ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு டாக்டர் கிருஷ்ணசாமி!

இன்று 2014, அக்டோபர் 28. புதிய தமிழகத்தின் சாதனைகளில் என்னை மிகவும் கவர்ந்த சரித்திர சாதனை நிகழ்ந்த நாள்தான் இன்று. ஆம்! இதே அக்டோபர் 28-ஆம் நாளை சுமார் 10 ஆண்டுகள் பின்னோக்கி 2003-ஆம் ஆண்டிற்குச் சென்று புதிய தமிழகத்தின் வரலாற்றுச் சுவடுகளில் பார்த்தால் இன்றைய தினத்தின் சிறப்பு தெரியும்.
1990-களின் மத்தியில் தமிழ்நாடு முழுவதிலும் புரையோடிப்போயிருந்த சாதி என்னும் உயிர்கொல்லி நோயை விரட்டியடித்து, சாதி ஆதிக்க வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்து புறமுதுகிட்டு ஓடச்செய்த சரித்திர சாதனைக்கு சொந்தக்காரரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல, இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் கூட… ஆம்! இந்தியா முழுவதும் புரையோடிப்போயிருந்த இந்துத்துவ ஆதிக்கவெறி ‘விசுவ இந்து பரிஷத்’ எனும் பெயரில் தமிழகத்தில் நுழைய முயற்சித்தபோது முதல் ஆளாக போர் தொடுத்து இந்துத்துவ ஆதிக்க வெறியர்களை பின்னிட்டுப் பார்க்காமல் ஓடச்செய்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் என்பது இங்கே அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் ஏதோ ஒரு அரசியல் தலைவர் என்று மட்டும் தான் இங்கு அநேகர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவருடைய புரட்சிகரமிக்க போராட்ட வரலாற்றுச்சுவடுகளை அறிந்தவர்களுக்குத் தான் அவர் ஒரு “சமூகசமநீதிப் போராளி” என்பது தெரியும்.
இந்துத்துவ ஆதிக்கவெறியர்களின் பரிவாரங்களில் ஒன்றான விசுவ இந்து பரிஷத், தான் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்துக்களைப் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில், ஆர்.எஸ்.எஸ்.-ன் அடையாளமாக திரிசூலம் (சூலாயுதம்) எனும் ஆயுதத்தை தன்னுடைய தொண்டர்களுக்கு வழங்கி இந்துத்துவத்தின் வேரை இந்தியாவெங்கும் பரப்பிக்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக தனக்கு தொண்டர்களே இல்லாத தமிழகத்தில் வேரொரு ரீதியாக திரிசூலம் வழங்க விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டிருந்தது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ல் அணுசரிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவரின் நினைவு நாள் நிகழ்வையொட்டி அந்த குறிப்பிட்ட சாதியின் இன்றைய தலைவர்களில் ஒருவரான முருகன் என்பவரின் ஏற்பாட்டில் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் ஒரு மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை தயார் செய்து, அந்தக் கூட்டத்தில் வைத்து விசுவ இந்து பரிஷத்-ன் அகில உலக தலைவரான ‘பிரவீன் தொகாடியா’ தலைமையில் அக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு திரிசூலம் வழங்கி இந்துத்துவத்தை தமிழகத்தில் பரவலாக்க திட்டமிட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளும் வெகு மும்முரமாக முடுக்கிவிடப்பட்டன. விழாவுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து திரிசூலத்தை வழங்குவதற்காக தலைவர்களும், வாங்குவதற்காக தொண்டர்களும் தயார் நிலையில் இருந்தனர். இந்துத்துவ ஆதிக்க வெறியின் வாடையே நுகரப்பட்டிராத தமிழகத்தில் அத்தகைய தவறேதும் நடந்துவிடக்கூடாது, இங்கு நிலைகொண்டிருக்கும் சமூகநல்லிணக்கத்துக்கு சீர்குலைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் முதல் ஆளாக தன்னுடைய அஸ்திரத்தை இந்துத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக தொடுத்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆம்! “அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் விசுவ இந்து பரிஷத் தலைவர் தனது தொண்டர்களுக்கு திரிசூலம் கொடுப்பதற்கு இந்த அரசு அனுமதித்தால் அதே மதுரையில் அதே 28-ஆம் நாள் நான் என்னுடைய தொண்டர்களுக்கு வாள் கொடுப்பேன்” என்பது தான் அந்த அஸ்திரம். அதோடு மட்டுமல்ல, புதிய தமிழகம் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வாள் கொடுக்கும் விழாவுக்கான அனுமதியும் கோரப்பட்டது. இதனையடுத்து தென்மாவட்டங்களில் அசாதாரண சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு உடனடியாக திரிசூலம் வழங்கும் விழாவிற்கு தடை விதித்தது. ‘விசுவ இந்து பரிஷத்தும், அந்த குறிப்பிட்ட சாதி அமைப்பும் தயார் நிலையிலிருந்த தன்னுடைய விழாவை கைவிட்டன’. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தில் அ.தி.மு.க. என மதவாத அரசுகள் ஆட்சியிலிருந்த காரணத்தால் மத்திய மாநில அரசுகளின் துணையோடு பெரும் துணிச்சலோடு தயார்படுத்தப்பட்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா மூலம் தமிழகத்தினுள் நுழையவிருந்த மதவாதம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகண்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா எனும் ‘இந்துத்துவ ஆதிக்கவெறியை’ தமிழகத்தின் எந்த அரசியல் கட்சிகளும் எதிர்க்க முன்வராத, துணிந்திராத சூழலில் தனியொரு ஆளாக சாதி ஆதிக்கம், மதவெறி ஆதிக்கம் ஆகிய இரண்டையும் ஒருங்கே எதிர்த்து நின்று, ஒற்றை அஸ்திரத்தால் இரண்டு ஆதிக்க வெறிகளை தூள்தூளாக்கி ஓடச்செய்த சரித்திர சிறப்புமிக்க சாதனையாளரான டாக்டர் அய்யா அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல… இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் டாக்டர் அய்யா அவர்கள் மட்டுமே…
இங்கே ஒன்றை கண்டிப்பாக சுட்டிக்காட்டியே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழகத்தின் வரலாற்றுக் காலகட்டங்களில் சங்ககாலம் வரையில் இந்து என்றொரு சமயமே இருந்ததில்லை. சங்ககாலத்தின் இறுதியில் அதுவும் பல்லவர் காலத்தில் தான் இந்து என்கிற மதமே தமிழகத்தினுள் ஊடுருவி உறவாடுகிறது. பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களையும், கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அழித்தொழித்து தன்னுடையவைளை உட்புகுத்தி தமிழர்களின் அடையாள அழிப்பு நிகழ்ந்ததே இந்த இந்து சமய வருகைக்குப் பின்புதான் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிலவுடைமையாளர்களாக இருந்த தமிழர்களை குறிப்பாக உழவர்களை நிலமற்றவர்களாக்கி பண்ணை அடிமைகள் என்ற நிலைக்கு கொண்டு சென்றதும் இந்த இந்து மதம் தான்.
"நான் மேலே கூறிய சாதி ஆதிக்கம் மற்றும் இந்துத்துவ ஆதிக்கத்திற்கும் அடுத்து கூறிய தமிழர்களின் சுருக்க வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதாவது சங்ககாலத்திற்கு பின்பு தமிழ்நாட்டிற்கு வடக்கே சாளுக்கியர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிவரை பரவியிருந்த இந்து மதமானது தமிழ் மன்னர்களை வீழ்த்தி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு எந்த தமிழ்ச்சமூகம் அன்று துணையாக இருந்ததோ அதே தமிழ்ச்சமூகம் தான் இன்று அதே தமிழர்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பாக உருவாக்கப்பட்டு விசுவ இந்து பரிஷத் எனும் இந்துத்துவ ஆதிக்கத்தோடு கைகோர்த்து நிற்கிறது. பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ச்சமூகங்கள் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை எதிர்த்தனவோ இல்லையோ, ஆனால் இந்த இருபத்து ஓன்றாம் நூற்றாண்டில் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை ஒற்றை மனிதனாக அதிவேக நெஞ்சுரத்தோடு எதிர்த்து பண்டைய தமிழர்களின் வீரத்திற்கு இன்றளவும் செயல்வடிவம் கொடுத்து நிற்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் போர்குணமிக்க போராட்டங்களின் வாயிலாக
சாதி, மத பேதமற்ற சமத்துவ சமூகத்தை அமைப்போம்!
புதிய தமிழகம் படைப்போம்!!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக