ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 27 டிசம்பர், 2014

பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது...

பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய உலகில் மிக உயரிய விருது என்ற அங்கீகாரம், சாகித்ய அகாடமி விருதுக்கு உண்டு. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும், பாராட்டுப்பத்திரத்தையும் கொண்டதாகும். இந்த விருது, படைப்பாளிகளின் கனவாக உள்ளது.

இந்த ஆண்டு 20 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு, டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் தமிழ் மொழிக்கான விருது, பிரபல எழுத்தாளர் பூமணி (வயது 68) எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘அஞ்ஞாடி’ நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1,066 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.925.

இந்த நாவல், தமிழ்நாட்டில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இரு சாதிக்கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமுதாயத்தின் ஒவ்வொரு தளத்திலும் நிகழ்கிற வன்முறை, மனிதர்களைப் பிரிக்கிற வன்முறையின் இடையேயும் இழையோடுகிற ஆண்டி-மாரி என்னும் இருவரிடையேயான தூய நட்பு, மண்ணையும், மனிதர்களையும் பிணைக்கிற அன்றாட வாழ்வின் அற்புதங்கள் ஆகியவற்றை சித்தரிக்கிறது. 10 ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து, தனக்கே உரித்தான அற்புதமான நடையில் பூமணி எழுதி உள்ளார்.

வரும் மார்ச் மாதம், 9-ந்தேதி டெல்லியில் நடக்கிற விழாவில் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் பூமணி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்க வாசகம். விருதுநகர் செந்திகுமார் நாடார் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் படித்து, கூட்டுறவு துறையில் வேலைக்கு சேர்ந்தார். 2005-ம் ஆண்டில் கூட்டுறவு துணை பதிவாளராக சென்னையில், பணி ஓய்வு பெற்ற அவர், அதன்பின்னர் கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.

இவருக்கு செல்வம் என்ற மனைவியும், கவிதா என்ற மகளும், சிபி, ரவி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மகள், மகன்களுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்கள்.

சிறுவயதிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த பூமணிக்கு, ஏற்கனவே பல விருதுகள் கிடைத்து இருக்கின்றன. அதில் ‘அஞ்ஞாடி’ நாவலுக்கு மட்டும் 6 விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து எழுத்தாளர் பூமணி கூறியதாவது:-

பள்ளிக்கூடம், கல்லூரியில் படித்த போதே இலக்கிய ஆர்வம் இருந்தாலும், 1966-ம் ஆண்டில் கவிதை, சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். பின்னர் நாவல் எழுதும் ஆவல் ஏற்பட்டது.

‘பிறகு’, ‘வெட்கம்’, ‘நைவேத்யம்‘, ‘வரப்புகள்’, ‘வாய்க்கால்’ என்று வரிசையாக பல நாவல்கள் எழுதினேன். அதன் பின்பு எழுதப்பட்டதுதான் ‘அஞ்ஞாடி’ நாவல்.

வரலாற்று பின்னணியை கொண்டது என்பதால், அஞ்ஞாடி என்று பெயரிட்டேன். பலதரப்பட்ட தகவல்களும் அடக்கம் என்பதாலேயே, அதற்கு அவ்வாறு பெயர் வைத்தேன். ‘அம்மாடி’ என்று கிராமத்தில் அடிக்கடி கூறுவார்கள். அதன் தழுவலாகவும் இந்த சொல்லை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நாவலுக்கு மிகப்பெரிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்து இருக்கிறது. இதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த சமயத்தில் எனது எழுத்துக்கு ஊக்கம், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு எழுத்தாளர் பூமணி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக