ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இராசபாளையம் பள்ளர் குல மக்களின் சித்திர வெண்கொற்றக்குடைத் திருவிழா



    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் என்று அழைக்கப்படும் பேரூரின் வரலாற்றுப் பழம் பெயர் பள்ளர் பாளையம் என்பதாகும். இவ்வூர் 'பழைய பாளையம்' என்றும் அழைக்கப் படுகிறது. 1965 ஆம் ஆண்டைய வருவாய்த்துறை ஆவணங்களும், பதிவேடுகளும் இதற்க்குச் சான்று பகர்கின்றன. பிற்காலத்தில் ஏற்ப்படுத்தப் பட்ட வடுகக் குடியேற்றங்களின் போது 'இராசூக்கள்'  என்ற தெலுங்கர்கள் வந்த பின் பள்ளர் பாளையம் என்பது இராசபாளையம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. பள்ளர் பாளையத்தில் பேருந்து நிலையத்தை ஒட்டியே பள்ளர்கள் வாழக்கூடிய ஏழு பெரும் தெருக்கள் உள்ளன. இம்மக்களின் நிருவாக வதிக்காக இவர் தம் முன்னோர்களால் கட்டி எழுப்பப்பட்ட பழமையான தேவேந்திர குல வேளாளர் சமூகக் கூடம் ஒன்று பேருந்து நிலையம் அருகிலேயே இப்போதும் இருப்பதைக் காணலாம். இந்நகரில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் பள்ளர் குலப் பெருமக்களால் வெண்கொற்றக்குடைத் திருவிழா நடத்தப் பெறுவது வழக்கம்" (நேர்காணல், தே.இராசசேகரன், திருவில்லிபுத்தூர்)






    பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டுத் தனது கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகியின் பெருமையை உணர்த்தும் வகையில் 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்தரைப் பிறப்பன்று வெண்குடைத் திருவிழாவைப் பள்ளர் குல மக்கள் கொண்டாடி வருகின்றனர். கண்ணகியின் கால் சிலம்பு, தாலிக்கயிறுடன் வெண்கொற்றக்குடை  ஏந்தி பள்ளர்கள் உலா வருவது வழக்கம். பறையர் குலப் பெண்ணின் தாலிக் கயிற்றை பள்ளர் குலத் தலைவனான குடும்பனாரின் இடது காலில் கட்டி விடுவதும், அதனைப் பறையர்கள் அவிழ்க்க வருவதும், அதனால் பள்ளர், பறையர் சாதிய மோதல் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. இது தமிழ் சாதியினரைப் பிரித்தாளும் வந்தேறிகளின் வடுகச் சூழ்ச்சி என்பதனையும், வலங்கை, இடங்கைப் பிரிவின் நீட்சி என்பதனையும் அறிய முடிகிறது.

    இராசபாளையம் அருகேயுள்ள சுந்தரராசபுரத்தைச் சேர்ந்த பள்ளர்களுக்கு வழிவழியாக வெண்கொற்றக்குடை பிடித்து ஆடும் இவ்வுரிமை இருந்து வந்தது. சுந்தரராசபுரம் என்பது சுந்தரபாண்டியனின் பெயரைத் தாங்கிய ஊர் என்பதுவும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கதாகும். இவ்வூரைச் சேர்ந்த செம்புலிச் சித்தன் என்பவரும், அதன் பின்னர் அவரின் மகன் கந்தக் குடும்பனும், அதன் பின்னர் கந்தக் குடும்பனின் மகன் பிள்ளையார் என்பவரும் குடை பிடித்து ஆடி வந்தனர். பிள்ளையார் என்பவருக்கு அகவை 70ஐ தாண்டியதால் அவரால் குடை பிடித்து ஆட முடியவில்லை. அதனால் 2010 ஆம் ஆண்டு இராசபாளையம் செல்லம் வடக்குத் தெரு என்னும் குமரன் தெருவைச் சேர்ந்த அதிவீரப்புலவர் என்னும் பள்ளர் குலத்தவரும் வெண்கொற்றக்குடை பிடித்து ஆடினர்.

    காலையில் தொடங்கிய விழாப் பேரணி பெரிய கடை வீதி, சுரைக்க்காயபட்டித் தெரு வழியாக முடங்கியார் சாலை சென்று இராசூக்கள் கல்லூரி அருகேயுள்ள நால்வாய்க் குறடு சென்றடையும், விழாக் குழுவினராக விளங்கக் கூடிய முகமையான ஊர்க் குடும்பனார்கள் முன் செல்வர். அவர்களோடு ஒப்பனை செய்யப் பட்ட யானை உடன் செல்லும். (நேர்காணல்: தா.வெள்ளையப்பன், இராசபாளையம்)


    யானையின் மீது பள்ளர் குல மக்களின் சமூகக் கொடியான சிவப்பு,பச்சை வண்ணக் கொடி பறக்கும். விழாவில் ஆலியாட்டம்,கரகாட்டம்,கோலாட்டம் உறுமி மேளம் இடம் பெறுவது வழக்கம். (நேர்காணல், மாடசாமி ,திருவில்லிபுத்தூர்)


    நால்வாய்க்குறடு சென்றபின் அங்கிருந்து பூசகர்கள், அருளாடிகள், ஊர்க்குடும்பனார்கள் மட்டும் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள நீர்காத்த ஐயனார் கோயிலுக்குச் செல்வர். அங்கேயுள்ள சின்ன ஒட்டக்காரன், பெரிய ஒட்டக்காரன், வனப்பேச்சி,மாடத்தி,ஏழு கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி, சிறப்புப் பூசை நடத்தக் குடமுழுக்கு நீர் எடுத்து, மீண்டும் நால்வாய்க்குறடு வந்தடைவர். அன்று மாலை நகருக்குள் வரும் வழியில் ஊரணி வளாகத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் வழிபட்டு விட்டு, வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள ஐயனார் கோயிலை வணங்கி விட்டு, முடைங்கியார் சாலை வழியாக மீண்டும் தேவேந்திர குல வேளாளர் ஊர்ச் சாவடிக்கு வந்து சேர்வர். மறுநாள் பூபால்பட்டி தெருவில் உள்ள பெரிய வீடுவரை சென்று வருவது வழக்கம். (நேர்காணல், தே. இராசசேகரன், திருவில்லிபுத்தூர்)


    கடந்த ஆண்டு 322 ஆவது வெண்கொற்றக்குடைத் திருவிழா கொண்டாடப் பட்டுள்ளது. இது பள்ளர் குல மக்களின் வரலாற்றுப் பெருமையை உணர்த்துவதாய் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக