ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 21 டிசம்பர், 2011

செப் -11 பரமக்குடி,மதுரை, இளையாங்குடி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக அணிதிரள்வோம்!

சாதீ -- வெண்மணிப் படுகொலைகளுக்கு முன்பிருந்து இரத்த வெறியுடன் தனது கோரமான ஆதிக்க வெறியுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 1957,செப்-11 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் படுகொலையின் அதிர்வுகள் முதுகுளத்தூர் கலவரம் என அறியப்பட்டு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தியாகி இமானுவேல் சேகரனின் 50 ஆம் ஆண்டு படுகொலை நாளைத் தொடர்ந்து தேவேந்திர சமூகத்தினர் மத்தியில் எழுச்சி உருவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் எனத் திட்டமிட்ட படுகொலை வீரம்பல் வின்சென்ட் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் செப்-10அன்று இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டலமாணிக்கம், பள்ளபச்சேரியைச் சேர்ந்த 11ஆவது படிக்கும் 16 வயது மாணவன் பழனிக்குமார் ஈவிரக்கமின்றி சாதி வெறியர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். சாதிய வன்மமும், ஆதிக்க வெறியும் தாழ்த்தப்பட்ட இளம் மாணவனின் உயிரைப் பலிவாங்கியுள்ளது. இது தொடரலாமா?


செப்-11, பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடம் நோக்கி ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்த பல்வேறு இயக்கங்கள், தேவேந்திர குல சமூக மக்கள் அலை அலையாக வருவது அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிந்த சங்கதி. தியாகி இமானுவேல் சேகரன் 54 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி செப் - 11 அன்று பரமக்குடி நோக்கித் தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டம், கூட்டமாக அஞ்சலி செலுத்தி வந்தனர். செப் - 9, அன்று நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்ட பழனிக்குமார் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, பரமக்குடி செல்லலாம் என நெல்லையிலிருந்து கிளம்பிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்ல நாட்டில் தடுத்துக் காவல்துறை கைது செய்தது. அவர் போனால் பிரச்சனை பெரிதாகி விடுமாம்! கைது செய்தால் எதிர்ப்பு உருவாகாதா? ஜான்பாண்டியன் கைதுச் செய்தி பரமக்குடிக்குப் பரவியவுடன், பரமக்குடி ஐந்துமுக்கு சந்திப்பில் மறியல் தொடங்கியது. நடக்காதா? அரசும், காவல்துறையும் இதை எதிர்பார்த்துத்தானே ஜான்பாண்டியன் அவர்களைக் கைது செய்தது. மறியலில் கூட்டம் சேரக் காத்திருந்த காவல்துறை அதிகாரிகள் தங்களது குரூரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறைத் தாக்குதலிலும் 6 பேர் இறந்துள்ளனர். தலையில் குண்டுக் காயத்துடன் ஒருவர் மதுரை மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டுள்ளார். மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், இளையாங்குடி மருத்துவமனைகளில் கடுமையான காயங்களுடன் சிலநூறு பேர் சேர்க்கப்பட்டனர். மதியம் அஞ்சலிக்கு வருவதாக இருந்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல்ராசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உட்பட பல்வேறு தலைவர்களின் தலைமையில் வந்தவர்கள் வழியிலேயே தடுக்கப்பட்டுள்ளனர். இதைச் செய்வதுதான் அரசின் நோக்கம் போல. வருகிற வழியில் வண்டிகளில் வந்தவர்கள் திருப்பி விடப்பட்டுள்ளனர்.

மதுரை, சிந்தாமணி அருகில் வேனில் வந்த பாட்டம் கிராமத்தினரை பரமக்குடி செல்ல அனுமதி மறுத்த காவல்துறை, பிரச்சனைகளை உருவாக்கித் தற்காப்பு எனும் பெயரில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தானும் தாக்கப்பட்டதாக தனியார் மருத்துவமனையில் படுத்து நாடகமாடியுள்ளார். சோழவந்தான் பகுதியிலிருந்து பரமக்குடி சென்ற மண்ணாடிமங்கலம் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட இரண்டு பேர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது காளியம்மாள் எனும் பெண் போலீஸ் புகாரின் பேரில் பெண்களை மானபங்கப்படுத்தியது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது, கொலை முயற்சி, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். இதே போன்ற பொய் வழக்குகளைத்தான் தி.மு.க அரசின் காவல்துறை தாமிரபரணிப் படுகொலைச் சம்பவத்திலும் புனைந்தது. தி.மு.க ஆட்சி, அ.தி.மு.க ஆட்சிகளில் காவல்துறையின் செயல்பாட்டில் பெரிய வித்தியாசமில்லை.

இளையாங்குடியிலும் பரமக்குடித் துப்பாக்கிச் சூட்டைக் கேள்விப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்ன என்ன சும்மாவா இருப்பார்கள்-? மறியல் செய்த மக்களைக் கலைக்க எனும் பேரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் +2 படிக்கும் மாணவர் ஒருவருக்கு குண்டு பாய்ந்தது. பலர் காயமுற்றனர்.

ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டால் எதிர்ப்புக் கிளம்பும் என தமிழக அரசுக்கு, காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெரியாதா? தெரிந்தே செய்துள்ளனர். என்ன அரசியல் உள்நோக்கம்? ஜான்பாண்டியன் கைது செய்யப்படுவது காவல்துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? அவரின் ஒப்புதல் இல்லாமலா கைதும், துப்பாக்கிச் சூடுகளும் நடந்தது? கலைந்து போக எச்சரிக்கையோ, கண்ணீர்ப் புகையோ, தடியடியோ எதுவுமில்லாமல் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட செயல். யாரைத் திருப்தி செய்வதற்காக இந்தக் குரூரமான கேடு கெட்ட செயலைத் தமிழக அரசின் காவல்துறை நடத்தியது? அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் திட்டமிட்டு பரமக்குடிக்கு அனுப்பப்பட்டது ஏன்? பின்னணி என்ன? துப்பாக்கிச் சூடும், விரட்டி, விரட்டித் தடியடியும் நடத்தி அச்சுறுத்திய தமிழக அரசின் காவல்துறை 1000 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பரமக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் பல பகுதிகளில் தனது தேடுதல் வேட்டை மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி உள்ளது. வழக்கில் சேர்க்காமல் இருக்க காவல்துறையின் வசூல் வேட்டை நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படாமல், மதுரையிலேயே தனியார் மருத்துவமனைகள் நோக்கி துப்பாக்கிச் சூட்டில், தடியடியில் பலத்த காயம்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத்தில் அனைவருக்கும் பொதுவாக விளங்க வேண்டிய ஒரு முதலமைச்சர்” பள்ளபச்சேரியில் முத்துராமலிங்கத் தேவரை அவமதித்து எழுதப்பட்டதுதான் இளைஞன் பழனிக்குமார் படுகொலைக்குக் காரணம் எனவே இது இனக் கலவரம் “ எனப் பகிரங்கமாகப் பேசியுள்ளது சாதி மோதலைத் துண்டுவதாக உள்ளது. காவல்துறையின் அத்து மீறிய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த இனக் கலவரமென்று சித்தரித்தது “ ஜெயலலிதாவின் பார்ப்பன மேல் சாதி வெறிக் குணத்தைக் காட்டுகிறது. மதுரை மாவட்டம், உசிலைம்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ” சிங்கங்கள் உலாவும் இடத்தில் சி-றுத்தைக்கு என்ன வேலை “ எனப் பேசியதற்கும், ஜெயலலிதாவின் சட்டமன்ற விளக்க உரைக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆறு பேரைத் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்த, சிலநூறு பேரைக் காயப்படுத்திய காவல்துறை அதிகாரிகளின் அத்து மீறலை விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையாம். எதிர்க் கட்சிகள் வேண்டுகோளுக்குப் பின்னரே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை என அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பார்வையில் பரமக்குடிச் சம்பவமும், இறந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்களும் துச்சமாகப் பார்க்கப்படுவது மேல் சாதி அதிகாரத் திமிரன்றி வேறென்ன? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சமும், காயம்பட்டவர்களுக்கு 15,000 என நிவாரணம் அறிவித்தது என்பதும் ‘ஜெ’ யின் பார்ப்பன வக்கிர மனோபாவத்தை வெளிப்படுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி எனக் காவல்துறை தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளுக்கிடையில் என்ன வித்தியாசம்? ஓரே அணுகுமுறைதான். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி எப்போதும் சாதிய வன்மம் கொண்ட அரச பயங்கரவாதத்தால் ஆயுதம் கொண்டே அடக்கப்படும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் எதிரியின் மொழியே நமது மொழியாகும். இது நமது விருப்பமல்ல, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம். தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் சக்தியாக எழ வேண்டிய அவசியம் உள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு இரையாகாமல் சுயமரியாதைக்காக, சமூக மாற்றத்திற்காக சாதி ஒழிந்த சமதர்மத் தமிழகம் படைக்க ஓரணியில் திரள வேண்டும்.





* ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு, தாக்குதல் நடத்திய தமிழக அரசின் காவல்துறைக்கு எதிராக அணி திரள்வோம்!

* துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்!

* பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்கள் மீது சம்மந்தமில்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!

* இறந்தவர் குடும்பத்திற்கு ரூ10 இலட்சமும், காயம் பட்டவர்களுக்கு ரூ3 இலட்சமும் வழங்கு! எனத் தமிழக அரசை வலியுறுத்துவோம்!

* 21 ஆம் நூற்றாண்டில், கணினி மூலம் உலகமே விரல் நுனிக்குள் வருகிற, வளர்ந்த சூழலில் சாதிக்கு எதிரான மானுட நேய மனோபாவத்தை உயர்த்திப் பிடிப்போம்!

* காவல்துறை அட்டூழியங்களை கட்டவிழ்த்து விடும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக உழைக்கும் தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் அணி திரள்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக