ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

தேவைதானா கண் துடைப்பு கமிஷன்கள்? - 10 வருட அலசல்..



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


'பிரச்னை என்றால் கல்லைப் போடு; இல்லைன்னா... கமிஷனைப் போடு’ என்று நையாண்டி செய்யப்படும் சூழலில், ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா, 'புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள்’ என முதல் விசாரணை கமிஷன் போட்டு​விட்டார். 'இது போன்ற கமிஷன்களால் என்ன நடக்கிறது?’ என்ற நினைவுச் சக்கரத்தை ஓட்டினால் ஏமாற்றம்தான் மிச்சம். 


தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் போடப்பட்ட விசாரணை கமிஷன்களின் கதியைப் பாருங்கள்! 


அ.தி.மு.க. விசாரணை கமிஷன்கள்! 


2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டன. 


மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று சொல்லி கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தது அ.தி.மு.க. அரசு. இதற்காக நீதிபதி ராமன் கமிஷனை அமைத்தார் முதல்வர் ஜெயலலிதா. உயர் காக்கி அதிகாரிகள் கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் எல்லாம் கொடுத்தனர். இந்த கமிஷன், விசாரணையை நடத்திக் கொண்டிருந்தபோதே, ஆட்சி மாற்றம் நடந்துவிட... புதிதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க., உடனடியாக ராமன் கமிஷனைக் கலைத்துவிட்டது.


அடுத்து, வெங்கடேசப் பண்ணையார் என்​கவுன்ட்டர், நாடார் சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த... அது பற்றி விசாரிக்க அதே நீதிபதி ராமன் விசாரணை கமிஷனை அமைத்தனர். அந்த கமிஷனுக்கு எதிராக தடை கேட்டு நீதிமன்றத்துக்குப் போனார்கள் சிலர். அதன் பிறகு, அந்த கமிஷனின் அறிக்கையும் வெளியாகவில்லை.


இது இப்படி என்றால்... விசாரணை கமிஷன் முடிந்து அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகும்கூட, அது வெளியிடப்படாத கொடுமைகளும் உண்டு. 


தி.மு.க. ஆட்சியின்போது பெரம்பூரில் மேம்பாலம் கட்டும் பணி இடையிலேயே நின்று போனது. அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., 'பெரம்பூர் பாலம் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கிறது’ என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் 2001-ம் ஆண்டு கமிஷன் போட்டது. விசாரணை முடித்து அவரும் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துவிட்டார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பெரம்பூர் பாலம் வந்ததே தவிர... கமிஷன் அறிக்கை ரிலீஸ் ஆகவில்லை!


தி.மு.க. விசாரணை கமிஷன்கள்! 


கருணாநிதியின் ஐந்து ஆண்டு ஆட்சியிலும் சில விசாரணை கமிஷன்கள் அமைக்கப்​பட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராக கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையில் சிறுதாவூர் விசாரணை கமிஷன் அமைத்தது தி.மு.க. 'ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை!’ என்று சொன்னது அந்த கமிஷன்.


சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளியில் சுகன்யா என்ற மாணவி மர்மமான முறையில் இறக்க... நீதிபதி சாமிதுரை தலைமையில் கமிஷன் போடப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட... விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. நீதிபதிகளை விமர்​சித்து ஆற்காடு வீராசாமி பேசிய பேச்சுகள் பரபரப்பைக் கிளப்பின. கடைசியில், இந்த கமிஷன் செயல்படவே இல்லை.


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அரங்கேறிய கலவரத்தின் ஆணி வேரைக் கண்டு​பிடிக்க, 2008-ல் நீதிபதி சண்முகம் கமிஷனும் அமைக்கப்பட்டது. இருந்தும், சட்டக் கல்லூரியில் இது​போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.


புஸ்வாணமான பரிந்துரைகள்! 


கும்பகோணம் தீ விபத்து பற்றி விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன், தீ விபத்துக்குக் காரணமான 24 பேரை அடையாளம் காட்டியது. இதில் 12 பேர் மட்டும் குற்றவாளிக் கூண்டில் உள்ளனர். மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 'பாலர் பள்ளிகளை முறைப்படுத்திக் கண்காணிக்க தனி இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக ஆட்டோ, வேன்களில் மாணவர்களை ஏற்றக் கூடாது’ உட்பட பல பரிந்துரைகள் இன்று வரை நிறைவேறவில்லை.


1999-ம் ஆண்டு நடந்த மத்திய சிறைக் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட டேவிட் கிறிஸ்டியன் கமிஷன், 'சிறைப் பணியாளர்களிடையே காணப்படும் ஊழலை உறுதியுடன் ஒடுக்கவும், கைதிகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்றும் சொன்னது.


சென்னை சட்டக் கல்லூரியில் மோதல் தொடர்​பான நீதிபதி சண்முகம் கமிஷன், 'சட்டக் கல்லூரியை மூன்றாகப் பிரித்து தாம்பரம், திருவள்ளூர் உள்​ளிட்ட இடங்களுக்கு மாற்ற வேண்டும்’ என்று பரிந்துரைத்தது. 


சாதி கலவரங்கள் தொடர்பாக நீதிபதி மோகன் கமிஷன், 'சாதித் தலைவர்கள் சிலைகளை அருங்​காட்சிகத்தில் வைக்க வேண்டும்’ என்று அரசுக்கு அறிவுரை கூறியது.


தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பலியானது தொடர்பாக 1999-ல் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் கமிஷன், 'அரசியல் கட்சி ஊர்வலங்களைத் தடை செய்யப் பொருத்தமான சட்டங்களை இயற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டது. இந்த விசாரணை கமிஷன்களின் பரிந்துரைகள் எல்லாம் ஏட்டோடு போய்விட்டன.


கரையும் கரன்சிகள்! 


நீதிபதி சம்பளம், படிகள், வீட்டு வாடகை, பயணச் செலவுகள், தொலைபேசி, மின் கட்டணங்கள், சில்லறை செலவுகள், கமிஷன் தொடர்பான விளம்பரக் கட்டணங்கள், வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் பராமரிப்பு, அரசு வழக்கறிஞர் கட்டணம், அலுவலகப் பணியாளர்கள் என்று ஒரு விசாரணை கமிஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் கரையும். அத்தனையும் மக்கள் வரிப் பணம்.


சாம்பிளுக்கு, சில விசாரணை கமிஷன்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் இங்கே...


1. சிறுதாவூர்  நில விசாரணை கமிஷன் - 1.38 கோடி


2. கும்பகோணம் பள்ளி தீ விபத்து கமிஷன் - 11 லட்சம்


3. எம்.ஜி.ஆர். நகரில் நெரிசல் மரணம் கமிஷன்-   4.50 லட்சம்


4. கடலூர் குள்ளஞ்சாவடி லாக்அப் மரணம் கமிஷன் - சுமார் 40     லட்சம்


5. சட்டக் கல்லூரி மோதல் விசாரணை கமிஷன் - சுமார் 20 லட்சம்


அது சரி, விசாரணைக் கமிஷன் தேவையா இல்லையா என்பதற்கும் ஒரு விசாரணை கமிஷன் போட்டு விடுவார்களோ..?!


- எம்.பரக்கத் அலி
நன்றி : ஜூனியர்விகடன்-20-07-2011



இது போன்ற கமிஷன்களை அமைப்பதற்கான காரணமே, பிரச்சினையை ஊறப் போட்டு, ஆறப் போட்டு சமாதி கட்ட நினைப்பதுதான்..!


காவல்துறை விசாரணைக்கு அனுப்பி சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்திருப்பின் கைது செய்து சிறைக்கு அனுப்புவதைவிட்டுவிட்டு, இது போன்ற கமிஷன்களை நியமிப்பது ஏன் என்ற கேள்வி பலருக்குள்ளும் எழும்..


போலீஸ் விசாரணை என்றால் எப்போதும் ஆளுபவர்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஒரு நடவடிக்கை என்பதே மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. இதனாலேயே ஒரு நீதிபதியின் தலையில் இந்த வழக்கைக் கட்டி, அவர் விசாரித்து ஒரு அறிக்கை கொடுத்து, அந்த அறிக்கையில் இவர்களெல்லாம் குற்றவாளிகள்.. இவர்களெல்லாம் அப்பாவிகள்.. இத்தனை தவறுகள் நடந்துள்ளன.. இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். என்னென்ன செய்தால் நாளை இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என்பதையெல்லாம்தான் இந்த கமிஷன்கள் தங்களது அறிக்கையில் சொல்ல வேண்டும்..!


எனக்கு நினைவு தெரிந்து ஒரேயொரு கமிஷன் மட்டுமே இதுவரையில் உருப்படியானது என்று நான் நினைக்கிறேன்.


அது 1990-1995-களில் போலீஸ் சித்ரவதையில் சிக்கியவர்களின் கண்ணீர்க் கதைகளை வெளிக்கொணர்ந்த நீதிபதி காலித் கமிஷன்.


அன்றையக் காலக்கட்டத்தில் வெளிவந்த ஜூனியர்விகடன் பத்திரிகையிலும், தராசு மற்றும் புலனாய்வு பத்திரிகைகளில் வாரத்திற்கு ஒரு லாக்கப் சாவுகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். இப்போதாவது நிலைமை பரவாயில்லை என்றுதான் சொல்ல முடிகிறது. அந்த அளவுக்கு கொடூரமானதாக இருந்த அந்தச் சமயத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் வழக்குகளையெல்லாம் படித்து, படித்து வெறுப்பாகி ஓய்வு பெற்ற நீதிபதி காலித் அவர்களின் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்து நீதிமன்றத்தில் வழக்கு போட்ட அனைத்து புகார்தாரர்களின் மனுவையும் விசாரிக்கச் சொன்னது..


நீதிபதி காலித் கமிஷன் அளித்த அறிக்கையைக்கூட பல பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. பலவித வழக்குகளில் இருந்த உண்மைச் செய்திகள் கண்ணில் கண்ணீர் வரவழைக்கும்விதமாக உருக்கமாக சொல்லப்பட்டிருந்தது. அந்த கமிஷன் அறிக்கையை அதன் பின்பு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை..!


ஆனால் ஒரு விழிப்புணர்வு மக்களிடையேயும் தொண்டு நிறுவனங்களிடத்திலும், அரசியல் இல்லாத இயக்கத்தினரிடமும் ஏற்பட்டது. இதற்குப் பின்னர் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு போடுவது முன்னைவிட அதிகமாகி இப்போது லாக்கப் சாவுகள் மிக, மிக குறைந்துள்ளன என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.


தாமிரபரணி ஆற்றின் கரையோரம் காவல்துறை நடத்திய தடியடியினால் 17 பேர் ஆற்றில் குதித்து மரணமடைந்த சம்பவத்தை விசாரித்த நீதிபதி மோகன் கமிஷன் அப்பட்டமாக ஒரு பொய்யைச் சொல்லியிருந்தது..


அந்தச் சம்பவத்திற்கு காவல்துறை எந்தவிதத்திலும் காரணமில்லை. அதற்குக் காரணம் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் என்றது. இது அப்பட்டமான ஒரு சார்பு தீர்ப்பு. ஆனால் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று நீதிபதி மோகனை கமிஷன் தலைவராக நியமித்தபோதே பலரும் ஊகித்து கருத்துச் சொல்லியிருந்தனர். அதேபோலத்தான் நடந்தது.


தங்களுக்கு சாதகமான நீதிபதிகளைத் தேடிப் பிடிப்பது. அவர்கள் தலையில் கமிஷனைக் கட்டுவது. யார் குற்றம் சொன்னாலும், அதான் கமிஷன் போட்டாச்சுல்ல.. அறிக்கை வரட்டும்.. பார்ப்போம்.. என்று பிரச்சினையை தள்ளிப் போடுவது. அதற்குள் இதைவிட பெரிய பிரச்சினை வந்துவிடும். உடனேயே மக்கள் மனம் அதை நாடி ஓடியவுடன், வழக்கம்போல இந்த கமிஷனுக்கு மங்களம் பாடிவிடுவார்கள்..!


இப்படித்தான் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கும் கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக இது போன்ற கமிஷன்கள் நிறையவே உபயோகப்படுகின்றன..! ஆனால் நமக்குத்தான் வழக்கம்போல எதுக்கும் பிரயோசனமில்லை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக