ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 1 ஜூலை, 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு ...

செந்தில் மள்ளர் என்பவர் எழுதிய ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ என்ற புத்தகம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதோடு, செந்தில் மள்ளர்மீது தேசத் துரோக வழக்கு பொடப்பட்டு அவரைத் தேடி வருகிறார்கள் என்ற செய்தியை ஒருவேளை நீங்கள் செய்தித்தாளில் படித்திருக்கலாம்.


நேற்றி லயோலா கல்லூரியில் கருத்துரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் என்ற நிகழ்வு நடைபெற்று, தமிழக அரசின் தடை கண்டிக்கப்பட்டது. நானும் ஒரு பேச்சாளராக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கலந்துகொண்ட பிறரை மேலே உள்ள போஸ்டரில் பார்த்துத் தெரிந்துகொள்க.

எந்தப் புத்தகத்தையுமே ஓர் அரசு தடை செய்யக்கூடாது என்பது என் கருத்து. சட்டம் ஒழுங்கு என்பதைக் காரணம் காட்டி, சமூகங்களுக்கு இடையே கலவரம் மூண்டுவிடும் என்று சொல்லி சில புத்தகங்களை மட்டும் தடை செய்தல் நியாயமற்றது. இன்று தமிழில் வெளியாகியுள்ள எண்ணற்ற புத்தகங்களில் பலப்பல, குறிப்பிட்ட மதத்தோருக்கும் சாதியினருக்கும் எதிராக, மிகக் கேவலமான, கீழ்த்தரமான வசை மொழியில் எழுதப்பட்டுள்ளவை. பல மாத, வார இதழ்களேகூட அப்படிப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றன.

கண்டன இலக்கியம் என்பது இந்து, கிறிஸ்தவ மத பிரசாரகர்களால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவை எதிர் மதத்தோரை, எதிர்க் கருத்துள்ளோரை நிச்சயமாகக் கடுமையாகத் தாக்கியும் அவர்கள் மனம் புண்படுமாறும்தான் எழுதப்பட்டவை. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே இருந்துவரும் இதுபோன்ற புத்தகங்கள், இன்றும் வெளியாகின்றன என்பதுதான் உண்மை. அமைதிப் பூங்காவாகத் திகழும் புத்தகப் பதிப்புலகில் செந்தில் மள்ளரின் புத்தகம் மட்டும் திடீரென்று அமைதியைக் குலைத்துவிடும் எண்ணம் கொண்டதாக அவதரித்துள்ளது என்பதுபோல் தமிழக அரசு தோற்றுவிக்கும் எண்ணம் நியாயமற்றது. அதைவிட, இப்படிப்பட்ட புத்தகத்தைத் தடை செய்ததுமட்டுமின்றி, அதனை எழுதியவரை தேசத் துரோகக் குற்றச்சாட்டு என்று சொல்லிச் சிறை பிடிக்க முற்படுவது அராஜகமானது.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பலவும் கிட்டத்தட்ட 500 புத்தகங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயங்கள்தாம் என்று நேற்று பேசிய ஒரிசா பாலு சொன்னார். கூடவே சில புத்தகங்களைக் கையில் கொண்டுவந்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மனுஷ்யபுத்திரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்துத் தான் பேசியதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய இருவர் - எழுகதிர் பத்திரிகையாசிரியர் அருகோ என்பவரும் மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சக்திவேல் என்பவரும், மற்றும் பொதுவாகவே கூட்டத்துக்கு வந்திருந்த பெரும்பான்மை மக்களும் ஒரு கருத்தில் உறுதியாக இருந்ததுபோல் இருந்தது. புத்தக ஆசிரியர் செந்தில் மள்ளர், தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் ‘வடுக வந்தேறிகள்’ என்று தன் ‘என்னுரை’யில் சொல்கிறார். இவ்விருவரும் கூட்டத்தினரும் வடுக வந்தேறிகள் என்று தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் சாதியினரைச் சொல்கிறார்கள். அந்த வார்த்தை பயன்படுத்தப்படும்போதெல்லாம் கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

புத்தகத்தின்மீதான தடையைக் கண்டித்த அதே நேரம், மேடையிலேயே, ‘வந்தேறிகள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையும் அதனைக் கூட்டம் கை தட்டி வரவேற்றதையும் நான் கடுமையாகக் கண்டித்தேன்.

வந்தேறிகள் என்ற வார்த்தையைக் கொண்டு பார்ப்பனர்கள், முஸ்லிம்கள் என்று ஆரம்பித்துப் பலரைக் கைகாட்டி இனத் தூய்மைவாதம், கலாசார தேசியம் ஆகியவற்றைப் பேசுவோரது அரசியல் எனக்கு ஏற்புடையதல்ல. அதில் இப்போது சேர்ந்துள்ளது ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கத்தை எதிர்க்கும் தமிழ் தேசியம். அவர்கள் கண்டுபிடித்துள்ள எதிரி ‘வடுகர்கள்’. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் இதைப்பற்றியது அல்ல. அப்படி அந்தப் புத்தகத்தைக் குறுக்கிவிட முடியாது, கூடாது. ஆனால் அந்த இழையோட்டமும் அப்புத்தகத்தில் இருப்பதும், அதே கருத்தைக் கொண்டோர் அக்கருத்தை மேடைமீது கூறுவதும் பொதுவான அறிவியக்கத்துக்கு எதிரானவை.

இவற்றைத் தாண்டி, அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை தமிழக அரசு தடை செய்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். புத்தகத்தின்மீதான தடை நீக்கப்படவேண்டும். புத்தக ஆசிரியர்மீது போடப்பட்டிருக்கும் அபாண்டமான வழக்கு உடனடியாக விலக்கிக்கொள்ளப்படவேண்டும்.

1 கருத்து: