ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 1 மார்ச், 2011

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு


 ஜான்பாண்டியன்


.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு மதுரை, விரகனூர் ரிங் ரோட்டில் நடந்தது. மதுரை மாவட்ட செயலாளர் சரவணபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பிரிசில்லா பாண்டியன் வரவேற்று பேசினார். மாநாட்டில் இந்திய பவுத்தசபை தேசிய செயலாளர் புத்தபிக்கு டி.சுமேதா, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி பேராசிரியர் பிரபா.கல்விமணி, தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் கண்ணையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். பின்னர் கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மாநாடு குறித்து விளக்கி பேசினார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஜனார்த்தனன் தலைமையிலான கமிசன் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள்தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் துறையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐந்தாண்டு திட்டத்தில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதனை இந்த மாநாடு கண்டிக்கிறது.
இந்தியா-இலங்கை இடையிலான சர்வதேச எல்லைக்கோடு பிரச்சினை காரணமாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும் கச்சத்தீவினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாத வருமானத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆய்வு கமிசனை அமைக்க வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 ஓய்வூதியம் வழங்குவதுடன், விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
பட்டியல் இன மக்களின் 18 சதவீத இடஒதுக்கீட்டினை இன்றைய மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
இயற்கை வளங்களை பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். விவசாயிகளின் துன்பத்தை போக்கும் வகையில் நதிநீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தொண்டர்களின் பேரணி நடந்தது. பேரணியை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பார்வையிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக