ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 மே, 2011

டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து மக்கள் குறைகளை கேட்டு அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.






காலையில் கருங்குளத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமிற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உயர் அதிகாரிகளை தொழிலதிபர் செந்தில் தலைமையிலான பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.





ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பேசுகையில், "கருங்குளத்திலும், புதுக்கோட்டையிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை முதியோர், விதவைகள் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை தொடர்பானது.





சமுதாயத்தில் ஆதரவற்ற அவர்களின் துயர் துடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி சிறப்பு கிராமசபை கூட்டம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வல்லநாடு, தெய்வசெயல்புரம், வாகைக்குளம், புதுக்கோட்டை, பேருரணி ஆகிய இடங்களில் பாயின்ட் டூ பாயின்ட் வாகனங்கள் என்று பேருந்துகள் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் மாணவர்கள், நோயாளிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் அவல நிலை உள்ளது. இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் வல்லநாட்டிலும், புதுக்கோட்டையிலும் தனி ஆய்வாளர் நியமித்து கண்காணிப்பு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர். தனியார் வாகனங்களை நிறுத்தாமல் விதியை மீறி சென்றால் ஓட்டுனர், நடத்துனர் உரிமம் ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் உறுதி அளித்துள்ளார்.





குடிநீர் பிரச்சனை பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. தற்காலிகமாக லாரி மூலம் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்படும். பின்னர் ஆழ்குழாய் கிணறு மூலமாகவோ, சீவலப்பேரி கூட்டு குடிநீர் மூலமாகவோ ஒரு மாத காலத்திற்குள் நிரந்தர தீர்விற்கான வழி காணப்படும். சமுதாயக்கூடம், அங்கன்வாடி, நூலகம் போன்ற கோரிக்கைகளுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்லம்பரும்பு, சிறுப்பாடு, அல்லிக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்துகள் செல்வதில்லை என்ற குறை நிவர்த்தி செய்யப்படும்.





ரேசன் கடைகள் இல்லாத அய்யனடைப்பு, சிறுப்பாடு போன்ற கிராமங்களுக்கு பொது விநியோக திட்ட அதிகாரிகள் ரேசன் கடைகள் அமைத்து தர உறுதி கொடுத்துள்ளனர். பள்ளி குழந்தைகள் பேருந்துகளில் ஏற்றி செல்லப்படுவது கண்காணிப்பு செய்யப்படும். காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளோ அல்லது நேர மாற்றமோ செய்து மாணவர்களின் குறைகள் தீர்வு காணப்படும். இணைப்பு சாலைகள் இல்லாத கிராமங்களுக்கு சாலைகள் அமைத்து தரப்படும். முக்கியமாக எந்த திட்டம் என்றாலும் அதிகாரிகள் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது.





பொதுமக்களும் பணம் கொடுத்து எந்த காரியமும் செய்து விடலாம் என நினைக்க கூடாது. இது ஆரம்பம்தான் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை இது போன்ற முகாம்கள் நடைபெறும். மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் முழு ஒத்துழைப்பு தருகின்ற வகையில் செயல்படும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.





இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வர் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.





அரசுத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி ஆட்சியர் லதா, வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேல், அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் நாராயணசாமி, கருங்குளம் வட்டார ஆணையாளர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் லீமாரோஸ், பொறியாளர் கணேசன், நெடுஞ்சாலை பொறியாளர் கிருஷ்ணசாமி, பொதுப்பணித்துறை பொறியாளர் சாமுவேல், தூத்துக்குடி தாசில்தார் கலியங்கவரதன், தனி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், தூத்துக்குடி வட்டார ஆணையாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் பல்வேறு துறையின் உயரதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்கள் பெற்று அவற்றிற்கு உடனடி பதில் அளித்தனர். கருங்குளத்தில் 974 மனுக்களும், புதுக்கோட்டையில் 768 மனுக்களும் பெறப்பட்டு அவை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.கிருஷ்ணசாமியின் பரிந்துரைக்குப் பின்பு உரிய துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் மதுரம் பாஸ்கர், மாநில தொண்டரணி செயலாளர் லட்சுமணப்பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ், விருதுநகர் மாவட்ட செயலாளர் ராம்ராஜ், தொழிலதிபர் செந்தில், அயிரவன்பட்டி முருகேசப்பாண்டியன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் பெருமாள், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் பாபு, நெல்லை மாவட்ட பொறுப்பாளர் அரவிந்த் ராஜா, அசோக்குமார், சி.பி.எம். கருங்குளம் ஒன்றிய செயலாளர் மாரியப்பன், அ.தி.மு.க. முன்னாள் கருங்குளம் ஒன்றிய செயலாளர் பிள்ளைமுத்து, தூத்துக்குடி ஒன்றிய விவசாய அணி செயலாளர் வி.பி.ஆர். சுரேஷ், சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க., பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





சனிக்கிழமை காலை தாளமுத்து நகரிலும், மதியம் ஓட்டப்பிடாரத்திலும் இதே போன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக