சியினர் கைதட்டி ஆரவாரித்தனர். யாரும் தடையை மீறி பரமக்குடியில் தமது எதிர்ப்பைக் காட்டவோ, சம்பத் ஆணையம் ஒரு கண்துடைப்பு எனக் கூறி, தேவையற்ற துப்பாக்கிச் சூட்டை நடத்தி உயிர்ப் பலி கொண்ட காவல் துறையினரைப் பணிநீக்கம் செய்யக் கோரியும், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் தீவிரமான போராட்டம் எதையும் எடுக்கவில்லை. ஏதோ கடமைக்குத் தம் கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தைகளில் இறங்கினர்.



தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குத்தான் இதில் மிகப் பெரிய நெருக்கடி. ராஜபக்சே மீதான நடவடிக்கைகள், கச்சத்தீவு, மூவரது மரண தண்டனை ரத்து முதலான அம்சங்களில் சாதகமான தீர்மானங்களை இயற்றி தமிழ்த் தேசியர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருந்தார் ஜெயா. சீமான் பொன்றவர்கள் வெளிப்படையாகவே பாராட்டு விழா நடத்தினார்கள். மற்றவர்கள் விழா நடத்தாவிட்டாலும் அம்மாவை நம்பினர். அவர் மூலம் சில காரியங்களைச் செய்ய முடியும் என்ற நிலையில் அவரைப் பகைத்துக் கொள்ள வேண்டாமென்பது அவர்களது பொதுக் கருத்தாக இருந்தது. எனவே பரமக்குடி படுகொலையை அதற்குரிய வன்மையுடன் கண்டிப்பதில் அவர்களுக்கு நியாயமான தயக்கமிருந்தது. இளம் பத்திரிக்கையாளர்கள் அமைப்பு ஒன்று கூடங்குளம், மூவர் மரண தண்டனை, பரமக்குடி ஆகிய மூன்றையும் இணைத்து ஒரு கருத்தரங்கம் நடத்த முயன்றபோது அதில் மூவர் மரண தண்டனை ரத்து பற்றிப் பேச இருந்த தமிழ்த் தேசியர் ஒருவர், பரமக்குடி பற்றிப் பேசுபவர் நிச்சயம் ஜெயாவை விமர்சிப்பார், எனவே நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என வெளிப்படையாகச் சொல்லி மறுத்து, அந்தக் கருத்தரங்கே ரத்தாவதற்குக் காரணமாக இருந்தது சமீபத்திய நிகழ்வு.



தலித் மக்களிடமிருந்து தாம் அந்நியப்பட்டுவிடக் கூடாது எனக் கருதி தமிழ்த் தேசியர்கள் பிற அரசியலாரைப்போல பரமக்குடிக்காகக் கண்டன நிகழ்வுகளை நடத்தியபோது அதை தலித் போராளிகள் நம்பவில்லை. அத்தகைய கூட்டங்களில் அவர்கள் கண்டன அறிக்கைகளை வினியோகித்தனர்.



பாதிக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியான டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் சட்ட மன்றத்தில் இப்பிரச்சினையை முன்னெடுத்தது. கூட்டணிக் கட்சியினராக இருந்தபோதிலும் டாக்டர் கிருஷ்ணசாமி இருமுறை வெளிநடப்புச் செய்தார். எனினும் புதிய தமிழகமும் கூடப் பெரிய அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் இயக்கம் எதையும் நடத்திவிட முடியவில்லை. வரும் டிசம்பர் 6ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக டாக்டர் அறிவித்துள்ள செய்தி இன்று வந்துள்ளது (தினமணி, நவ 23). அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தல், மூவர் மரண தண்டனையை ஒழித்தல், பள்ளர் முதலான சாதிகளை தேவேந்திர குல வேளாளர் பிரிவில் சேர்த்தல் இன்ன பிற கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரமக்குடி முக்கியத்துவம் பெறவில்லை, அல்லது இன்ன பிறவற்றுள் ஒன்றாகிவிட்டது.



ஜான்பாண்டியனே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகச் சுட்டப்பட்டு அரசால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவராலும் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியவில்லை. பரமக்குடியிலேயே இருந்து, துப்பாக்கிச் சூடு அளவிற்குப் பிரச்சினையைக் கொண்டு செல்லாமல் தடுக்க முயன்று, அது இயலாமற் போனபின்பு தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டவர்களோடு நின்று, உண்மைகளை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காற்றி வருகிற தியாகி இம்மானுவேல் பேரவையின் நிறுவனர் சந்திர போஸ் அவர்கள், இதே காரணங்களுக்காக இன்று அரசு மற்றும் ஆதிக்க சாதியினரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அவரைக் கைது செய்ய வேண்டுமென்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவரை மிகவும் இழிவான சொற்களால் தாக்கி பரமக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.



ஊடகங்களைப் பொருத்த மட்டில் துப்பாக்கிச் சூடு குறித்த தகவல்களை உடனடியாக வெளிக் கொணர்ந்தன. அரசுத் தரப்பு மறைக்க முயன்ற செய்திகளையும் கூட ஜூனியர் விகடன், சத்தியம் தொலைக்காட்சி முதலியன அம்பலப்படுத்தின. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள ஊடகப் பெருக்கத்தின் ஒரு வரவேற்கத்தக்க அம்சமென்னவெனில் இது போன்ற பிரச்சினைகளில் உண்மைகளைப் பெரிய அளவில் யாராலும் மறைத்துவிட முடிவதில்லை.



இன்னொரு பக்கம் ஏகப்பட்ட உன்மை அறியும் குழுக்கள், எங்களையும் சேர்த்துத்தான், களத்தில் இறங்கின. ஒரு தொண்டு நிறுவனம் இரு உண்மை அறியும் குழுக்களுக்கு ‘ஸ்பான்சர்’ செய்தது. இப்படியான ஆர்வம் வரவேற்கத் தக்க அம்சந்தான் என்றபோதிலும், இது மாதிரியான பிரச்சினைகளில் எளிதில் தமது மனித உரிமை ஆர்வத்தையும், பாதிக்கப் பட்டவர்களுக்காகத் தாம் நிற்பதையும் காட்டிக் கொள்ளும் வழிமுறையாக இது ஆகிவிடக் கூடாது. ஏதோ ஒரு சுற்றுலாப் பயணம் போல இது ஆகிவிட்டதோ என்கிற குற்ற உணர்ச்சி எனக்குமே ஏற்பட்டது.



உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக அளவில் அ.தி.மு.க விற்குச் சாதகமாக அமைந்தன. கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி பெருவாரியான இடங்களை அது கைப்பற்றியது. பொதுத் தேர்தலை ஒட்டிய உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது எதிர்பார்க்கக் கூடியதுதான் என்ற போதிலும், இந்த வெற்றி கொஞ்சம் அதிகப்படியானதே. சமச்சீர்க் கல்வி குளறுபடிகளோ, பரமக்குடிப் படுகொலைகளோ எதுவும் ஜெயா அரசுக்கான ஆதரவைப் பெரிய அளவில் பாதித்துவிடவில்லை. பரமக்குடி நகரிலேயே அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.



ஏன் பரமக்குடிப் படுகொலைகளுக்கான எதிர்ப்பு அதற்குரிய வீச்சைத் தமிழகத்தில் பெற இயலவில்லை? ஈழப் பிரச்சினை அல்லது மூவர் மரண தண்டனை எதிர்ப்பு அளவிற்குக் கூட பரமக்குடிப் பிரச்சினையைக் கொண்டு செல்ல இயலவில்லை? நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களில் காங்கிரசைத் தனிமைப்படுத்த முயன்றது போல இப்போது ஏன் நம்மால் செய்ய முடியவில்லை? ப.சிதம்பரம் தொகுதிக்கு ஒரு குழு சென்று எதிர்ப் பிரச்சாரம் செய்ததைப்போல ஏன் உள்ளாட்சித் தேர்தலின்போது பரமகுடிக்கு நம்மால் சென்று பிரச்சாரம் செய்ய இயலவில்லை? குறைந்த பட்சம் கூடங்குளப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள நாடு தழுவிய ஆதரவு கூட இந்தப் பிரச்சினைக்குக் கிடைக்கவில்லை? தலித் எழுச்சி பர்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மால் ஏன் ஒன்றும் செய்ய இயலாமற் போயிற்று?



இது ஒரு சாதீயச் சமூகம். இதில் இந்த அளவுதான் முடியும் எனச் சொல்லி நாம் திருப்தியடைந்து விடக்கூடாது. ஏன் நம் தரப்பில் இதை எல்லாம் செய்துவிட முடியவில்லை என்கிற கேள்விக்கு நாம் பதில் கண்டாக வேண்டும். கூடங்குளத்திற்கும், மூவர் மரண தண்டனைக்கும் பெரிய அளவில் இயக்கம் நடத்தமுடியும்போது ஏன் பரமக்குடிக்கு ஒரு அடையாள ஆர்பாட்டம் அல்லது கருத்தரங்கு நடத்தி விட்டு ஓய்ந்து போகிறோம்? அன்னா ஹஸாரேக்குப் பின் திரளும் ‘சிவில் சமூகம்’ ஏன் தலித் பிரச்சினைகளில் அணி திரள மறுக்கிறது?



ஜெயா மீதுள்ள நம்பிக்கைதான் தமிழ் உணர்வாளர்களைத் தடுக்கிறது என்றால், அத்தகைய நம்பிக்கைக்குத் தகுதியானவரா அவர்? ஈழ விடுதலை, மரண தண்டனையை அறவே ஒழித்தல், அணு ஆற்றலை மறுத்தல் ஆகியவற்றில் நம்பிக்கை உடையவரா ஜெயா? என்றைக்காவது கொள்கை அளவில் இவற்றை ஆதரித்து அவர் பேசியுள்ளாரா? முதல் நாள் வரை எதிர்க் கருத்துக்களச் சொல்லிக் கொண்டிருந்தவர் அடுத்த நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, பிரச்சினையை மத்திய அரசின்பாற் தள்ளிவிட்டு மக்கள் போராட்டங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் பொருளென்ன? மரண தண்டனைப் பிரச்சினையில் கேரள அரசையும் கருணாநிதி அரசையும் போல அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் இயற்றாமலும், அணு உலைப் பிரச்சினையில் மம்தா பானர்ஜியைப் போல எங்கள் மாநிலத்தில் அணு உலை கூடவே கூடாது எனச் சொல்லத் தயாராக இல்லாததையும் ஜெயாவை எதிர்க்கக் கூடாது என்பவர்கள் கவனிக்கவில்லையா?



பிரச்சினை அதுவல்ல. பெனெடிக்ட் ஆன்டர்சன் சொல்வது போல தேசம், மொழி, இனம், சிவில் சமூகம், வளர்ச்சி, பாதுகாப்பு முதலான அனைத்துயிர் தழுவிய பிரபஞ்ச விகாசச் (universal) சொல்லாடல்களின் கீழ் திரட்டப்படும் மக்கட் சமூகத்தினர் எதார்த்ததில் நிலவும் உட் சமூகப் பிரிவுகளின் பிரச்சினையைக் கணக்கில் கொள்ள மாட்டார்கள். சொல்லப்போனால் அறிந்தே இருக்க மாட்டார்கள். அனைத்து மக்கள் தழுவிய சொல்லாடல்களின் கீழ் திரட்டப்படும் மக்களை ‘unbound serialities’ அதாவது உள்கட்டுகளுக்கு அப்பாற்பட்ட சமூக நிலையினர் (எ.டு: ‘தமிழர்கள்’, ‘இந்தியர்’ ) எனவும், எதார்த்தத்தில் நிலவுகிற உட் சமூகப் பிரிவுகளை ‘bound serialities’ எனவும் குறிப்பார் ஆன்டர்சன். ஆன்டர்சன் தேசியக் கற்பிதம் பற்றிச் சொல்ல வருவதை ஏதோ அவர் தேசிய உணர்வைக் குறைத்துச் சொல்வதாகக் கருதக் கூடாது. ஒரு இனம் அல்லது மொழி என்கிற அடிப்படையின் கீழ் வரையறுக்கப்படும் அனைத்துயிர்களும் வேறு எந்தத் தனித் தனிப் பிரச்சினைகளும் இல்லாத, ஒரே பிரச்சினையை எதிர் கொண்டுள்ள ஒருபடித்தான ஒரே சமூகக் குழுமமாகத் தம்மைக் கற்பிதம் (imagine) பண்ணிக் கொள்வதுதான் அது. இத்தகைய கற்பிதத்தை ஆன்டர்சன் உயர்வாகவே மதிப்பிடுவார்.



இப்படியான அனைத்துயிர் தழுவிய கற்பிதங்களின் அடிப்படையில் திரட்டப்படும் மக்கள் திரளை நீங்கள் ஒரு உட்பிரிவின் பிரச்சினைகளுக்காக நிறுத்த இயலாது. ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, ஊழலற்ற ஆட்சி, சிவில் சமூகம் என்கிற அடிப்படையில் தன் கீழ் திரட்டப்படும் மக்களை கேர்லாஞ்சி படுகொலைகளுக்கு எதிராகவோ, தனியார் துறையில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கையை முன்வைத்தோ அன்னா ஹஸாரேயால் நிறுத்தி விட முடியாது. அனைத்திந்தியம், அகண்ட பாரதம், ஒருமைப்பாடு, வளர்ச்சி, வல்லரசு இந்தியா முதலான முழக்கங்களை முன் வைக்கும் காங்கிரஸ்காரர்களும், இந்துத்துவவாதிகளும் கூட அதைச் செய்துவிட முடியாது.



தேசியக் கதையாடல்களும் முதலாளியக் கதையாடல்களும் எல்லா மக்களும் சமூகநிலையைப் பொருத்தமட்டில் கற்பனையான ஒரே காலகட்டத்தில் (homogeneous empty time) வாழ்வதாகக் கற்பிதம் செய்கின்றன. ஆனால் எதார்த்த வெளியோ பல்வேறு வாழ்நிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறுபட்ட உண்மையான பல கால கட்டங்களைக் (heterogeneous real times) கொண்டதாக உள்ளது. நவீனத்துவ வெளிப்பாடுகளில் ஒன்றான இன்றைய ஆளுகைமுறை (governance) இத்தகைய வெவ்வேறு காலகட்ட வாழ்நிலை குறித்த பிரக்ஞையை உட் பிரிவினர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. தேவேந்திர குல வெளாளர்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள உரிமை வேட்கையை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக ஏற்று நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை இத்தகையதே. ம.நடராசனின் தோள்களில் கைபோட்டுக் கொண்டு ஈழ ஆதரவு இயக்கம் நடத்துவோரால் எப்படி மனமுவந்து இக் கோரிக்கைக்காக மக்களைத் திரட்டிவிட முடியும்? அவர்கள் மனமுவந்தாலுங்கூட இந்தக் கோரிகைக்காக அவர்கள் திரட்டி வைத்துள்ள மக்கள் வந்து நின்று விடுவார்களா? கூடங்குளம் பிரச்சினையைக்கூட “தமிழர்களைக் கொல்வதற்கான சதி” என்றவாரு கதையாடி கையிலெடுத்துவிட முடிகிறது. ஆனால் பரமக்குடிப் பிரச்சினையைக் கையால் தொட இயலவில்லை என்பது கவனத்திற்குரியது.



இன்றைய நமது மிகப் பெரிய சிக்கல் எப்படி இந்த இரு நிலைகளையும் புரிந்து ஏற்றுக் கொண்டு இணைத்துச் செயல்படுவது என்பதுதான். எல்லோரையும் சம குடிமக்களாக ஏற்றுக்கொள்ளும் ‘சுயராஜ்யமும்’ வேண்டும், அதே நேரத்தில் அந்த சுயராஜ்யத்திற்குள் எங்களுக்குத் தனித்துவமான உரிமைகளும் வேண்டும் என அம்பேத்கர் முன்வைத்த அரசியல் இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் தேசிய அரசியல் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.



அம்பேத்கரின் இந்த அணுகல்முறையைப் புரிந்துகொள்ளாததன் விளைவே இன்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பரமக்குடிப் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளி, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான கோரிக்கையை முன்னுக்குக் கொண்டு வருகிறார்.



எப்படி இந்தப் பிரபஞ்ச விகாச அணுகல் முறையையும், உட்பிரிவினரின் பிரச்சினைகளையும் ஒன்றிணைப்பது என்பதற்கு எளிதான பதிலேதும் என்னிடமில்லை. ஆனால் இதற்கொரு முன் நிபந்தனையை என்னால் சுட்டிக்காட முடியும். அது, அனைத்து மக்கள் தழுவிய சொல்லாடல்களை உதிர்ப்போர் தாங்கள் ஒரு கற்பனையான ஒருபடித்தான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதுதான். ஆனால் எதார்த்தம் அப்படியிருக்கவில்லை, எதார்த்த உலகம் பல்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதுதான். இதை ஏற்றுக்கொள்ள இயலாததன் மோசமான விளைவுகளை நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களால் பரமக்குடி படு கொலைகளுக்கு எதிராக அடையாளமான போராட்டங்களை மட்டுமே நடத்த முடியும். அதற்குரிய வீச்சுடன் மக்களைத் திரட்டிவிட முடியாது. இப்படி உட்பிரிவுகளின் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டு தேசியச் சொல்லாடல்களையோ, ஜனநயக, முற்போக்குச் சொலாடல்களையோ வெற்றிகரமாக முன்நகர்த்திச் சென்றுவிடவும் முடியாது