ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 8 ஜனவரி, 2014

பாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

தென்காசி,
பாராளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
பொதுக்குழு கூட்டம்
புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசி தாய்பாலா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் தகுதித்தேர்விலும், சென்னையில் தொடங்கப்பட்ட பல் நோக்கு உயர் சிகிச்சை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திலும், இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காத தமிழக அரசை கண்டிப்பது, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வலியுயுத்துவது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேட்டி
முன்னதாக டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தென்காசி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகிக்க அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு எத்தனை தொகுதி வேண்டும் என்பதெல்லாம் கூட்டணி முழுமை பெற்ற பிறகு அறிவிக்கப்படும். நாங்கள் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.
பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி இதுவரை பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவில்லை. தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்சிகளை வைத்து பிரதமர் தேர்வு செய்யப்படுவார். மாநில கட்சிகள், பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன்தான் அரசு அமையும். தமிழகத்தில் தி.மு.க தலைமையில் பெரிய கூட்டணி அமையும். அதில் பல கட்சிகள் இணையும். புதிய தமிழகத்தை பொறுத்த வரை தென் தமிழக மக்களின் வாழ்வு உரிமையை மீட்டெடுக்க நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
பொதுக்கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் மதுரம் பாஸ்கர், மாநில மாணவர் அணி செயலாளர் பவுன்ராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் இன்பராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் அரவிந்த் ராஜா, தென்காசி ஒன்றிய செயலாளர் சந்திரன், தொகுதி பொறுப்பாளர் முகமது அனீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக