ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

மனித உரிமைப் போராளி தோழர்.பி.வி.பக்தவத்சலம்!

அடிப்படையில் பொதுவுடைமைவாதியான தோழர்.பி.வி.பக்தவத்சலம் அனைவராலும் தோழர்.பி.வி.பி. என்று அன்போடு அழைக்கப்படக் கூடியவர். மனித உரிமைப் போராளி எனும் சொல்லுக்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர். தமிழகத்தில் பலதரப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த மக்களின், மனிதர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுவந்த மார்க்சிய-லெனினிய புரட்சிகர இயக்கத்தின் தோழர்களோடு இணைந்து தனது மனித உரிமைப் போரை தொடுக்கத் துவங்கியவர், ”சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகளைப் பெறாமல் வேறு உரிமைகளில் பயனில்லை” என்று முழங்கினார். தமிழகத்தில் அதிகமாக சாதிய ஒடுக்குமுறைகள் நிறைந்து காணப்படும் தருமபுரி மாவட்டத்தின் ஒரு காட்டுப்பகுதில் கட்டப்பட்ட தனது குடியிருப்புக்கு செம்பண்ணை என்று பெயரிட்டு அங்கிருந்து தனது மார்க்சிய-லெனினிய ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்தார். ஒருமுறை, அந்த செம்பண்ணையில் வைத்து தோழர்.பி.வி.பி.-யை தீர்த்துக்கட்டிவடலாம் என்று கங்கணம் கட்டிய தமிழக காவல்துறையினர் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை; எனவே அப்பகுதி கூலிப்படையினரை வைத்து தோழர்.பி.வி.பி.-யை தீர்த்துக்கட்டிவிடலாம் என்று திட்டம் தீட்டிய காவல்துறையினர், கூலிப்படையினரிடம் சென்று உதவி கேட்டபோதுதான் அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. என்னே ஆச்சரியம்! “மனித உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிற ஒரு போராளியை நாங்கள் மட்டுமல்ல; வேறு எந்த கூலிப்படையினரும் கொல்ல முன்வரமாட்டார்கள்” என்று கூலிப்படையினரே கூறிய பின்பு தான் காவல்துறையினரின் மனமும் கலங்கியது. தனது போராட்ட பணி மூலம் மக்களின் மனதை மட்டுமல்ல, கூலிப்படையினரின் மனதையும் கவர்ந்த தோழர்.பி.வி.ப. அவர்களின் வரலாற்றை நீக்கிவிட்டு மனித உரிமை போராட்ட வரலாற்றை எழுதிவிட முடியாது. போராளிகள் மீது மிகுந்த பற்று கொண்ட தோழர்.பி.வி.பி. தனக்கு பிறந்த 3 பெண் குழந்தைகளுக்கும் அக்காலத்தில் போராளிகளாகத் திகழ்ந்த பெண் போராளிகளின் பெயர்களையே சூட்டினார். 1990-களில் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கான உரிமை மீட்புப் போரில் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து களமாடிய தன்னுடைய மார்க்சிய-லெனினிய தோழரான டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களோடு தானும் இணைந்து பட்டியலின மக்களுக்கான உரிமைமீட்பில் பங்குகொண்டார். அதோடு மட்டுமல்ல, 1997-ல் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்னிறுத்தி துவங்கப்பட்ட ”புதிய தமிழகம்” கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தான் முழுமையான விடுதலை அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்த தோழர்.பி.வி.பி. “தேர்தல்களில் பங்கெடுத்தல் கூடாது” என்கிற மார்க்சிய-லெனினிய இயக்க கோட்பாட்டையும் புரட்சிகர இயக்க தோழர்களின் விமர்சனங்களையும் மீறி, புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக இந்திய பாராளுமன்ற, தமிழக சட்டமன்ற தேர்தல்களில் களமிறங்கினார். 1999-ல் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் திருநெல்வேலி (பொது) நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராய் போட்டியிட்டு சுமார் 1,12,941 வாக்குகளும், அதைத்தொடர்ந்து 2001-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேடப்பட்டி (பொது) தொகுதியில் போட்டியிட்டு 26,958 வாக்குகளும் பெற்று தமிழக பிரதான கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைவரும் மிரளும் வகையில் தனது போர்குண வீரியமிக்க வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வாதங்களைப் பதிவு செய்த தோழர்.பி.வி.ப. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க புதிய தமிழகம் கட்சி தொடுத்த அனைத்து வழக்குகளையும் தானே முன்னின்று வாதாடி வென்றுகாட்டினார். குறிப்பாக கண்டதேவி தேரோட்டத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட தொடுக்கப்பட்ட வழக்கில், ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்வடம் பிடிப்பதற்கான உரிமையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தந்தார். மேலும் பட்டியலின மக்களுக்கான 18 % இடஒதுக்கீட்டில் 6 %-மே நிரப்பப்பட்ட நிலையில் நிரப்பப்படாத பின்னடைவு பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி தொடுத்த வழக்கில் இவருடைய பங்கு குறிப்பிடத்தகுந்தது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலிஉயர்வுக்காக புதிய தமிழகம் தொழிற்சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலும் இவருடைய பங்கு மகத்தானது. அவர் மறைந்தாலும் அவர் சார்பாக புதிய தமிழகம் கட்சி தொடுக்கும் குறிப்பாக உள்ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் கவனித்து வரும் தோழர்.பி.வி.பி. அவர்களின் புதல்வி வழக்கறிஞர்.திருமதி.அஜிதா மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர்.திரு.சரவணவேல் ஆகியோருக்கும் இந்த சமூகம் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளது. தன் வாழ்நாளெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்புக்காக நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடிய தோழர்.பி.வி.ப. ஆசிய கண்டத்தின் மிகச்சிறந்த வழக்கறிஞர் ஆவார். அமெரிக்கா, ஈராக் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட முற்பட்டபோது உலகம் முழுவதிலுமிருந்து 6 வழக்கறிஞர்கள் சதாம் உசேனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக வாதாட தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஆசிய கண்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் தோழர்.பி.வி.பி. என்பது அவரின் வரலாற்றில் மறைக்கப்பட முடியாத நிகழ்வாகும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே தங்கள் சமுதாயத்துக்காகப் போராட துணிவிழந்து நிற்கிற இக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவராகப் பிறக்காவிட்டாலும் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்புக்காகவே வாழ்ந்து மறைந்த மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் தோழர்.பி.வி.பக்தவத்சலம் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு தினமான 02.09.2014 அன்று புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக