ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 24 நவம்பர், 2014

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி 10 ஆயிரம் கிராமங்களில் புதிய தமிழகம் கட்சிதிண்ணைப் பிரசாரம்...

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தீர்மானங்கள்: தென்தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெற்ற தொடர் படுகொலை சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசைக் கோருவது.1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்து கொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப்பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது.வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரியாக ஒரு சிறப்பு வழக்குரைஞர் குழு அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் செல்லப்பா உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக