ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் திரு.உமாசங்கர் ஐஏஎஸ்....காவல்துறை உண்மைக்குப் புறம்பான செய்தி.

 

http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/uma-shankar-ias.jpg

அன்புள்ள தமிழக அரசியல் ஆசிரியருக்கு,

தங்களது 25.1.2012 இதழில் நான் பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன், இதனால் காவல்துறை என்னைக் கஷ்டப்பட்டு காப்பாற்றியது என்ற உண்மைக்குப் புறம்பான செய்தி  வெளியாகியுள்ளது. உண்மையில் தமிழகக் காவல்துறையைப் பயன்படுத்தி என்னை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்றுதான் ஒரு முக்கிய அரசியல் கட்சி முயற்சி செய்து கடும் தோல்வியைச் சந்தித்தது. உண்மை என்னவென்றால் நான் என் சகோதரன் பசுபதிபாண்டியன் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன் ஆனால் ஊர்வலம் எதிலும் கலந்து கொள்ளவில்லை. காவல்துறையின் பாதுகாவல் எனக்கு எந்த நேரத்திலும் தேவைப்படவில்லை. நான் சென்றிருந்த நல் அடக்க மைதானத்தில் முழு அமைதி இருந்தது. மரித்துப்போன என் சகோதரனுக்கு மலர்மாலை அஞ்சலி செலுத்தி விட்டு நேரே ஊர் திரும்பி விட்டேன். 

உங்கள் பத்திரிக்கையில் வந்தது போல "பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்ல... அவர் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையும் அப்போது இருந்ததாம். போலீசார்தான் மிகுந்த சிரமமெடுத்து அவரை அப்போது காப்பாற்றினார்களாம். அவருக்கு எதிர்ப்பானவர்கள் பலரும் ஆயுதங்களோடு செல்ல...ஊர்வலத்திலிருந்து உமாசங்கரை தனியே அழைத்து வந்து உயிர் தப்பிக்க வைத்தார்களாம்,,," இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. நான் ஊர்வலத்திற்கே செல்லவில்லை என்கிறபோது போலீசார் எப்படி என்னை நாடகபாணியில் காப்பாற்ற முடியும்?

எனக்கு எந்த சூழ்நிலையிலும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டதில்லை. ஜீலை 2010ல் என்னை ஐ ஏ ஸ் பணியிலிருந்து பொய்க் காரணம் கூறி தற்காலிகப்பணி நீக்கம் செய்து பின்னர் எப்படியாவது என்னைக் கைது செய்து ஜெயிலில் தள்ளி குடும்பத்தையும் ஏதாவது பண்ணவேண்டும் என ஒரு முக்கிய அரசியல் தலைவர் குடும்பம் முயற்சி செய்தபோது தமிழகக் காவல்துறைதான் என்னைக் காப்பாற்றியதா?

ஊழல் பேர்வழிகள் தமிழகக் காவல் துறையைப்பயன்படுத்திதான் என்னைக் காயப்படுத்த முயற்சிசெய்து வருகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். 

எனக்கும் என் குடும்பத்திற்கும் இயேசு கிறிஸ்து தனது தேவ தூதர்கள் பட்டாளத்தைப் பாதுகாப்புக்கு நியமித்துள்ளார். இந்தப் பாதுகாப்பு அரணை எந்த வல்லமையாலும் உடைக்க முடியாது. எனக்குக்  கிறிஸ்து இயேசுவின் தேவ  தூதர்கள் தரும் பாதுகாப்பு இந்திய பிரதமருக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ்  பாதுகாப்பைவிட 100 மடங்கு உறுதியானது. போலீஸ் தரும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருக்கும் போதுதான் திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி போன்றோர் கொலை செய்யப்பட்டனர். அதுபோன்ற தவறுகள் கிறிஸ்து இயேசுவின் தேவ  தூதர்கள் தரும் பாதுகாப்பில் நிகழ்வதில்லை. எந்த வித காவல் துறை பாதுகாப்பும் எனக்கு எதிர் காலத்திலும் தேவைப்படாது. பொய் வழக்குகள் போட்டு தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் சரிதான். 
மரித்துப்போன எனது சகோதரன் பசுபதி பாண்டியன் தான் முதன் முதலில் நான் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டபோது திருநெல்வேலியில் ஒரு பெரிய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார். தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் இனத்திலிருந்து நீக்கி தமிழக அரசியல்வாதிகளின் ஏமாற்றுகளிலிருந்தும் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் என அவர் நடத்திய இயக்கத்திற்கு நான் ஆதரவு கொடுத்து ஆகஸ்டு 2009ல் திருநெல்வேலியில் ஒரு கருத்தாலோசனைக் கூட்டமும் நடத்தினோம். 
சகோதரன் பசுபதி பாண்டியன் இறப்பு தேவந்திர குல இனத்திற்கு ஒரு பெரிய இழப்புதான். அவருக்கு நன்றியுன் கூடிய மரியாதை செலுத்தத்தான் நான் தூத்துக்குடி சென்று அவர் உடலுக்கு மாலை மரியாதை செய்தேன். மேலும் என் இனத்தவர்கள் கலவரத்தில் ஈடுபடக்கூடாது மற்றும் பழி வாங்க முயற்சிக்கக் கூடாது என்று அறிவுறை கூற விரும்பினேன். எனவே அவர் உடல் வரும் வரை மைதானத்தில் காத்துக் கொண்டிருந்தவர்களுடன் பேசி இந்த இனம் இனி சட்டத்தைத் தன் கையில் எடுக்கக் கூடாது என்று அறிவுறை கொடுத்துக் கொண்டிருந்தேன். அங்கு எந்த விதப் பதட்டமும் எப்போதும் இல்லை. எந்தப் போலீசும் இல்லாமல் அங்கிருந்தவர்களுடன் சுமூகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். இதுதான் உண்மை. (நான் போகுமிடங்களில் ரகசிய போலீஸ் நோட்டம் விடுவதற்காக நிற்பார்கள், ஆனால் சாதாரண உடையில். இவர்கள் வருவது என்னைப் பாதுகாக்க அல்ல. நோட்டம் விடுவதற்காகவே) 

நான் கிறிஸ்து இயேசுவின் உண்மை சீடன். எனவே நான் எந்த இனத்தையோ அல்லது நபரையோ குறித்து கோபம் அல்லது காழ்ப்புணர்ச்சி அடைவதில்லை. எல்லா சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காகத் தினமும் காலை 4 முதல் 6 வரை ஜெபம் செய்கிறேன். எனவே சகோதரன் பசுபதி பாண்டியன் மரணத்தில் எனக்கு எந்த இனத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. சட்டம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது எனக்கு எங்கிருந்து எதிரிகள் முளைப்பார்கள்?
நான் தனியாகத்தான் இத்தனை வருடங்களாக வாகனம் ஓட்டுகிறேன். ஓட்டுனர் வைத்துக்கொள்வது கிடையாது. பணிநீக்க காலத்திலும் இதேபோல்தான் வாகனம் ஓட்டினேன், இடங்களுக்குச் சென்று வந்தோம். எனக்கோ வீட்டிற்கோ இதுவரை மாநில போலீசின் பாதுகாப்பை நான் கோரவில்லை. ஊழலுக்கு எதிராக நான் வழக்குத் தொடுத்தபோது அரசியல் கட்சிகள் எனக்குப் பாதுகாப்புத் தருகிறேன் என்று கூற அதை நான் நிராகரித்துள்ளேன். இப்போது கிறிஸ்து இயேசுவின் சீடராக மாறியபின் எனக்கு தெய்வீகப் பாதுகாப்பு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை.
நிற்க. 2012ல் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் சுனாமி, பூகம்பம், பெரிய தொற்று வியாதிகள், கடும் புயல் போன்ற பெரும் அழிவுகள் நிகழவிருப்பதாக வெளிப்பாடுகள் இருப்பதால் நான் கிறிஸ்தவர்களை எச்சரிக்க வேண்டியது என் கடமை. இதற்காக எல்லா இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன். கிறிஸ்தவர்கள் இந்த கோபாக்கினையிலிருந்து தப்ப வேண்டும் என்பது என்னுடைய ஆவல். என்னுடைய சொந்த வாகனத்தில் விடுமுறை நாட்களில் செல்கிறேன் அல்லது விடுப்பு எடுத்துச் செல்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? 
என்னை எப்படியாவது ஐ ஏ எஸ் பணியிலிந்து நீக்கி விடத் துடிக்கும் சில ஆதிக்க சக்திகள் இது போன்ற பொய் வதந்திகளைப் பரப்ப முயலுகின்றன. முடிவில் உண்மை மட்டுமே வெல்லும்.
தங்கள் வெளியீட்டில் உண்மைக்கு மாறாக தகவல்கள் வந்துள்ளமையாலும் அது என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் எற்படுத்தியுள்ளமையாலும் தயவு செய்து இந்த மறுப்புச் செய்தியை வரும் இதழில் வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

அன்புடன்

செ உமாசங்கர் IAS.,
Commissioner for Disciplinary Proceedings,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக