ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை

நெல்லை: நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் பருவமழை பொய்த்து நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கும், விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. ஆகையால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மழை பெய்தால் கூட மழை நீரை சேமிக்கும் வகையில் திட்டங்கள் இல்லை. தமிழகத்தில் மொத்தம் 386 ஒன்றியங்கள் உள்ளன. இதில் 160க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர் குடிநீருக்கும், விவசாய பணிகளுக்கும் அதிகமாக பயன்படுகிறது.
தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி நிலத்தடி நீர் வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. அதில் சில சரத்துக்கள் கடுமையாக இருந்ததால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்து நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். கனிம வளத்தை நிரந்தரமாக பாதுகாக்க வலுவான கொள்கையை அரசு வகுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி செப்டம்பர் முதல் வாரத்தில் மாவட்டம்தோறும் புதிய தமிழகம் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள், நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்புகளை ஒன்றிணைத்து சைக்கிள் பேரணி நடத்துகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக