ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 13 ஜூன், 2011

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவித்து டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை

  






மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 14வது சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைமீது புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கருத்துகளை எடுத்து வைப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கக்கூடிய உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 200 ஆண்டுகாலத்திற்கு முன்பே தங்களை ஈடுபடுத்திக் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், தளபதி சுந்தரலிங்கம், உலகக் கவிஞர் பாரதியார், உமறுப் புலவர், வாஞ்சிநாதன், வ.உ.சி போன்ற சுதந்திர போராட்டத் தியாகிகள், சமுதாயப் போராளிகளையெல்லாம் அடையாளப்படுத்தி, பெருமைப்படுத்தி அவர்களை தந்த ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலே இருந்து என்னையும் 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு வெற்றி பெற வைத்து இந்த மாமன்றத்திற்கு அனுப்பி இருக்கக்கூடிய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்கள், குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர்கள், முக்குலத்து பெருமக்கள், நாடார் இன பெருமக்கள், பிள்ளைமார் இனம் என்று அனைத்து சமுதாய மக்களுக்கும், சமுதாய நல்லிணக்கத்திற்கு அடிக்கோலக்கூடிய வகையிலே என்னை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 2001-க்குப் பிற்கு ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த புதிய தமிழகம் கட்சியின் சார்பாக சட்டமன்றத்திலோ, நாடாளூமன்றத்திலோ வேறு எந்தப் பகுதியிலேயும் ஒரு பிரதிநிதி இல்லாத வேளையிலும்கூட நான் கடந்த 10 ஆண்டுக் காலமாக ஏழையெளிய மக்களுக்கு குரல் கொடுத்து புதிய தமிழகம் கட்சியை நடத்தி வருவதற்கு எனக்கு பல்வேறு வழிகளிலே அவர்கள் இப்போது உயிரோடு இல்லையென்றாலும் கூட என்னை ஈன்றெடுத்து கடந்த 30 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக பொது வாழ்க்கையிலே ஈடுபடுவதற்கு உற்ற துணையாக இன்னும் விளங்குகின்ற என்னுடைய தாய் தாமரை அம்மாள், தந்தை கருப்பசாமி அவர்களுக்கு இந்த வெற்றியை நான் காணிக்கையாக்குகிறேன். அதுபோல கடந்த 10 ஆண்டுக் காலமாக எல்லா சூழ்நிலைகளிலும் என்னோடு உற்ற துணையாக விளங்கிய புதிய தமிழகம் கட்சினுடைய தொண்டர்கள், பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அதுபோல தென் தமிழக தேவேந்திர குல மக்களுக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகின்றேன். சில பேர் வரலாறுகளில் எப்போதாவது இடம் பெறுவார்கள். சில பேர் வரலாறுகளை எழுதி வைப்பார்கள். ஆனால் வரலாற்றை படைப்பவர்கள் ஒரு சிலர் அந்த வரிசையில் 3-வது முறையாக தமிழகத்தினுடைய முதல்வராக பொறுப்பேற்றிருக்கின்ற (மேசை தட்டும் ஒலி) புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பல்வேறு வரலாறுகளுக்கு சொந்தக்காரர். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தமிழகத்தினுடைய நிலை என்னவாக இருந்தது என்று சொன்னால் ஒரு குடும்பத்தினுடைய ஆட்சி, அரசியல் சமூக பொருளாதார வாழ்விலே கிடைக்குமா? ஆட்சியை மாற்றி அமைக்க முடியுமா? அதற்கு யார் தலைமை தாங்குவார்கள், யாராவது இந்தத் தமிழ் மக்களை விடுதலை செய்வதற்கு முன்வருவார்களா என்று இந்தத் தமிழகத்திலேயிருந்து மட்டும் அல்ல தமிழகத்தினுடைய எல்லையிலிருந்து 10,000, 20,000 மைல்களுக்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் எண்ணி ஏங்கின. ஈழத் தமிழ் மக்கள் எண்ணி ஏங்கினார்கள். இதோ தமிழ் மக்களுக்கு தமிழகத்திலே வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கும் நான் விடுதலை கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்று அந்த மிதமிஞ்சிய பண பலத்தையும், ஆட்சிப் பலத்தினையும் எதிர் கொண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே தமிழக மக்களுக்கு விடிவுகாலத்தை உருவாக்கி இன்று மகத்தான ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும், அதேபோல என்னுடைய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலேயும் எங்களுக்கு அளிக்கப்பட்ட நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலேயும் பாடுபட்ட கூட்டணி கட்சியினுடைய அனைத்து வேட்பாளர்களுக்கும், நான் எண்ணி மலைக்கின்ற வகையில் எந்தவிதமான சிறிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பாடுபட்ட அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் (மேசை தட்டும் ஒலி) அனைவருக்கும் அதேபோல கூட்டணிக் கட்சியினுடைய முன்னணி செயல்வீரர்கள் தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, குடியரசுக் கட்சி, பார்வர்டு பிளாக், மனிதநேய மக்கள் கட்சி, ஆகிய கட்சியினுடைய முன்னணி செயல் வீரர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் வேட்பாளர்களான எங்களுக்கெல்லாம் பிரச்சாரம் செய்த அம்மா அவர்களுக்கும், அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சினுடைய மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் தா.பாண்டியன் அவர்கள், அன்பு சகோதரர் சரத்குமார் அவர்கள் அதேபோல முன்னாள் அமைச்சர் திரு.நயினார் நாகேந்திரன் ஆகியோர் எல்லாம் எனக்குப் பிரச்சாரம் செய்தார்கள் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் உரித்தாக்குகிறேன். இந்த ஆளுநர் உரையைப் பொறுத்தமட்டிலும் தமிழகத்தினுடைய வரலாற்றில் இது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்று நான் கருதுகிறேன். கம்யூனிஸ்டுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு வழிகாட்டி, மாவோஸ்டுகளுக்கு Red Book ஒரு வழிகாட்டி, லிபியாவினுடைய அதிபர் கடாபி அவருடைய பச்சைப் புத்தகம் ஒரு வழிகாட்டி அதேபோல இன்றைய ஆளுநர் உரை தமிழ்நாட்டு மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு அல்ல அடுத்த தலைமுறைக்கு (மேசைத் தட்டும் ஒலி) ஒரு வழிகாட்டியாக இருக்க்க்கூடியதாக நான் கருதுகிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய அனைத்து கருத்துகளையும் பேசுவதற்கு போதிய நேரம் இருக்காது. இருந்தாலும்கூட ஒருசில கருத்துகள் மீது எனது கருத்துக்களை பதிய வைக்க விரும்புகிறேன். குறிப்பாக நான்காவது பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய மிக முக்கியமானது கடந்த ஆட்சியில் பயமுறுத்தி பலருடைய சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களுக்கு மீண்டும் வழங்க ஏதுவாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று சொன்னது தமிழகத்திலே எந்த மாவட்டத்திற்கு பொருந்துமோ பொருந்தாதோ ஆனால் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு மிக அதிகமாக பொருந்தும். ஏனென்று சொன்னால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய விவசாய மக்களுடைய விவசாய மக்களுடைய நிலங்கள் பெரிய பெரிய கம்பெனிகளால் போலி பத்திரங்கள் செய்யப்பட்டு பட்டா மாறுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. கோஸ்டல் எனர்ஜெண்ட் என்ற ஒரு கம்பெனி இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை வளைத்துள்ளது. 4 கோயில்கள் உள்ளே இருக்கிறது, 4 சமுதாயத்தினுடைய சுடுகாடுகள் உள்ளடங்கி இருக்கிறது, 6 ஏரிகள் உள்ளடங்கி இருக்கின்றன. இவைகள் எல்லாம் அரசாங்கத்தினுடைய சொத்துக்கள். இவற்றையும் சேர்த்து பட்டா போட்டிருக்கிறார்கள். அதே போல இன்பாரத் என்ற கம்பெனி கடந்த ஒரு மாத்த்திற்கு முன்பு வரையிலும் ஏழை எளிய மக்களை ஏமாற்றி பட்டா போடுகிறார்கள். எனவே இது ஒரு சமூக அளவில் மிகப் பெரிய குற்றம். எந்தக் கட்சிக்காரர்கள் இதற்குத் துணை போனாலும் அவர்கள் மீது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்து அத்தனை சொத்துக்களையும் நீங்கள் மீட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டுமென்று நான் வலியுறுத்துகிறேன். அதே போல இப்போது குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்புத் திட்டம் (Crime and Criminal Tracking Network System) என்று ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக சொல்லப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் குறிப்பாக கொலை, கொள்ளை இந்த இரண்டும் தடுக்கப்பட வேண்டுமென்று சொன்னால் இதிலே அரசியல் தலையீடு எந்தக் காரனத்தைக் கொண்டும் இருக்கக்கூடாது. அதற்கு நாம் வழிவகை செய்தால் மட்டும் தான் இந்த இரண்டு மிகப் பெரிய சமூகக் குற்றங்களையும் தடுத்துட முடியும். எனவே எந்த அரசியல் தலையீடு இல்லை என்று தெரிந்தாலே அதிகாரிகள் அச்சப்படுவார்கள். அவர்கள் சரியாகப் போகிறார்களா, இல்லையா என்பதை நாம் சரியாகக் கண்காணிக்க முடியும். அரசியல் தலையீடு இருக்கின்ற பொழுது குற்றங்கள் தடுக்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே விஞ்ஞான முறைகளை கையாளுகின்ற அதே நேரத்தில் அரசியல் தலையீடும் இல்லாத வகையிலே பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது தான் இந்த ஆளுநர் உரையிலே என்னுடைய கருத்தாகும். அடுத்தது தமிழ் மொழியை வளர்ப்பதற்காக கோவையிலே செம்மொழி மாநாடு கூட்டினார்கள். ஆனால் அதே சமயத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தஞ்சையிலே துவக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைகழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காமல் முடக்கிய வரலாறும் உண்டு. இன்று அதே தமிழ்ப் பல்கலைகழகத்தை மீட்டெடுக்கக்கூடிய வகையில் போதிய நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி திருவள்ளுவர் அவர்களுடைய உயர்ந்த திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களுடைய கவிதை, கட்டுரைகள் உலக மொழிகளிலே மொழிபெயர்க்கப்படும் என்று அறிவித்திருப்பது உண்மையிலே தமிழை வளர்ப்பதற்குண்டான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாகும். ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அடிக்கடி வறட்சிக்கு இலக்காகும் பகுதி. தூத்துக்குடி மாவட்டம் கடலோர மாவட்டம் விளாத்திகுளம், புதூர், தூத்துக்குடி, கருங்குளம் ஒன்றியங்கள் எல்லாமே நல்ல நிலத்தடி நீர் இல்லாத பகுதி. ஆனால் அங்கே குடிப்பதற்கே இப்பொது எண்ணற்ற கிராமங்களில் கிராமக் குடிநீர் திட்டத்தை நம்பியே குடிநீர் பிரச்சனை சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஸ்டெர்லைட் கம்பெனி, இன்பாரத் கம்பெனி மற்றும் சுற்றி இருக்கக் கூடிய கம்பெனிகளுக்கும் ஆயிரக்கணக்கான லாரிகளிலே ஆழ்துளை கிணறுகளை வைத்து நீர் திருடுகிறார்கள். எனவே இதைத் தடுப்பதற்கு ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் என்று கொண்டுவரப்பட்டு இன்னும் முழுமையாக சட்டமாக்கப்படாமல் இருக்கிறது. எனவே தமிழ்நாடு மேலும் தமிழக அரசு இப்போது பல்வேறு நலத் திட்டங்களை அறித்திருக்கிறது. குறிப்பாக முதியோர் உதவித் தொகை , விதவைகள், ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு என்று பல சமூகத் திட்டங்கள் வருகின்றன. ஆனால் அந்தச் சமூக திட்டங்கள் எல்லாம் உண்மையிலே பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்று சொன்னால் 2002 ஆம் ஆண்டு மத்திய அரசினுடைய வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்டிருக்கக் கூடிய B.P.L என்று சொல்லக்கூடிய வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கக் கூடியவர்களுடைய அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு நிச்சயமாக இந்த திட்டங்களை அமலாக முடியவே முடியாது. எனவே புதிய வழிகாட்டுதலின்படி ஒரு B.P.L அதாவது வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கக்கூடியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டே தீரவேண்டும். இல்லையேன்று சொன்னால் என்னதான் திட்டங்கள் கொண்டு வந்தாலும் கூட நூற்றுக்கு ஓரிரு பேருக்காவது சென்றடையுமா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. ஏனென்று சொன்னால் இப்போது முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு 17 பாயிண்ட்ஸ் வேண்டுமென்று சொல்கிறார்கள். இதை பார் தயாரிக்கிறார்கள் என்று சொன்னால் விநோதமாக, விந்தையாக இருக்கிறது. சாதாரண ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு அங்கன்வாடி அமைப்பாளர் வீட்டுக்கு செல்வது ஓட்டு வீடா, காரை வீடா என்று பார்ப்பது, ஆடு இருக்கிறதா, மாடு இருக்கிறதா என்று பார்ப்பது உடனடியாக அவர்கள் வறுமைக்கோடிற்க்குக் கீழே இருக்கின்றவர்களா? இல்லையா என்று முடிவு செய்து விட்டு அறிவித்து போய்விடுகிறார்கள். நாங்கள் கடந்த ஒரு மாத காலமாக நன்றி தெரிவிக்க செல்கின்ற பொழுது பெறக் கூடிய மனுக்கள் 100 என்று சொன்னால் அதில் 90 மனுக்கள் முதியோர் உதவித் தொகை கேட்டே பெறப்பட்டன. எனவே அடுத்த தேர்தலுக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கும் நிச்சயாக இந்த அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிலே இருக்கும் (மேசையைத் தட்டும் ஒலி) தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக அம்மா அவர்கள் வீற்றுருப்பார்கள். ஆனால் நிறைய திட்டங்கள் அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த சமூக நலத் திட்டங்கள், முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர் இதுபோன்ற திட்டங்களை மட்டுமே நூற்றுக்கு நூறு அமலாக்குவதற்கு உண்டான சரியான வழிமுறைகளை கையாண்டாலே இந்த அரசு மிகப் பெரிய வெற்றியை அடைந்து விடும் என்பதே நான் வைக்கக்கூடிய கருத்தாகும். அடித்தது ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலே பல்வேறு சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன, ஏற்கனவே அந்த பகுதி வறண்ட பகுதியாகும். அரசின் சார்பாக அந்த நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு உடனடியாக சட்டம் இயற்றி அதை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் வலியுறுத்துகிறேன். அடுத்தது ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டிலும் மிக முக்கியமாக தூத்துக்குடி ஒன்றியம் மற்றும் கருங்குளம் பகுதிகளிலே வாழக்கூடிய ஏழை எளிய மக்கள் விவசாய மக்கள் பாதிக்கக் கூடிய வகையிலே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கன்னடியன் கல்வாய் என்ற ஒரு உபரிநீர் கால்வாய் வேறு ஒரு பகுதிக்கு கொண்டு செல்வதற்காக அங்கு ஏற்கெனவே இருந்த கன்னடியன் அணையினுடைய நீர் மட்டம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி ஒன்றியம், கருங்குளம் ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் பகுதியிலே பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பிற்கு ஆளாகக் கூடிய நிலை இருக்கிறது. ஒரு பகுதி விவசாயிகளுடைய கண்ணீரை எடுத்து இன்னோரு பகுதிக்கு பன்னிராக தெளிப்பது நியாயமாக இருக்காது. எனவே கன்னடியன் அணைக்கட்டு உயர்த்தப்பட்டதை உடனடியாக உடைத்தெறியப்பட வேண்டும். அப்போதுதான் ஏற்கெனவே அந்தப் பகுதியிலே வளம் பெற்ற விவசாயிகள் வாழ்வு மலர்ந்து இருக்க முடியும். ஆகவே அதற்கு ஆவன செய்யவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். அடுத்தது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு. கடந்த 50 ஆண்டுகாலாக முறையாக அமலாக்கப்படாததால் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் எத்தனை சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், எத்தனை திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் கூட இன்னும் அந்த மக்களுடைய வாழ்க்கைத்தரம் முழுமையாக உயர்ந்தபாடில்லை. நிலமற்றவர்கள் என்ற கணக்கு பார்த்தால், வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கக்கூடியவர்கள் என்று கணக்கெடுத்தால் அதில் தாழ்த்தப்பட்ட மக்களிலே பெரும்பாலானவர்கள். எனவே குறிப்பாக பல்வேறு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள பின்னடைவு பணியிடங்கள், இலட்சக்கணக்கான பின்னடைவுப் பணியிடங்கள் அரசு பதவிகள் இருக்கின்றன. எனவே அந்தப் பின்னடைவுப் பணியிடங்களை எல்லாம் நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும் அதுவும் குறிப்பாக உயர் பதவிகளிலே வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஒரு பல்கலைகழகத்தில் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக இல்லை. அரசு செயலாளர்கள் 34 பேர்களில் ஒரிருவர் மட்டும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் இரும்பு மங்கையாக இருக்கக் கூடிய அம்மா அவர்களிடத்திலேதான் நாங்கள் இந்தக் கோரிக்கையை வைக்க முடியும்.. சமுதாய நலனுக்கு எப்படியெல்லாம் அவர்கள் குரல் கொடுக்கிறார்களோ, உற்ற துணையாக விளங்குகிறார்களோ அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களுடைய நிலை உயர வேண்டுமென்று சொன்னால் அவர்கள் ஒருவரால் தான் சாத்தியம் ஆகும். இன்னும் கூட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்தில் ஆளுநர் உரையிலே வேண்டிக்கொள்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தேவேந்திர குல மக்களுக்கு, ஆதிதிராவிட மக்களுக்கு, அருந்ததிய மக்களுக்குக் கூட கூடுதல் பொறுப்பு கொடுத்து நீங்கள் தான் ஒரு அடையாளத்தை உருவாக்கித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளிலே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அந்த சமுதாய மதிக்கப்படும். தமிழகத்திலே மிகப்பெரிய ஒரு சமுதாய புரட்சி ஏற்பட வேண்டுமென்றுச் சொன்னால் அது அம்மா அவர்களால் தான் முடியும். அதன் காரனமாகத்தான் இந்தப் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறோம். அடுத்து நீண்ட நெடுநாட்களாக தேவேந்திர குல வேளார்கள் தங்களுடைய பெயரை பள்ளர், குடும்பர், காலாடி என்ற பெயரையெல்லாம் ஒரே பெயராக தேவேந்திர குல வேளாளர்கள் என்று வைக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் மதுரையிலிருந்து தெற்கு மாவட்டங்கள் மிக மிக பின்தங்கியிருக்கிறது. தென் தமிழகம் முன்னேறவேண்டுமென்று சொன்னால் முதலிலே தொழிற்சாலைகள் எந்தக் காரனத்தைக் கொண்டும் சுற்றுப்புறச் சூழலை பாதிக்கக் கூடிய தொழிற்சாலைகளாக இருக்கக்கூடாது. தூத்துக்குடியிலே ஸ்டெர்லைட் ஆலை இருக்கிறது அந்த ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசுபடுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லுகின்ற காரணத்தினாலே உயிர் இழப்பு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட தொழிசாலைகள் வரக்கூடாது. கடந்த ஆட்சியில் 30 தொழிற்சாலைகள் கொண்டு வந்தார்கள். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே நின்றுவிட்டன. நம்முடைய ஆட்சியில் இனிமேல் எந்தத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் ஒன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகரிலே என்று மாறிமாறி இருக்கவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். மேலும் தென்தமிழகத்துக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்க வேண்டாமென்று சொன்னால் நான் புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் கேட்டுக் கொள்வது ஆண்டுக்கு ஒரு முறையாவது சட்டமன்ற கூட்டத்தை மதுரையிலே நடத்திட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதன் வாயிலாக தென் தமிழகத்துக்கு ஒரு முக்கியத்துவம் கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படும். மதுரையிலே விமானநிலையத்திற்கு பெயர் வைக்க கடந்த 10 ஆண்டுகாலமாக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் ஏனென்று சொன்னால் சுதந்திர போராட்ட காலத்திற்குப் பிறகு அப்பொழுதே ஆங்கிலேயருடைய காலத்திலேயே அந்த மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் சின்ன உடைப்பை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள். எனவே அரசாங்கத்தினுடைய விதிகளின் படி யார் நிலத்தை அரசாங்கத்தினுடைய கட்டிடங்களுக்கு கொடுக்கிறார்களோ அவர்கள் விரும்பக்கூடிய பெயரைச் சூட்ட வேண்டும் என்பது அந்த அடிப்படையிலேயும், சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய வகையிலேயும் ஒரு முனையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் பெயரையும் இன்னோரு முனையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரையும் சூட்ட வேண்டுமென்று என்னுடைய வேண்டுகோளை வைத்து இதிலே பேசுவதற்கு வாய்ப்பு அளித்தத் தங்களுக்கு நன்றி கூறிவிடை பெறுகிறேன். வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக