ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் நாலு சடுகுடு!



மார்ச் 18-ல் தேர்தலைச் சந்திக்க இருக்கும் சங்கரன்கோவில் தனித்தொகுதி​யில் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்​தும், தங்களுடைய வேட்​பாளர்​களைக் களம் இறக்கி விட்டன. ஆளும் அ.தி.மு.க​-விடம் இருந்து தொகுதியைத் தட்டிப்பறிக்க பிரதான எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போட்டி போடும் நிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் பற்றிய அலசல்... 
முத்துச்செல்வி: இந்தத் தொகுதியில் போட்டியிட நான், நீ எனப் பலரும் அ.தி.மு.க-வில் வரிந்து கட்டிய சமயத்தில், யாருமே எதிர்பார்க்காமல் இவரது பெயரை ஜெயலலிதா அறிவித்தார். இதனால், இந்தத் தொகுதியில் ஸீட் கேட்டுக் காத்திருந்த பலருக்கும் கடும் அதிருப்தி. அதனால் உள்கட்சியிலேயே சிலர் எதிராகக் காய் நகர்த்துகிறார்கள்.
தொகுதியில் இருக்கும் கணிசமான முக்குலத்தோர் வாக்குகள் இதுவரை அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருந்தன. ஆனால், சசிகலா குடும்பத்தினர் மீதான அதிரடி நடவடிக்கைகள் அந்த சமூகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருப்பதால், இந்த முறை அந்த வாக்குகள் மொத்தமாகக் கிடைப்பது சந்தேகமே. இது போன்ற பிரச்னைகளை சமாளிக்கத்தானோ என்னவோ, 34 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேர் கொண்ட மெகா குழுவை அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா.
வெற்றி வாய்ப்பு குறித்து முத்துச்​செல்வியிடம் பேசினோம். ''கடந்த தி.மு.க ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் சீர்படுத்தி செம்மையான ஆட்சியை அம்மா நடத்தி வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அம்மா செயல்படுத்தி வருகிறார். அதை எல்லாம் சொல்லி வாக்கு கேட்பேன். மறைந்த அமைச்சர் கருப்பசாமி விட்டுச் சென்றிருக்கும் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த வாய்ப்பு கொடுக்கும்படி வாக்காளர் களிடம் கேட்பேன், வெற்றி பெறுவேன்'' என்றார் பவ்யமாக.
ஜவஹர் சூர்யகுமார்: தி.மு.க-வில் ஸீட் கேட்டு உள்ளூர், வெளியூர்ப் பிரமுகர்கள் பலரும் காத்​திருந்த நிலையில், யாருமே எதிர்பாராத ஜவஹர் சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இவரை வெற்றி பெற​வைக்க வேண்டும் என்று ஸ்டாலின், அழகிரி தரப்பில் இருந்து அவரவர் ஆதரவாளர்களுக்கு உத்தரவு வந்து இருப்பதால், தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் வேலை செய்கிறார்கள்.
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த இவர், இடையில் ம.தி.மு.க. பக்கம் தாவி, அதன் பின்னரே தி.மு.க-வுக்கு வந்தவர் என்ற  அதிருப்தி இருக்கிறது. தீவிர வாக்கு சேகரிப்புக்கு இடையே நம்மிடம் பேசிய அவர், ''தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது வழக்குப் போட்டு பழிவாங்குவதில் காட்டும் அக்கறையில் பாதியைக்கூட மக்கள் நலனை மேம்படுத்துவதில் இந்த அரசு காட்டவில்லை. ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்போம் என்று சொன்னார்கள். ஆனால், ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டு இப்போது 10 மணி நேரமானதுதான் சாதனை. சமச்சீர்க் கல்வி, புதிய சட்டமன்றக் கட்டடம், அண்ணா நூலகம் போன்றவற்றை முடக்க நினைப்பதை மக்களிடம் எடுத்துச் சென்று நியாயம் கேட்பேன். எங்களுக்குத்தான் வெற்றி'' என்றபடி கிளம்பினார்.
சதன் திருமலைக்குமார்: வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்தத் தொகுதிக்குள் வருவதால், சொந்த பலத்தைப் பரிசோதிக்க நினைத்து ம.தி.மு.க.  தனியே களம் இறங்குகிறது. வேட்​பாளரான டாக்டர் சதன் திருமலைக்குமார், தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகம். இதே தொகுதியில் 1996-ல் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த இவர், 2005-ல் பக்கத்துத் தொகுதியான வாசுதேவநல்லூரில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-ஆக இருந்தவர். வைட்டமின் 'ப' இல்லாமல் களம் இறங்கி இருப்பது ம.தி.மு.க-வுக்கு மைனஸ். ஆனாலும், ஆளும் கட்சிக்கு இணையாக ஒரு மாதத்துக்கு முன்பே பிரசாரக் களத்தில் இருப்பது சாதகம்.
சதன் திருமலைக்குமாரிடம் பேசியபோது, ''இந்த அரசு மீதும் மக்களுக்கு ஏமாற்றம் வந்துவிட்டது. அதனால், எங்களை மாற்று சக்தியாக மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வும் இந்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இப்போது இருக்கும் அ.தி.மு.க.வும் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் நலனுக்காகப் பாடுபடும் வைகோவை இந்த மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையும்'' என்றார் நம்பிக்கையுடன்.
முத்துக்குமார்: தே.மு.தி.க-வுக்கு இந்தத் தொகு​தியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்றபோதிலும், ஜெயலலிதாவிட்ட சவாலை எதிர்கொள்வதற்காகவே தனித்துக் களம் இறங்கி இருக்கிறது. வேட்பாளரான முத்துக்குமார் 2006 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு 5,531 வாக்குகள் பெற்றவர்.  விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் இங்கு முகாமிட்டு, கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்யும் திட்டம் இருக்கிறது.
கம்ப்யூட்டர் இன்ஜீனியரான முத்துக்குமாரிடம் பேசுகையில், ''பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் தட்டுப்பாடு போன்றவற்றால் அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேண்டாதவர்களைப் பழிவாங்கும் செயலில் மட்டுமே தீவிரம் காட்டுவதால், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவுக்கு அதிகமாக வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அது, இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும்'' என்றார் உற்சாகமாக.
வாக்காளர்களின் மனதில் இருப்பது யாரோ?

சனி, 25 பிப்ரவரி, 2012

ஜான்பாண்டியன் திமுகவுக்கு ஆதரவு?








தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் இன்று சங்கரன்கோவிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சங்கரன் கோவிலுக்கு வந்தார்.


நகரின் வைஸ்ணவி மகாலில் திரளாக கலந்துகொண்ட தனது கட்சியினரிடம் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தனித்துப் போட்டியிடவேண்டுமா? வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? என்று கேட்டு பதிலை துண்டு சீட்டில் எழுதித்தருமாறு கேட்டார்.

இதையடுத்து தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொடுத்தனர்.  ரகசிய கருத்து கேட்பு முடிவின்படி
தனித்துப்போட்டியிடுவதா?

அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்று முடிவெடுத்து அறிவிக்கும் அதிகாரம்
கட்சியின் நிறுவனர் ஜான்பாண்டியனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பேசிய ஜான்பாண்டியன்,   ‘’நீங்கள் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டீர்கள்.   நீங்கள்
எதிர்ப்பார்க்கும் வகையில் நல்ல முடிவினை மேற்கொள்வேன்’’ என்றார்.

ஆனால், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களோ திமுகவிற்கே ஆதரவு கொடுப்பதற்கே வாய்ப்புகள் இருக்கலாம் என்று
சூசகமாக தெரிவித்தனர்.














சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது: டாக்டர் கிருஷ்ணசாமி







சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

புதிய தமிழக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி,

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தினேன். அங்கு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படவில்லை. குடிநீர் வசதி, மயான வசதி போன்ற வசதிகள் இல்லை. கூட்டணி குறித்து விவாதம் செய்தோம்.

ஆளும் கட்சிகள் இடைத்தேர்தலில் அதிகாரம் செலுத்தும் நிலை கடந்த சில ஆட்சிகளில் உள்ளது. அதே நிலை இந்த ஆட்சியில் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். அங்கு 32 அமைச்சர்கள் முகாம் இட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். அவர்களை திரும்ப அழைக்க வேண்டும்.

நெல்லை பொறுப்பாளர்கள் தவிர பிற மாவட்ட பொறுப்பாளர்களை திரும்ப அழைப்பதன் மூலம் பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும். சட்டமன்ற தேர்தல் நடந்து 9 மாதம் தான் ஆகிறது. அதில் அ.தி.மு.க. பெரிய வெற்றி பெற்றுள்ளது.

எனவே இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

எனவே கால விரயம், பொருள் விரயத்தை தவிர்க்க சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது. தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஓரிரு நாளில் அரசியல் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்வோம்.

சென்னையில் நடந்த என்கவுன்டர் சம்பவம் ஏற்புடையதல்ல. 90 சதுரஅடி வீட்டில் இருந்து அவர்கள் தப்பி இருக்க முடியாது. அவர்களை கைது செய்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் போட்டியில்லை: கிருஷ்ணசாமி

மதுரை: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மேலும் அவர், சங்கரன்கோவில் தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும். தொகுதியில் 32 அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு சிறந்தது அல்ல. அவர்களை அங்கிருந்து திருப்பியழைக்க வேண்டும் என கூறினா

புதிய தமிழகம் விரும்பினால் ஆதரவு ஜான்பாண்டியன் பேட்டி

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்


நெல்லை: சங்கரன்கோவிலில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி ஆதரவு கேட்டால், நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம். இதுவரையில் எந்த கட்சியினரும் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. எங்களின் கோரிக்கைகளை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். பிப்.25ம் தேதி சங்கரன்கோவில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
 கூட்டணி குறித்து அதிமுக பேசினால், ஆடித்தபசு விழாவில் எங்கள் சமூகத்தினருக்கு மண்டகப்படி, தியாகி இமானுவேல்சேகரனுக்கு அரசு விழா, பரமக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது  வழக்குப்பதிவு ஆகிய கோரிக்கைகளை முன்வைப்போம். பரமக்குடியில் பலியான குடும்பங்களை பார்க்க முடியாதவாறு எனக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இதை கண்டித்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரிலும் தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். போட்டியின்போது  மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், இன்பராஜ், கண்மணிமாவீரன், மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ்,  இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், மாணவரணி செயலாளர் அருண் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது - கிருஷ்ணசாமி பேட்டி


நெல்லை: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டுமெனில் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 32 அமைச்சர்களை முதலமைச்சர் ஜெயலலிதா விலக்கி கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

அதிமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் மின்வெட்டு குறையவில்லை. அண்மை காலமாக சட்டம் ஓழுங்கு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி போலீசார் 5 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வேறு எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள் என விசாரித்து இருக்கலாம்.

இந்திய அரசியல் சட்டப்படி நீதித்துறை அனுமதியில்லாமல் யாருடைய உயிரையும் பறிக்க முடியாது. 5 பேரையும் சுட்டுக் கொன்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாளை சித்தா கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும். மாணவர்கள் படிப்பை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்களை அனுப்பியது தவறு. அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க அவர்களை விலக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் போட்டியா? கிருஷ்ணசாமி பதில்




சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து நாளை மதுரையில் நடக்கும் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என இக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.

நெல்லையில் மேலும் அவர் கூறுகையில்; தி.மு.க., ஆட்சியில் உள்ள குறைபாடுகள் அ.தி.மு.க., நீக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. சென்னையில் நடந்த என்கவுன்டர் தவறானது. இந்த சம்பவத்தில் சந்தேகம் எழுகிறது என்றார்