ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்தில் உதித்த வீரத்திலகம்.வெண்ணிக்காலாடி






1759 நவம்பர் 6ஆம் நாள் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வல் கோட்டையை கூலிப்படைத் தளபதி கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது கூட்டணி படைகளில் 400க்கும் மேற்பட்டவர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னை திரும்பிய கான்சாகிப், வீரத்தால் வீழ்த்த முடியாத பூலித்தேவரை துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்த திட்டமிட்டான்.



துரோகிகளுக்கா பஞ்சம்! நடுவக்குறிச்சி பாளையக்காரனை கைக்குள் போட்டுக்கொண்டான். இவர்கள் பூலித்தேவரின் வீரர்களுக்குப் பணத்தாசை காட்டித் தம் கூட்டணிக்கு இழுத்தனர். மீண்டும் துரோகிகளை நம்பி கான்சாகிப் படையினர் பூலித்தேவரைத் தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப் பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர். இதை அறிந்த பூலித்தேவரின் வீரர்கள் சென்று இந்த துரோக கோழைக் கும்பலைத் தாக்கலாயினர்.



பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரத்திலகம். கான்சாகிப் ஒரு மேட்டுப்பகுதியை கோட்டையை தாக்க ஏற்றது போல உருவாக்கிக் கொண்டிருந்தான். தளபதி வெண்ணிக்காலாடி சில நூறு வீரர்களுடன் இந்த கான்சாகிப் படையை தாக்கினார். கடும் போர் நடந்தது. அப்போது மறைந்திருந்த கும்பினிக்காரன் வெண்ணிக்காலாடியின் வயிற்றில் குத்தினான். வயிறு கிழிந்து வெண்ணிக்காலாடியின் குடல் வெளியே தொங்கியது.



வெண்ணிக்காலாடி சரிந்த தன் குடலை தம் கையால் உள்ளே தள்ளி தலைப்பாகையால் அதனை இறுகக் கட்டினார். பின்னர் பல கும்பனிக்காரர்களுக்கும் கான்சாகிப்பின் வீரர்களுக்கும் வீர சுவர்க்கத்தை அருளினார். வெற்றி முழக்கத்துடன் பகைவரைப் புறங்கண்டார். மீண்டும் தோல்வியுடன் ஓடினான் கான். வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறிய பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது.



பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீர பூலித்தேவர், அவ்வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறிக் குமுறி கண்ணீர் சிந்தினார்.



பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி

பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே

பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி

பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…



எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை

எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா

செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்

சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…



காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்

கால் நொடியில் காற்றாய் பறந்தானே…

பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி

பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ … (பூலித்தேவன் சிந்து)



இது நடந்தது 1760 டிசம்பர் 20 இல்.



பூலித்தேவர் வெண்ணிக்காலாடிக்கு வீரக்கல் நட்டார். அவர் போரிட்டு வீரசுவர்க்கம் பெற்ற இடம் காலாடி மேடு என அழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக