ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

முதுகுளத்தூர் கலவரம்

அதியமான் முதுகுளத்தூர் கலவரம்ஆசிரியர்: தினகரன்தொகுப்பும் மதிப்பும்: கா. இளம்பரிதிவெளியீடு: யாழ்மை134, மூன்றாம் தளம், தம்புசெட்டித் தெருபாரிமுனை, சென்னை 600 001இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2006பக் 120, விலை ரூ. 70. 1957 பொதுத் தேர்தல் - அதற்கடுத்த இடைத் தேர்தல் - அவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கொந்தளிப்பு எழுந்தது. அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் சார்பில் கலந்துகொண்டவர் இம்மானுவேல் சேகரன். மறவர்கள் சார்பில் உ. முத்துராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேல் அவர்களின் தலைமை குறித்து விவாதம் எழுந்ததாகத் தெரிகிறது. கூட்டறிக்கைக்குத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகளை வெளியிடும் சமாதானத் திட்டத்தோடு கூட்டம் ஒருவகையாக முடிந்தது. மறுநாள் இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அக்கொலையின் தொடர்ச்சியாக இரு சமூகத்தினரிடையே மோதல் மூண்டு அது ஏறக்குறைய ஒரு மாத காலம் நீண்டது. பல மனித உயிர்கள் பறிபோயின. நாசமான சொத்துகள் இரு தரப்பிலும் இருந்தன. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாக முதுகுளத்தூர் தமிழக வரலாற்றில் பதிவானது. தமிழகத்தை உலுக்கிய மிக முக்கியமான சாதியக் கிளர்ச்சிகளுள் ஒன்றான இந்தக் கலவரத்தின் மூலகாரணம் என்ன? முடிவு எது? இவை குறித்துப் பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், காங்கிரஸ்காரர் தினகரன் சம்பவக் காலத்திலேயே எழுதி வெளிவந்த நூலின் புதிய அண்மைப் பதிப்பு 'முதுகுளத்தூர் கலவரம்' என்ற இந்நூல். 'உதடசைந்தால் உயிர் போய்விடுமே என்று உலகமே பயந்தபோது உண்மையைச் சொன்னால் ஒன்றுமே வராது' என்று தவறாக நினைத்து, உண்மையைச் சொல்லி உயிரை மாய்த்துக்கொண்ட தினகரனின் இந்நூல் பின்வரும் விஷயங்களை விரிவாகப் பேசுகிறது. 12ஆம் நூற்றாண்டிலிருந்து மறவர்களின் சரித்திரம், 1932-1939; 1947-1957 ஆகிய காலகட்டங்களில் இராமநாதபுரம் பகுதியின் அரசியலில் சாதியத்தின் பங்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தை, இம்மானுவேலின் படுகொலை, அதனால் ஏற்பட்ட கலவரம், அரசியல் தலைவர்களின் கருத்துகள், விளைவுகள் என்ற நிரலில் நூல் ஆக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக அமைந்துள்ளவை நூலைக் காட்டிலும் முக்கியமானவை. மனித உரிமைகள் சர்வதேச மன்னிப்பு ஸ்தாபன காங்கிரஸ் ஒன்றின் அறிக்கை (1984), தேவர் தொடர்பான வழக்கின் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றின் தமிழ் வடிவம் (1940கள்), முது குளத்தூர் சேம நலச் சங்கத்தாரின் மனு (1957), இக்கலவரம் பற்றிய தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சரின் சட்டசபை அறிக்கை (1957) முதலியவை அந்தப் பின்னிணைப்புகள். அப்போதைய தமிழக முதல்வரும் இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான காமராஜ், முதுகுளத்தூர் கலவரம் இருபது வருடங்களாக இருந்துவரும் நாள்பட்ட சமூகப் பிரச்சினையின் விளைவு என்றார். "இந்தச் சதித்திட்டம் மதுரையிலும் விருது நகரிலும் உள்ள சிலரால் ரகசியமாய் வகுக்கப்பட்டது. ஹரிஜனங்களில் ஒரு பகுதியினருக்குப் பணம் கொடுத்து இந்தக் கலகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது ஆளும் காங்கிரசின் சதி" என்றார் முத்துராமலிங்கத் தேவர் (பக். 40). (இந்நிலப்பகுதியில் மிகப்பல ஊர்களில் விரிந்து கிடந்த விவசாய நிலத்திற்குச் சொந்தக்காரராய் இருந்த தேவர் அந்நிலங்களின் பயிர் ஏற்றத்திற்குப் பல்வேறு நிலைகளில் தொடர்பு உள்ளவர்களைப் பகைத்துக்கொள்ள வாய்ப்பு மிகக் குறைவு. அந்த விவசாயக் கூலிகளைத் தம் கீழ் வைத்துக்கொள்ள வேண்டி அவர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். எனவே தேவர், எந்த இனத்தைக் கலவரத்திற்குக் காரணமாகச் சுட்டுகிறார் என்பதை மேற்கண்ட குறிப்பிலிருந்து நாம் உணர முடியும்.) காமராஜ் அமைச்சரவையில் உள்துறையைக் கவனித்துவந்த எம். பக்தவத்சலம், அரசியல், வகுப்புவாதம், நிர்ப்பந்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துப் பிடித்த ராட்சஸப்பிண்டம் இக்கலவரம் என்றார். நிலப்பிரபுத்துவ முறை இன்னும் நீடிப்பதாய் நினைத்துக்கொண்ட ஒரு சமூகத்தின் மேலாண்மையின் விளைவு என்று பொருள்பட நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் கருத்துரைத்தார். சாதிகள் இருக்கும்வரை இந்தச் சண்டைகள் தீராது எனக் கலவரத்தின் ஆணிவேரைப் பிடித்தார் பெரியார். இப்படிச் சமூகத்தின் பலரும் இக்கலவரம் பற்றி பல்வேறு விதமாகக் கருத்து வெளியிட்ட நேரத்தில், 'கலகத்திற்கு வித்திட்ட வகுப்பிலும் நிலத்திலும் உதித்தவன் நான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயந்தான்' என்று இக்கலவரக் காரணம் பற்றிய (முன் எண்ணத்தோடு) ஒப்புதல் வாக்குமூலத்தோடு, இந்நூலாசிரியர் எழுத முனைந்திருக்கிறார். "காங்கிரஸ் கட்சியின் கீர்த்தியைக் கெடுக்க, சென்னை சர்க்காரின் திறமையைப் பழிக்க, தமிழ் மக்களின் மானத்தைப் பறிக்க வந்த இந்தச் சம்பவங்கள்" (பக். 23) என்று காங்கிரஸ் கட்சி, ஆட்சி ஆகியவற்றுக்கு நேர்ந்துவிட்ட இழுக்கை, தமிழ் மக்களின் மானத்தின் பேரால் துடைப்பதாகச் சொல்லித் தன் நூலைத் தொடங்குகிறார். தொடர்ந்து பல இடங்களிலும் கட்சியின் செயல்களை நியாயப்படுத்தும் தொனியிலேயே நூல் நகர்கிறது. நூலின் பக்கங்கள் 36, 38, 45, 51, 70 எனப் பல இடங்களில் இதற்கான சான்றுகளைப் பார்க்க முடியும். கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் அவருக்கு நெருக்கமான கட்சிசார்ந்த உறவு இருந்திருக்கிறது. 'இந்தக் கொலைக்கொள்ளி மனிதனைக் காங்கிரஸ் கட்சியில் கொண்டுவந்து சேர்த்தது யார்? என்று ஒரு சமயம் இராஜாஜி என்னிடம் கேட்டார்' என்று தேவரைக் குறிப்பிட்டு தினகரன் எழுதியுள்ளார் (பக். 39). ஒரு கட்சியில் ஒரு குறிப்பிட்ட குழுவின் உள் இடைவெளிகளைப் பெரிதுபடுத்தி, சம்பந்தப்பட்டவரின் செல்வாக்கைக் குறைக்கும் நுண் அரசியலின் விளைவு இந்தக் கேள்வி என்பது தினகரனுக்குத் தெரியாமலா இருக்கும்? இருந்தும் இதை எழுதுகிறார். கலவரப் பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டபோது, களத்தில் பேசிய பேச்சுகளை நூலாசிரியர் வியந்து போற்றும் வரிகள், அவரது காங்கிரஸ் பார்வையை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கம்யுனிஸ்ட் கட்சி கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கிண்டல் செய்வதும் கட்சிச் சார்பை நன்கு வெளிப்படுத்துகிறது. எனவே, தினகரனின் இந்தப் பிரதியைக் காங்கிரஸ் கட்சியை, ஆட்சியைக் காப்பாற்ற எழுதப்பட்டதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. தினகரனின் முன்வரலாறும் அதை உறுதி செய்கிறது. குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக ஒரு கட்சியில் இயங்கிய, 'பெரிதும் கட்சி சார்ந்த' எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று தினகரனைக் கருதலாம். கட்சிக்கு எதிராக அரசியல் செய்வதால் தேவர்மீது கோபம் கொண்டிருந்த காங்கிரஸ் தினகரன் மூலம் இந்தப் பிரதியை எழுதியிருக்கலாம். முது குளத்தூர் பயங்கரம் என்ற நூலை எழுதிய டி. எஸ். சொக்கலிங்கம் பிள்ளையின் பொருத்தப்பாட்டையும்விட மறவரான தினகரன் இது பற்றி எழுதுவது உயர்ந்தது என்று காங்கிரஸ் தலைவர் காமராஜ் நாடார் நினைத்திருக்கலாம். இந்நூலின் பின்னிணைப்பாகியுள்ள சிறு பிரசுரம் ஒன்று, இந்திராகாந்தியின் படத்தை அட்டையில் பிரசுரித்துக்கொள்ளும் அளவுக்குக் கட்சி சார்ந்த பிரசுரமாக உள்ளது. இச்சம்பவம் குறித்த உள்துறை அமைச்சரின் அரசு அறிக்கையும் கட்சியின் பார்வையிலேயே உருவாகியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய தன்மை கொண்ட இரண்டு எழுத்துருக்களை நூலில் இணைத்ததன் மூலம் கட்சி சார்ந்த தொனி நூலில் மிகுதியாகிவிட்டது. மற்ற பின்னிணைப்புகளான நீதிமன்றத் தீர்ப்புகள் இந்தப் பேராயப் பேரொளியின் முன் மங்கிவிட்டன. சாதிய ஒடுக்குமுறையின் எதிர்ப்புப் போராட்டமாக இந்தக் கலவரத்தைப் பார்க்கும் இந்நூலின் பதிப்பாளர்கள், ஆவணப்படுத்தப்படாத வரலாற்று மீட்பாகவே இதைக் கருதுகிறார்கள். ஆசிரியர் தினகரன் எப்படிச் சுயசாதி மறுத்துச் செயல்பட்டாரோ அப்படிப் பிற்படுத்தப்பட்டவர்கள் உயிர்த் தியாகம் செய்யுமளவிற்குச் சுயசாதி வெறியை எதிர்த்து வினையாற்றுவதுதான் தலித்தியத்திற்குச் செய்யும் முக்கியப் பங்களிப்பு எனும் கருத்தை முன்வைத்து நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள். பதிப்பாளர்களின் பார்வையில் தினகரனின் இந்த நூல் தலித்தியத்திற்கு ஆதரவான நூலாக மாறி உள்ளது. எந்தச் சமூகத்திலும் எழுதப்படாத வரலாறுகளே எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை இப்படிப்பட்ட மூலங்களிலிருந்தே நாம் உறிஞ்சி எடுக்க வேண்டியுள்ளது. ஆவணப்படுத்தாமல் அழிந்துகொண்டிருக்கும் இந்த வகை வரலாறுகள் உருப்பெற்று மேலெழும்போது, அதுவரையில் நிலவிய மைய நீரோட்ட வரலாறு முற்றிலும் தன்னை இழந்து காலக் கண்ணாடி முன் அம்மணமாய் நிற்கும். தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களின் வரலாறு வைக்கம், சேரன்மாதேவிப் போராட்டங்களாக வரலாற்றில் மறைந்துகிடக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியின் விதைகள் சித்தனூர், கண்டதேவி, வடுகனி, இரவுசேரி, முதுகுளத்தூர், கொடியங்குளம், தாமிரபரணிக் கரை எனப் பல இடங்களில் புதைந்து கிடக்கின்றன. அவை வெளிக் கிளம்பி, பெரிய மரமாகி, காற்றை நிரப்பும்போது வரலாறு முற்றிலும் மாறி நிற்கும். அரை நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட நூலை இன்றைய காலத்தோடு இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரைகள் இரண்டும் பிற்படுத்தப்பட்டவர்களைத் தலித்தியத்திற்கு எதிராக நிறுத்துகின்றன. இதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், விதிவிலக்காக, முதுகுளத்தூர் கலவரம் உள்பட இன்றுவரை அநேகப் பிரச்சினைகளில் தலித்தியத்திற்கு ஆதரவு சக்தியாகப் பெரியாரும், இந்தத் தினகரன் போன்ற சுயசாதி அபிமானமற்ற பிற்படுத்தப்பட்டவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இவர்கள் மிகச் சிலர். பிற்படுத்தப்பட்டவர்களில் தலித்திய ஆதரவு சக்தியாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இந்த நூலின் நோக்கங்களில் ஒன்று என்றால் இந்நூல்வழி கிடைக்கும் அதன் வெற்றி உடனடியானதல்ல. ஏற்கனவே, கடந்த 50 வருடங்களாகச் சமூகத்தில் செல்வாக்கு செலுத்திவந்த, நாட்டின் தபால்தலை வரை சென்றுவிட்ட சிலரது பண்புருக்களை இந்நூல் கடுமையாக அசைத்திருக்கிறது. ஒரு சாராரின் உயர்வுக்குக் காரணமானாலும் அது யார் பலியில் நிகழ்ந்திருக்கிறது என்பதை இந்நூல் சொல்லாமல் புரியவைத்துவிட்டது. தென் மாவட்டங்களில் பேச்சு வழக்கில் புழங்கிவரும் சொல்லாடல்களுக்கு அச்சு வடிவம் தந்துள்ள பிரதி இது. களப் போராட்டத்துக்கான அறிவுப் பின்புலத்தை வலுவடையச் செய்யும் திசையில் இந்நூல் பெரும்பணி ஆற்றும். ஒரு குறிப்பிட்ட கலவரம் பற்றிய இந்த ஆவணம் மறவர் - பள்ளர் மோதலில் மறவர்களுக்குத் தலைமை தாங்கியவரின் செயற்பாடுகளை விளக்குகிறதே தவிர, அவரது முந்தைய குற்றப் பரம்பரைச் சட்ட நீக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளை ஒதுக்கிப் புறந்தள்ளவில்லை. ஆனால் அவற்றில் கலந்துள்ள சாதிய உணர்வுகளை உணர்த்திச் செல்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகள் வாசக மனத்துக்குள் கட்டமைக்கும் பிம்பம் மிகக் கடுமையாக இருக்கும். பதிப்பாளர்கள் திறமையானவர்கள். ஆசிரியர் தினகரனின் தேவர் எதிர்ப்பு நிலை குறித்துத் தெளிவாக்கப்பட வேண்டிய சில புள்ளிகள் உள்ளன. அவர் தன் இதழை, தேவருடன் நெருங்கிய நட்பு கொண்ட ஒருவரின் (அ) இருவரின் துணையோடுதான் நடத்தியிருக்கிறார். எனவே அவ்விதழில் வெளியான தேவர் பற்றிய விமர்சனங்களைப் பகை முரணாகக் கொள்ளுவது பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. தனது வளர்ப்பு மகனையும் மீறித் முத்துராமலிங்கத் தேவருக்கு ஆவணம் தேடிய குழந்தைசாமி, தனது வளர்ப்புப் பத்திரிகையையும் மீறி தேவருக்கு ஆதரவு காட்டிய (குழந்தைசாமி மகன்) ஆறுமுகம் ஆகியோரின் செயல்கள் சுலபமாகப் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. வழிவழியாய் வரும் ஆறுமுகங்களின் நியாயம் என்ன என்பதை அறியாமல் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. கூடவே இருந்த பொன்னம்பலம் என்பவரின் வரலாறும் இதுவரை நமக்குத் தெரியவில்லை. இவை தினகரனின் சாதி கடந்த மனசாட்சியை மதிப்பிட உதவலாம். முதுகுளத்தூர் கலவரத்தைப் பள்ளர்களுக்கு எதிரான தேவரின் செயற்பாடாகப் பார்ப்பதும் நாடார்களின் சூழ்ச்சியாகக் கணித்துப் பயனடைந்தது நாடார்கள் எனச் சொல்வதும் காமராஜ் அவர்களின் அதிகார அரசியலின் ஒரு நிலையாக விவரிப்பதும் முதுகுளத்தூர் கலவரம் பற்றிய பல்வேறு கருத்து நிலைகள் ஆகும். அரசியல், சமூக ஈடுபாடு மிக்க ஒரு வேளாண் பேராசிரியர் (என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது) சொன்னது போலப் பள்ளர்கள் இன்று தேவேந்திரர் என்றும் மள்ளர் என்றும் ஆதிக்க சாதியினர் என்றும் கருதிக்கொள்ளும் அளவிற்குப் போர்க் குணம் மிக்க சக்தியாக வளர்ந்திருப்பதற்கு இந்தக் கலவரம் உதவியது என்பதுதான் கண்கூடான உண்மை. தென் மாவட்ட சாதிக் கொத்தில் மறவர், நாடார், பள்ளர், பறையர், சக்கிலியர் என்னும் வகைப்பாட்டில் முதல் நால்வர் பல்வேறு உரிமைப் போராட்டங்களின் ஊடாகக் கல்வி, பொருளாதார, அரசியல் ஏணியில் ஏறத் தொடங்கிவிட்டனர். இப்போது ஏணியின் பல படிக்கட்டுகளில் அவர்கள் மாறிமாறி இருக்கலாம். ஆனால், ஏணியின் அடிவாரத்தைக்கூட அடையாமல் அந்தக் கொத்தின் கடைசிப் பகுதி இருக்கிறது. வண்ண மை சேர்க்கப்பட்ட முத்திரைகளுடன் நண்பர்கள் காத்திருக்கும் சூழலில் இம்மாதிரியான நூல்களுக்கு அதன் உள்ளடக்கம், நிரல் முறை, ஆவணங்களின் நம்பகத்தன்மை, தகுதி, சூழல், முன்வைக்கும் வாதங்கள் சார்ந்த முழு விமர்சனங்களை அவ்வளவு எளிதில் எழுதிவிட முடியாது. இத்தகைய அரசியல் நூலின் விமர்சனங்களைப் பிரதிக்கு வெளியே உள்ள அம்சங்களே பெரிதும் தீர்மானிக்கின்றன. அதுவும் ஒருவகையில் சரிதான். அர்த்தம் பிரதியிலா இருக்கிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக