ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 5 மே, 2012

தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறித்து காரசார விவாதம்

சென்னை: தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறித்து, சட்டசபையில் நேற்று காரசாரமாக விவாதம் நடந்தது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி பேசும்போது,தீண்டாமை ஒழியும்போது, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் தானாக போய்விடும், என்றார்.
ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:
கிருஷ்ணசாமி-புதிய தமிழகம்: ஆதிராவிட, பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக, சிறப்பு உட்கூறு திட்டத்தை, இந்திரா பிரதமராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அத்திட்டங்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில், இத்திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, சிந்தாமல், சிதறாமல் மக்களைச் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். (இதையடுத்து, கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தின.)
உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி: ஜாதியை முன்னிறுத்தி உறுப்பினர் பேசுகிறார். ஜாதியை முன்னிறுத்தி, ஆதிராவிட, பழங்குடியின மக்களின் வேகத்தை குறைக்க வேண்டாம். அவர்களின் திறமையை குறைக்க வேண்டாம்.
பாலபாரதி-மார்க்சிஸ்ட்: ஜாதியை முன்னிறுத்துவதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசே நடத்துகிறது. ஜாதி அமைப்பு என்பது, நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இருந்தாலும், பல இடங்களில் தீண்டாமை கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. திறமைக்கும், ஜாதிக்கும் சம்பந்தமில்லை.
அமைச்சர் முனுசாமி: திறமை இருந்தால், ஜாதியைப் பற்றி இழுக்க வேண்டியதில்லை என்று தான் கூறினேன். தீண்டாமை இருப்பதாக உறுப்பினர் கூறுகிறார். எந்த மாவட்டம், எந்த கிராமத்தில் என்று குறிப்பிட்டு கூற வேண்டும்.
பாலபாரதி: இது தொடர்பாக நான் வெட்டுத் தீர்மானமே கொடுத்துள்ளேன். அதில், விவரமாக உள்ளது.
அமைச்சர் முனுசாமி: வெட்டுத் தீர்மானம் இறுதியானது கிடையாது. அதைப்பற்றி அரசு முழுமையாக விசாரித்து, உண்மையை அறிந்தால் மட்டுமே ஒரு முடிவுக்கு வர முடியும். வெட்டுத் தீர்மானம் கொடுத்து விட்டாலே, அது தான் உண்மை என்று ஆகிவிடாது.
சவுந்தரராஜன்-மார்க்சிஸ்ட்: தீண்டாமை ஒழிக்கப்படாதபோது, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் மட்டும் எதற்கு?
அமைச்சர் முனுசாமி: தீண்டாமை ஒழியும் வரை, அது மறையும் வரை சட்டம் இருக்கும். ஒரு கட்டத்தில் தீண்டாமை ஒழியும்போது, சட்டம் தானாக போய்விடும்.
கிருஷ்ணசாமி-புதிய தமிழகம்: எஸ்.சி., என்றால், பட்டியல் இனம் என்று தான் பொருள். இந்த பட்டியல் இனத்தில், 76 ஜாதிகள் உள்ளன. அதில் ஒரு ஜாதிதான் ஆதிராவிடர். ஆனால், ஒட்டுமொத்த இனங்களுக்கும் சேர்த்து பொதுவாக ஆதிதிராவிடர் என அழைப்பது சரியல்ல. வட மாநிலங்களில், ஆதிராவிடர் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
செ.கு.தமிழரசன்-இந்திய குடியரசுக் கட்சி: 1921ல் இதே சபையில், அனைத்து ஜாதிகளுக்கும் சேர்த்து தான் ஆதிதிராவிடர் என குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்: விவாதம் எங்கேயோ போகிறது. இத்துடன், இப்பிரச்னையை நிறுத்திவிடுவது நல்லது. இவ்வாறு விவாதம் நடந்தது.
பாக்கு கேள்வியால் சிரிப்பலை: சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆத்தூர் தொகுதியில் பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? என, அ.தி.மு.க., உறுப்பினர் மாதேஸ்வரன் கேள்வி எழுப்பினார். அதற்கு,பாக்கு கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான சாத்தியம் இல்லை என, வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் பதிலளித்தார். அதைதொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர் சின்னசாமி, பாக்கு மருத்துவ குணம் கொண்டதா? என கேட்டவுடன், அவையில் உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தாமோதரன்,குடற்புழு நீக்கம், தோல் வறட்சி போக்குதல், ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தல் போன்ற மருத்துவ குணம் உடையது. அதேபோல், தொழிற்சாலைகளில் தோல் பதனிடுதல் போன்ற பல பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகம் பயன்படுத்தினால் சிறு மூளை பாதிக்கும். போதை வாஸ்து கொண்ட பாக்கு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார். பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்வியால், அவையில், நீண்ட நேரம் உறுப்பினர்களின் சிரிப்பலை தொடர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக