ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

முதுகுளத்தூர் பயங்கரம்

1957 பொதுத்தேர்தல் அதற்கடுத்த இடைத்தேர்தல் ஆகியவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரு சாதிகளுக்கிடையில் கொந்தளிப்பு எழுந்தது. அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுசெய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் இம்மானுவேல் சேகரன் அம்மக்கள் சார்பாகக் கலந்துகொண்டார். மறவர்கள் சார்பில் உ. முத்தராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேலின் தலைமைத் தகுதி குறித்து விவாதம் எழுந்தது. இருவரும் சேர்ந்து கையெழுத்திடும் கூட்டறிக்கைக்கு முத்துராமலிங்கத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகள் வெளியிடும் ஆட்சியரின் முயற்சியில் உருவான சமாதானத் திட்டத்தோடு கூட்டம் முடிந்தது. மறுநாள் செப்டம்பர் 11இல் இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இரு சமூகத்தினரிடையே எழுந்த மோதல் பல உயிர்களையும் பலிகொண்டது. சேதமான சொத்துகள் இருதரப்பிலும் இருந்தன. ஒரு மாதத்திற்கும் மேலாக இம்மோதல் நீடித்தது. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாகத் தமிழக வரலாற்றில் முதுகுளத்தூர் பதிவானது. அடங்க மறுத்ததும் திமிறி எழுந்ததுமான செயல்பாடுகளால் தலித்துகள் எழுச்சி பெற்றது உண்மை. 1957இல் முதுகுளத்தூரில் நேர்ந்த தலித் எழுச்சியைக் குறித்து அந்தக் காலகட்டத்தில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன. இதைக் கலவரமாகச் சித்திரித்து தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் (1958), பயங்கரமாக அதை வர்ணித்து டி.எஸ். சொக்கலிங்கம் எழுதிய முதுகுளத்தூர் பயங்கரம் (1957). 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவ்விரண்டு நூல்களும் அடுத்தடுத்து மறுபதிப்புக் கண்டுள்ளன. முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான காங்கிரஸின் தலித் ஆதரவு நூல்களேயானாலும் இவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. ஒடுக்கப்பட்ட சாதி, ஆதிக்கச் சாதிக்கு எதிராக மேல் எழும் ஒரு நிகழ்வைக் கலவரமாகப் பார்ப்பதற்கும் பயங்கரமாகப் பார்ப்பதற்குமான வித்தியாசமே அது. தினகரன் சுயசாதி அபிமானத்தையும் கடந்து தலித் ஆதரவு நிலைப்பாடெடுத்து எழுதினார். விளைவாகச் சொந்தச் சாதியினரால் கொல்லவும்பட்டார். சொக்கலிங்கத்தின் நூலிலும் தலித் ஆதரவு இழையோடுகிறது. அது காங்கிரஸ், குறிப்பாகக் காமராஜ் என்ற தறியிலிருந்து புறப்பட்ட இழையாகும். சம்பவக் காலத்தில் டி.எஸ். சொக்கலிங்கம் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளைப் பத்திரிகையாளர் மயிலைநாதன் தொகுத்து முதுகுளத்தூர் பயங்கரம் என்னும் பெயரில் இந்நூலாக்கினார். முதுகுளத்தூர் சம்பவம், அரசியல் நிகழ்வல்ல, வகுப்புகளுக்கிடையிலான போராட்டமே என்பதை நிறுவிக்காட்டுவதே ஆசிரியரின் நோக்கம். குறிப்பிட்ட நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்த சம்பவங்கள், அவற்றைக் குறித்த பத்திரிகைச் செய்திகளில் படிந்துள்ள அரசியல் சாயம், அறியாமையின் தூசு, சதியின் பகுதி ஆகியவற்றை விளக்குவன நூலின் முதல் இரண்டு பகுதிகள். முதுகுளத்தூர் பகுதி நிலவரிகூட வசூலிக்க முடியாதபடி அராஜகப் பிடியில் இருந்தது பற்றிய விவரம் மூன்றாம் பகுதி. தலைவிரித்தாடிய அராஜகமும் அப்பகுதியைப் பார்வையிட வந்த மத்திய உள்துறை அமைச்சர் தத்தாரின் வருகையைப் பற்றிய விவரணையும் தொடரும் பகுதிகள். தலித்துகளின் துயர வரலாறும் சட்ட சபையில் காங்கிரஸ் கட்சிமீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் அரசின் நடவடிக்கைகள் பற்றியதும் இறுதிப் பகுதிகள். இந்நூலின் முன் இணைப்பாக 'மதுரைக் கோயில் நுழைவு', 'உ. முத்துராமலிங்கம் பொய்மையால் வேயப்பட்ட காகித ஓடம்' என்னும் பதிப்பாசிரியரின் இரு கட்டுரைகளும், டி. எஸ். சொக்கலிங்கம் பற்றிய பொன். தனசேகரனின் அறிமுகக் கட்டுரையும் உள்ளன. பின்னிணைப்பாகத் தலித் தலைவர் பி. மருதையாவின் அறிக்கையும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது சகஜானந்தரின் சட்டசபைப் பேச்சும் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ காலத்தில் எழுதப்பட்ட இப் பிரதிகளை, நிகழ்ச்சிகளை வரலாற்றில் வைத்துப்பார்க்கும் அரிய வாய்ப்பை மறுபதிப்பு செய்திருக்கும் பதிப்பாசிரியருக்குக் காலம் அளித்திருக்கிறது. அதனால் நிகழ்வுகளை அலசிக் கொள்கைரீதியான தர்க்கங்களோடு அ. ஜெகநாதன் முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் சூழலை விளக்கும் இன்னும் பல அம்சங்கள் தேவைப்படினும் பயனுள்ள முன்னுரை. சொக்கலிங்கத்தின் நூல் சந்தேகமில்லாமல் காங்கிரஸ் சார்பு எழுத்துகள்தாம். அவை முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக இருப்பதால் தலித் ஆதரவு எழுத்துகளாகத் தோற்றம் தருகின்றன. தன் தொகுதிவாழ் மக்களின் சாதிகளைத் தம் கைப்பட எழுதிவைத்திருந்த காமராஜரின் சுயசாதி ஆதரவு நிலைப்பாட்டை, அவர் தலித்துகளை ஆதரிப்பதால் நாம் புறக்கணித்துவிட முடியாது. கட்சி அரசியலில் சாதிகளின் செல்வாக்கை மறுக்க முடியாத மோசமான நிலையை ஒப்புக்கொண்டு சொக்கலிங்கமும் வருந்துகிறார் என்பது தான் நிலைமை. அது அரசியல் கலவரமல்ல, வகுப்பு மோதல், அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தம் ஆதிக்கத்திலேயே இன்னொரு சாதியினரை வைத்திருக்க விரும்பி அதன் பொருட்டு வன்முறையில் ஈடுபட்டதன் விளைவே முதுகுளத்தூர் பயங்கரம் என்பதாக இந்நூல் பேசுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் தற்காத்துக்கொள்ள மேற்கொண்ட எதிர்ப்பு தன்னெழுச்சியாக நேர்ந்ததாகச் சொக்கலிங்கம் நூல் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாகக் காங்கிரஸ் சேவையின் விளைவு அது என்பதாகப் பீற்றிக்கொள்கிறது. அது காங்கிரஸ் சேவையின் விளைவென்றால் காங்கிரஸ்காரர் அனைவருக்கும் அதில் பங்கு உண்டுதானே. சொக்கலிங்கத்துக்குத் தன் காங்கிரஸ் ஆதரவு வாதத்திற்கு வலுச் சேர்க்கப் பெரியாரின் நிலைப்பாட்டையும் பாராட்ட நேர்ந்துவிடுகிறது. முதுகுளத்தூர் சம்பவத்தில் தலித்துகளின் பக்கம் பெரியார் சார்புநிலை எடுத்ததற்கு அரசியல் காரணம் கற்பிக்கும் பிந்தைய வரலாறுகளை முன் உணர்ந்தோ என்னவோ ஒடுக்கப்படும் பிரிவினர்மீது எப்போதும் கவனம் குவிக்கும் பெரியாரின் இயல்பே தலித் சார்பு நிலைக்குக் காரணம் எனச் சொக்கலிங்கம் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். பெரியார், திராவிடம் என்ற கருத்தாக்கங்கள்மீது எப்போதும் எதிர் நிலை எடுப்பவர் சொக்கலிங்கம் என்பது வரலாறு அறிந்த செய்தி. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலும் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பது சொக்கலிங்கத்தின் புகழ்பெற்ற கிண்டல். திராவிடர் கழகங்களின் உயிர்மூச்சான இட ஒதுக்கீட்டையே கிண்டல் செய்த சொக்கலிங்கம் பெரியாரை வேறு வழியின்றிப் பாராட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தலித்துகளின் தன்னெழுச்சியைப் போற்றி விதந்தோத வேண்டிய இந்நூல், காங்கிரசின் தலித் நிலைப்பாடுமீது சார்புணர்ச்சி எழுமாறு உருவாகிவிட்டது. அதற்கு உதவுவதுபோல் நூலின் முன் இணைப்புக் கட்டுரைகள் இரண்டும் தலித்துகளுக்காக உழைத்ததாகக் காங்கிரஸ் பலபடப் பேசும் வைத்தியநாத அய்யரையும் ராமேசுவரி நேருவையும் (நூல் நெடுக இவர் பெயர் ராஜேசுவரி நேரு என்று பதிவாகியுள்ளது. நூலில் காணலாகும் பல பிழையான பெயர்களுடன் இதுவும் சேர்த்தி) புகழ்ந்து தள்ளுகின்றன. உணர்ச்சியின் பெருக்கில் கோபத்தின் திசைவழியில் இயங்கும் முன் இரு கட்டுரைகளின் மிகை அழுத்தம் காங்கிரஸ் சார்பு எழுத்தான இந்நூலைச் சொக்கலிங்கம் என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் சமத்துவ இந்தியா நோக்கிய கனவு பற்றிய எழுத்தாக நினைக்கவைத்துவிடுகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒருவருக்கு எதிராக இருந்தவர்கள் இன்னொரு காலகட்டத்தில் அவருக்குச் சார்பான நிலை எடுப்பது நாடாளுமன்ற அரசியலில் தவிர்க்க இயலாதது. தேவரை எதிர்த்த தினகரனோடு தோள் சேர்ந்து நின்ற ஆறுமுகம் பின்னாளில் தேவரைப் பாராட்டிப் புத்தகம் எழுதினார். சொக்கலிங்கத்தின் நிலைப் பாட்டையே அவருக்குப் பிறகும் வாழ்ந்த மயிலைநாதன் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அது நடக்காதபோது அவரைக் குருத்துரோகி என்று சொல்வதும் மீண்டும் யோசிக்க வேண்டியவை. ஏ.கே. செட்டியார், மயிலைநாதன், தி.வ. மெய்கண்டார், அன்பு பொன்னோவியம் போன்றோர் வரலாற்றின் தொடர்ச்சிக்கு அளிக்கும் ஆவணச் சேகரிப்புப் பங்களிப்பை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. நமது விமர்சனங்கள் வரலாற்றுக்குதவும் அவர்களின் இருப்பைக் காலிசெய்துவிடக் கூடாது. அதேசமயம் சந்தர்ப்பவாதப் புத்தக வியாபாரிகளைச் சாடுவதை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். முதுகுளத்தூர் சம்பவத்தைப் பள்ளர்களின் விடுதலைப் போராட்டமாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த தலித்துகளின் எழுச்சியாகப் பார்ப்பதும் உணர்வதும் தலித் எழுச்சிப் பயணத்தில் நல்ல சமிக்ஞைகள். கடைசியாக ஒரு வார்த்தை. முதுகுளத்தூர் கலவரம் நூலில் நேர்ந்திருந்த இரண்டு தவறுகளுக்காகத் தமிழ் அறிவுலகத்திடம் இந்நூலில் மன்னிப்பைக் கோரியுள்ளார் பதிப்பு ஆசிரியர். அம்மாதிரியான தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் விமர்சகர்களுடையவை. ஆனால் விமர்சகர்கள் அவற்றை உணர்ந்திருந்தாலும் சொல்லாமல் இருந்திருக்கலாம். அதற்குக் காரணங்கள் இரண்டு: இம்மாதிரியான நூல் முயற்சிகளுக்குப் பின்னால் நிற்கும் உழைப்பு பற்றிய மதிப்பும் தங்கள்மேல் ஊற்றப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் தார் டின்களின் மீதான கவனமும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக