ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 26 டிசம்பர், 2011

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள் !

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்!
ஜெயலலிதா - சசிகலா
அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா எனில் அதற்கு பொருத்தமான தொண்டர் குண்டர் ரவுடி படைகளை உருவாக்கி தீனி போட்டு உள்ளூர் தளபதிகளை வைத்து அ.தி.மு.கவின் மக்கள் முகத்திற்கு உருவம்கொடுத்தது சசிகலா கும்பல்தான்.கூடங்குளம், பால் பேருந்து கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு முதலான மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் வளரும் காலத்தில் சசிகலா நீக்கம் குறித்த செய்தி ஊடகங்களின் மாபெரும் சென்சேஷனாக முன்வைக்கப்படுகிறது.
அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டது குறித்து பார்ப்பன ஊடகங்கள் மகிழ்வதோடு துள்ளிக் குதிக்கின்றன. தினமலர், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் முதலான பார்ப்பன பத்திரிகைகளும், சோ, சு.சாமி, பா.ஜ.க முதலான பார்ப்பனக் கும்பல்களும் இதை ஆரவாரத்துடன் ஆதரிப்பதோடு அதற்கு பொருத்தமான கிசுகிசு செய்திகளையும் விரிவாக முன்வைக்கின்றன. இறுதியில் ஜெயாவின் அனைத்து பாவங்களுக்கும் இந்த மன்னார்குடி கும்பல்தான் காரணமென்றும் இனி அவர் எந்த நெருக்கடியுமின்றி ‘நல்லாட்சி’யை தொடருவார் என்றும் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.
எம்.ஜி.ஆரால் திட்டமிட்டு தமிழக அரசியலுக்குள் பாசிச ஜெயா திணிக்கப்பட்ட போதும் பின்னர் அவர் வாரிசு சண்டையில் வெற்றி பெற்ற போதும் பார்ப்பன ஊடகங்கள் அவரை மற்ற திராவிட அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு இருப்பவர் என்று போற்றிக் கொண்டாடின. நாகரீகமானவர், கான்வென்டு கல்வி கற்றவர், ஊழலற்றவர், குடும்ப பந்தங்கள் இல்லாதவர், படித்தவர், பண்பாளர், தமிழினித்தின் தனித்தன்மையை மறுத்து பாரத ஒற்றுமையை போற்றுபவர், இன வெறி இல்லாதவர், இந்துமத ஆன்மீக விசயங்களை சமரசமின்றி பின்பற்றுபவர் என்பதாக இவை நீண்டன.
திராவிட இயக்கங்களையும், தமிழ்நாட்டையும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கும் இந்திய ஊடகங்கள் அதற்கு மாற்றாக அ.தி.மு.கவையும், ஜெயாவையும் முன்னிருத்தின. பிராமணர் சங்கம், ஜெயேந்திரன், ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி போன்ற அவாள் கட்சிகளெல்லாம் ஜெயாவை முன்னுதாரமாண இந்து அரசியல்வாதியாக போற்றி வந்தன.
90களில் ஜெயா ஆட்சியைப் பிடித்ததும் பின்னர் சசிகலா நட்பு உறுதியடைந்ததும், தொடர்ச்சியாக ஜெயா சசிகலா கும்பல் முழு தமிழ்நாட்டையும் தடுப்பார் யாருமின்றி மொட்டையடித்து கொள்ளையடித்ததுமான காலத்தில் இந்த பார்ப்பன ஊடகங்கள் அணுகுமுறை எப்படி இருந்தன?
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சசிகலாவை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பார்ப்பன ஊடகங்கள் பாசிச ஜெயாவை மட்டும் அதிலிருந்து நீக்கி சுத்தமானவர் என்று அறிவித்தன. அதாவது சசிகலாவின் மன்னார்குடி கும்பல்தான் 91-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு காரணம், ஜெயலலிதா அதை தடுக்க முடியாதபடி கட்டுண்டு கிடந்தார் என்றுதான் அவர்கள் சித்தரித்தார்கள்.
பின்னர் தேர்தலில் படுதோல்வியுற்று புறக்கணிப்ப்பட்ட காலத்தில் இந்த பார்ப்பன கிச்சன் காபினெட் சசிகலாவை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்தின. அதற்கு தோதாக அப்போது இதே போல சசிகலாவை நீக்கியதாக ஜெயா அறிவித்தார். பின்னர் சேர்ந்து கொண்டார். 2001இல் ஆட்சிக்கு வந்த போதும் பார்ப்பன ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தன. அப்போதும் இதே போன்று நாடகம் நடந்தது. இடையில் பிரிந்து போன ஜெயா பின்னர் சசிகலாவுடன் சேர்ந்து கொண்டார்.
இப்போது 2011இல் ஜெயா ஆட்சியைப் பிடித்த பிறகும் பார்ப்பன ஊடகங்கள் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்கு “மன்னார்குடி மாஃபியாவை” நீக்குமாறு விரும்பின. ஒரு வேளை அப்படி முற்றிலும் விலக்காவிட்டாலும் ஆட்சி அதிகார அமைப்புகளிலிருந்து அவர்களை தள்ளி வைக்கமாறு கோரின. துக்ளக் சோ இது குறித்து பலமுறை புலம்பியிருக்கிறார். தற்போது சசிகலா நீக்கத்திற்காக ஜெயாவுக்கு பாராட்டுமழை பொழிந்திருக்கும் சு.சாமி மாமாவும் அப்படித்தான் அடிக்கடி பேசி வந்தார். மன்னார்குடி மாஃபியா என்ற வார்த்தையே சு.சாமி அறிமுகப்படுத்திய ஒன்று.
இப்போது ஆட்சியில் அசுரபல பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.க அரசை மன்னார்குடி கும்பல்தான் கட்டுப்படுத்துகிறது, தலைமை செயலகத்தில் சசிகலாவின் பினாமியான பன்னீர்செல்வம் என்ற அதிகாரிதான் உண்மையான தலைமை செயலாளராக ஆட்சியை, அதிகாரிகளை தீர்மானிக்கிறார், இதனால் பல நல்ல அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மத்திய அரசு வேலைகளுக்கு மாற்றுமாறு கோரினர், அமைச்சர்கள் – அதிகாரிகள் அனைவரும் சசிகலா கும்பலின் விருப்பத்தின்படியே நடந்து கொண்டனர், இறுதியில் பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து ஜெயா ஆட்சியை இழந்தால் யாரை கொண்டுவருவது, அதற்கு சசிகலா செய்து வந்த முயற்சிகள் உளவுத்துறை மூலம் ஜெயாவுக்கு வந்து அவர் கோபம் அடைந்தார் முதலான பல செய்திகள் கிசுகிசு பாணியில் பார்ப்பன ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
இவற்றில் உண்மை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் சசிகலாவின் நட்புதான் ஜெயாவின் எல்லா தவறுகளுக்கும் அடிப்படை காரணமென்று பார்ப்பன ஊடகங்கள் சித்தரிக்கும் சதிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அரசியலாகும்.
இந்த ஆட்சியிலேயே ஜெயா கொண்டு வந்துள்ள தலைமைச் செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், சமச்சீர்கல்வியை தடை செய்ய உச்சநீதிமன்றம் வரை சென்றும், பழையை பாடபுத்தகங்களை அச்சிட்டும் செய்த வக்கிர செலவு, மக்கள் நலப் பணியாளர்களை நீக்கியது, ஈழத்தாயாக வேடம் போட்டு பின்னர் மூவர் தூக்கை உறுதி செய்தது, கூடங்குளத்தில் போராடும் மக்களை ஆதரிப்பது போல பின்னர் எதிர்த்தது, பால் விலை, பேருந்து கட்டண உயர்வை அதிரடியாக உயர்த்தியது என்று ஏகப்பட்ட பாசிச தர்பாரை நாம் அன்றாடம் தரிசித்து வருகிறோம்.
இந்த பாசிச தர்பாருக்கும் சசிகலா நட்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் பாசிச ஜெயா அவரளவிலேயே தனிப்பட்ட முறையிலேயே செய்த காட்டு தர்பார் நடவடிக்கைகள். இப்போது விடுங்கள், முந்தைய ஆட்சியில் கரசேவைக்கு ஆளனுப்பியது, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியது, ஆடு கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்து சூத்திர-பஞ்சம மக்களை பார்ப்பனியமயமாக்க முயன்றது, ஈழம் என்று பேசுபவரை தடா,பொடாவில் உள்ளே தள்ளி கொடுமைப்படுத்தியது, ஆர்.எஸ்.எஸ் போற்றும் நடவடிக்கைகளை மனங்குளிரச் செய்தது, சாலைப்பணியாளர் நீக்கம், ஒரிரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது முதலான நடவடிக்கைகள் காட்டுவது என்ன?
இவையெல்லாம் ஜெயலலிதாவை ஒரு பார்ப்பன பாசிஸ்ட் என்பதுடன் இவையனைத்தம் அவரது முழு விருப்பத்திலிருந்து மட்டுமே பிறந்திருக்கிறது என்பதையம் நாம் புரிந்து கொள்ளலாம். எனில் சசிகலாவின் நட்புக்கு எந்த பங்குமில்லையா என்றால் அப்படி இல்லை.
இதில் ஜெயாவையும் சசிகலாவையும் பிரித்து பார்த்து புரிந்து கொள்வது சரியல்ல. ஏனெனில் அ.தி.மு.க என்றொரு ஓட்டுப் பொறுக்கி கட்சி, அழகிரி ஃபார்முலாவுக்கு முன்னரேயே கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதே ஃபார்முலாவை கண்டுபிடித்து அறிமுகம் செய்த கட்சி, மாவட்ட அளவிலும் உள்ளூர் அளவிலும் சாராய ரவுடிகள், மணல் மாஃபியாக்கள், மதுக்கடை உரிமையாளர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், ரியல் எஸ்டேட்டில் கோடிகளைக் குவிப்பவர்கள் கொண்ட கட்சியை தொடர்ந்து நடத்தவும், காசை வீசி தமது அரசியல் நடவடிக்கைகளை செய்து கொள்ளவும் ஊழல் என்பது அ.தி.மு.கவிற்கு அத்தியாவசியமான ஒன்று.
ஊழல் என்றொரு வஸ்து இல்லாமல் அ.தி.மு.கவோ இல்லை கான்வென்டு சீமாட்டி ஜெயாவோ இல்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, அவர்களது உள்ளூர் தளபதிகள் அனைவரும் மும்முரமாக கொள்ளையடித்தார்கள். அந்தக் கொள்ளையும் அந்தக் கொள்ளையின் விளைவாக உருவான ஒரு ஒட்டுண்ணிக் கும்பலும்தான் அ.தி.மு.கவின் அஸ்திவாரம்.
90களில் இந்தக் கொள்ளை பாரம்பரிய முறைகளில் நேரடிப் பணம், நேரடி சொத்து குவிப்பு, என்று நடந்த போது ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது இல்லை. ஊழல் என்பது ஒரு சூட்கேசில் வைத்து கொடுக்க்கப்படும் பணமாக நடப்பில் இல்லை. அது ஸ்விஸ் வங்கி போன்று தேசங்கடந்தும் ரியல் எஸ்டேட், சுயநிதிக் கல்லூரிகள், சாராய ஆலைகள் என்று சட்டபூர்வமாகவும் மாறிவிட்ட பிறகு பழைய பாணியில் சொத்து சேர்த்து பிடிபடும் நிலைமையில் ஜெயலலிதா இன்று இல்லை.
எனவே ஜெயா சசிகலாவின் நட்பு என்பது உறவுப்பூர்வமாக இருக்கிறது என்பதை விட தொழில் பூர்வமாக, அதிகார பங்கு பூர்வமாக பிணைக்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை. இதில் அவர்களது தனிப்பட்ட உறவு என்பது இத்தகைய மாபெரும் அதிகார சாம்ராஜ்ஜியத்தின் மேல்தான் நடமாடுகிறது என்பது முக்கியம். எனவே இங்கு சசிகலா போய்விட்டார் என்றால் அந்த ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஏதோ பங்கு பிரிக்கும் சண்டை நடக்கிறது என்றுதான் பொருளே தவிர மாறாக அங்கு ஊழலே பிரிந்து போய்விட்டது என்பது பாமரத்தனம்.
மேலும் அரசு, சாராய ஆலைகள், தொலைக்காட்சி தொழில் என்று ஏகப்பட்ட முறையில் பிணைக்கப்பட்டிருக்கும் ஜெயா சசிகலா நட்பு என்பது அப்படி ஒரு குழயாடிச் சண்டையால் பிரிந்து போகும் ஒன்றல்ல. அதனால்தான் இதற்கு முன்னர் அவர்கள் அப்படி பிரிந்திருந்தாலும் கூடிய சீக்கிரத்தில் ஒன்று சேர்ந்தார்கள். இந்த ஒன்றுகூடலை சாதித்தது மேற்படி பிரிக்க முடியாதபடி இருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் நலனை அப்படி கைவிட்டு விட முடியாதபடி இருக்கும் நிர்ப்பந்தம்தான்.
இப்போது சசிகலா நீக்கப்பட்டாலும் விரைவில் அவர் சேர்க்கப்படலாம். ஒருவேளை அப்படி சேராமல் இருக்கும் பட்சத்தில் சொத்து வாரிசுரிமைச் சண்டை நடக்கும். அப்படி ஒரு சண்டை நடக்கும் பட்சத்தில் இருவருக்கும் அது பாதகம் என்பதால் தோழிகள் மீண்டும் இணையவே வாய்ப்பிருக்கிறது. மேலும் பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டாலும் அவரது பினாமி மூலம் ஆட்சி தொடரும் என்பதோடு தொடர்ந்து அதிகார மையமாக அவரே இருப்பார். அதில் ஏதாவது செய்து ஜெயாவை நீக்கிவிட்டு அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என்றால் அதற்கு தேவைப்படும் நட்சத்திர முகம் கொண்ட தலைமைக்கு பொருத்தமாக சசிகலா கும்பலிடம் யாருமில்லை. இப்படியாக ஜெயா சசிகலா நட்பு என்பது யாரும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கிறது.
அடுத்து ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக சசிகலா மட்டும்தான் ஆட்சியை நடத்தினார், ஊழல் செய்தார் என்பது பச்சையான பொய். இருவரும் அதை மனமொப்பி சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள். அதிலும் குறிப்பாக இதில் முடிவு செய்யும் உரிமை பாசிச ஜெயாவிடமே இருக்கிறது. அதற்கு ஆதாரமாகத்தான் இந்த ஆட்சியிலும், இதற்கு முன்னரும் அவர் மேற்கண்ட பாசிச நடவடிக்கைகளை பட்டியல் இட்டோம். இவையெல்லாம் ஜெயா என்றொரு தனிநபர் குறிப்பிட்ட வர்க்க, சாதி, மத பிரிவினரின் நலனுக்காக எடுத்த பாசிச நடவடிக்கைகள். இதில் சசிகலா கும்பல் முடிவெடுத்திருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது.
ஒட்டு மொத்தமாக பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை நியாயப்படுத்துவதற்காகவே பார்ப்பன ஊடங்கள் சசிகலா கும்பலை மட்டும் குறிவைத்து தாக்குகின்றது. மேலும் பார்ப்பன புரோக்கர்கள், பா.ஜ.க முதலான பார்ப்பனியக் கட்சிகளும் சசிகலா கும்பலை வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் வெறுக்கின்றன. இது புதுப் பணக்காரன் பரம்பரைப் பணக்காரன் மேல் கொண்டிருக்கும் பகையைப் போன்றதுதான். அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா எனில் அதற்கு பொருத்தமான தொண்டர் குண்டர் ரவுடி படைகளை உருவாக்கி தீனி போட்டு உள்ளூர் தளபதிகளை வைத்து அ.தி.மு.கவின் மக்கள் முகத்திற்கு உருவம்கொடுத்தது சசிகலா கும்பல்தான்.
இப்படித்தான் இரண்டின் நலனும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைத்திருக்கின்றன. இதில் சசிகலாவை தவிர்த்து மற்ற ஊழல் தளபதிகளை நீக்குமாறு பார்ப்பன ஊடகங்கள் கோரவில்லை. ஏனெனில் அந்த் தளபதிகளெல்லாம் அம்மா காட்டும் திசையில் ஐந்தடி பள்ளத்தில் விழுந்து வணங்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இடையில் சசிகலா கும்பல் புரட்சித்தலைவியன் கிச்சன் காபினெட்டாக இருப்பதுதான் அவர்களுடைய கவலை. அதனால்தான் மன்னார்குடி கும்பலை தூக்கி எறிந்து விட்டு பார்ப்பனர்களின் கிச்சன் காபினெட்டை திணிக்க அவர்கள் துடிக்கிறார்கள்.
அதன் பொருட்டே சசிகலா நீக்கத்தை அவர்கள் விண்ணதிர கொண்டாடி மகிழ்கிறார்கள். இதன் மூலம் பாசிச ஜெயாவின் குற்றங்களுக்கு அவர் காரணமில்லை என்று சொல்வதன்மூலம் அவரது காட்டு தர்பார் நடவடிக்களை தொடருவதற்கு மக்களிடையே ஒரு நல்லெண்ணப் பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறார்கள். பார்ப்பன ஊடகங்களின் இந்த சதியை நாம் புரிந்துகொள்வதோடு முறியடிப்பதும் அவசியம்.ஃ
நம்மைப்பொறுத்த வரை ஜெயா சசிகலா கும்பல் என்பது ஜெயாவின் தலைமையில் இயங்கக்கூடிய ஒரு பாசிச கும்பல்தான். ஒட்டு மொத்தமாக இந்த கும்பலை தூக்கி ஏறிவதுதான் நமது கடமையாக இருக்க வேண்டுமே அன்றி நல்ல பாம்புகளுக்கிடையே கெட்ட பாம்பு, ‘நல்ல பாம்பு’ என்று தேடுவது அறிவீனம். அப்படி தேடச்சொல்லி தமது நலனை நியாயப்படுத்தும் பார்ப்பன ஊடகங்களை பலரும் புரிந்து கொள்ளவில்லை.
அரசியல் என்றால் அதை ஒரு கிசுகிசு நடவடிக்கைகள் போல கற்றுத்தரும் இந்த ஊடகங்களின் செல்வாக்கிலிருந்து நாம் விடுபடுவதும், மக்கள் நலனிலிருந்து அரசியல் என்றால் என்னவென்று புரிந்து கொள்வதும்தான் இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள உதவும். பதிவுலகில் பலரும் இதை ஒரு கிசுகிசு நடவடிக்கையாக பேசி விவாதிப்பது பலன்தராது. மாறாக பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரத்தை மறைமுகமாக ஏற்றுக் கொள்வதாகவே அவை மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக