ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 10 ஜூலை, 2014

சட்டசபையில் கூச்சல்-குழப்பம்...

சென்னை, ஜூலை 10:தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  
.
சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து தொடர்பாக இன்று அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து அதை விவாதிக்க எதிர்க்கட்சித் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு விதிப்படி அவையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்ததால் அவையில் சிறிது நேரம் கூச்சல்-குழப்பமும், அமளியும் நிலவியது.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் திமுக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய 7 கட்சிகளின் உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று குரல் எழுப்பினார்கள்.

போரூர் மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக தாங்கள் கொடுத்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதித்திற்கு எடுத் துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால் சட்டப்படியாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்து விட்டதால் இந்த பொருள் குறித்து இந்த மன்றத்தில் விவாதிக்க முடியாது என்று கூறினார்.

அப்போது ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உரத்த குரல் எழுப்பினார்கள். விவாதித்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திய நிலையில் அவர்களுக்கு எதிராக அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து அவர்களுக்கு பதில் தர தயார் என்று கூறினார்.

அப்போது அவையில் சிறிது நேரம் கூச்சல்-குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சி தரப்பில் இருந்தும் ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும் எதிர் எதிராக குரல் எழுப்பிய நிலையில் அவை பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் வைத்தியலிங்கம் உங்களுக்கு தைரியம் இருந்தால் என் பதிலை கேளுங்கள். அப்புறம் பேசுங்கள் என்று கூற அவருடைய கருத்தை வரவேற்று அதிமுக உறுப்பினர்கள் பலமாக மேஜையை தட்டினர்.

தொடர்ந்து எதிர்க்கட்சியினர் நின்று கொண்டே குரல் எழுப்பியதால் சபாநாயகர் தனபால் எழுந்து அவர்கள் அனைவரும் இருக்கையில் அமர வேண்டும் என்று எச்சரித்தார். இந்த நேரத்தில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து நேரமில்லாத நேரம் (ஜீரோ அவர்) எதிர்க்கட்சி தரப்பில் கட்சி ஒருவரு“ எழுந்து பேசினால் அதற்கு பதில் கிடைக்கும். இந்த பிரச்சனையில் சபாநாயகர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கேளுங்கள். அதை விட்டு குழப்பம் விளைவிப்பது நியாயமா என்று கூறினார்.

உடனே திமுக, தேமுதிக தரப்பில் இருந்து பேச முயன்றனர். மீண்டும் அவர்களுக்கு அனுமதி மறுத்த சபாநாயகர் தனபால் விசாரணை கமிஷனர் அமைத்திருப்பதால் பேரவை விதி 66-ன் படி இது குறித்து இங்கு பேச முடியாது என்று உறுதியுடன் கூறினார்.

அப்போது அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் எழுந்து விசாரணை கமிஷனுக்கு குந்தகம் ஏற்படாத நிலையில் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். என் பதிலுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று உரத்த குரலில் கேள்வி எழுப்பினார். அப்போது எதிர்க்கட்சி தரப்பில் மீண்டும் ஒட்டுமொத்தமாக எழுந்து குரல் எழுப்பினார்கள்.அவர்களை சபாநாயகர் எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக