ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அ.தி.மு.க. ஆட்சியில் பரமக்குடி துப்பாக்கிசூடு ///தி.மு.க ஆட்சியில் தாமிரபரணிபடுகொலை...

பரமக்குடி கலவர காட்சிகள்

.....

தாமிரபரணி நதிக் கரையில் நின்று போலீஸ் போட்ட வெறி​யாட்டம் பற்றிய கடந்த

இதழ் கட்டுரையை கடைசி நிமிடத்தில் அச்சேற்றியபோது என்ன பயந்தோமோ... அதுவேதான் நடந்து, தமிழகத்தைப் பெருந்துயரில் ஆழ்த்திவிட்டது!

ஆம்... வெள்ளிக்கிழமை மூன்றாக இருந்த உயிர்ப் பலிகள், 17 ஆக உயர்ந்திருக்கிறது. தேடத் தேட ஆற்றுக்குள் இருந்து கிடைத்த உடல்களைக் கண்டு, நெல்லை நகரமே பதைபதைத்துப்போனது.

திங்கட்கிழமை 'பந்த்' என்று 'புதிய தமிழகம்' முதலில் அறிவித்து இருந்த​போதிலும், நெல்லை வந்து சோகத்தில் பங்கெடுத்த மூப்பனார், ''பந்த் வேண்டாம். இதை ஒரு கறுப்பு தினமாக துக்கம் அனுஷ்டிப்போம்...'' என்று சொல்லிவிட்டார்.

பந்த் என்ற பெயரில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள், போலீஸார் மீது தாக்குதல் நடத்திப் பழிவாங்கக்கூடும் என்று பரவியிருந்த அச்சம், இதன் மூலம் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டது.

இறந்த 17 பேரில் 11 பேர் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள். 'வேறு மாநில டாக்டர்களைக்கொண்டு போஸ்ட்​மார்ட்டம் செய்யாவிட்டால், இந்த உடல்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்' என்று அக்கட்சியினர் விடாப்பிடியாகச் சொல்வதால், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், போதிய குளிர்சாதன வசதி இல்லாத மார்ச்சுவரியில் அந்த உடல்கள் 'டீ-கம்போஸ்' ஆகி சிதையத் துவங்கி உள்ளன. இன்னும் இரண்டொரு நாட்களில் உடல்களைப் பெறாவிட்டால், அரசே தகனம் செய்துவிடவும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடக்கிறது.

எதிர்பாராத விதமாக போலீஸ் நிகழ்த்திய இந்தப் படுகொலைகளால், நிலைதடுமாறிப் போயிருக்​கும் தமிழக அரசு, சட்ட அமைச்சர் ஆலடி அருணாவையும் கூடுதல் டி.ஜி.பி-யான குமார​சாமியையும் நெல்லையிலேயே முகாமிடச் செய்து பதற்றம் தணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

நடக்கப்போகும் விசாரணையில், 'எங்கள் மீது தவறு இல்லை' என்று போலீஸ் சொல்லக்கூடும். ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த நிருபர்களுக்கு இன்னமும் பதற்றம் அடங்கவில்லை.

ஊர்வலத்தினர் தங்கள் மீது கல் எறியத் துவங்கியதும், போலீஸ் அவர்களைத் துரத்தித் தாக்கியபோது தாமிரபரணி தண்ணீர் முழுக்க மனிதத் தலைகள்தான். தண்ணீரில் தத்தளித்தவர்கள் கரைக்கு வர முயல, தண்ணீரிலும் சில போலீஸார் நீண்ட லத்திகளை வீசி மண்டையைப் பிளந்தனர். நீச்சல் தெரிந்த ஆண்களும், சில பெண்களும் மறு கரைக்கு நீந்தித் தப்பித்துவிட, மற்றவர்கள் தண்ணீர் குடித்தே மூழ்கிவிட்டனர்.

தன் கண் முன்னே அடிபட்டவர்கள் தண்ணீருக்குள் மூழ்கிச் சாக, அதிர்ஷ்ட​வசமாக மீண்டு வந்திருக்கும் மாஞ்சோலை டீ எஸ்டேட் பெண் தொழிலாளி விக்டோரியா படபடப்புடன் நம்மிடம் பேசினார். ''நீச்சல் தெரியாத நான் தண்ணீரைக் குடிச்சுட்டே இருந்தேன். மூச்சு வேற வாங்குது. நல்லபடியா ஒரு படிக்கல் கிடச்சப்போ அதைப் பிடிச்சுக்கிட்டேன். அதுக்குள்ள தத்தளிச்ச ஒரு பொண்ணை கேமராக்காரர் குதிச்சுக் காப்பாத்தினார். கட்சிக்காரங்க சிலரும் பெண்களைக் காப்பாத்திக் கரையில் போட்டாங்க. எனக்கும் ஒருத்தர் கை கொடுத்தார். அவரை என் வயித்துல ரெண்டு மூணு முறை இடிக்கச் சொன்னேன். அதுக்கப்புறம்தான் குடிச்சிருந்த தண்ணி எல்லாம் வெளியே வந்து எனக்கு சுவாசிக்கவே முடிஞ்சது!'' என்றார்.

சென்ற இதழில், இரண்டு வயதுக் குழந்தை​யைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த பெண்ணின் புகைப்படம் வந்திருந்ததே... அந்தப் பெண்மணியைத் தேடிப் பிடித்துப் பேசினோம். மாஞ்சோலையைச் சேர்ந்த அவர் பெயர் பார்வதி. ''முதுகுல அடிபட்ட உடனேயே தண்ணியில குதிச்சுட்டேன். எனக்கு நீச்சல் தெரியும் உடனே நீந்தி கரைக்கு வந்துட்டேன். அப்போ ஒரு பெண் மூழ்கிட்டிருக்க... யாரோ ஒரு ஆள் அவர் கையில் இருந்த குழந்தையைப் பிடுங்கிக் கரைக்குத் தூக்கிப் போட்டார். இதைப் பார்த்த நான் குழந்தையைக் கையில் தாங்கிப் பிடிச்சுக்கிட்டேன். குழந்தை கையில் இருந்ததால், போலீஸ்காரங்க என்னை அடிக்கலை. 'குழந்தையைக் கொண்டுட்டு ஓடுடீ'னு விரட்டினாங்க. அப்புறம் பெண் போலீஸார் வந்து என்னை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்​பினாங்க. போற வழியி​லேயே அந்தக் குழந்தை விக்னேஷ் இறந்துட்டான். இன்னிக்குத்தான் அந்தக் குழந்தையின் தாய் ரத்தினமேரியும் இறந்துட்டாங்கன்னும், அவங்க பாட்டி மேரி என்கிற மாரியம்மாள் ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்துட்டு வர்றதும் தெரிஞ்சது...'' என்று கண் கலங்கினார். குழந்தையின் தந்தை மாரியப்பன், கடந்த மாதம் நடந்த மாஞ்சோலை டீ எஸ்டேட் போராட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் இருக்கிறாராம்.

இரண்டாவது நாள் மீட்புப் பணியின்போது, ஐக்கிய ஜமாத் அமைப்பைச் சேர்ந்த கெய்சரின் உடல் கிடைத்தபோது, ஆரூண் எம்.எல்.ஏ. கலங்கிவிட்டார். ஐக்கிய ஜமாத்தின் சென்னை அலுவலகத்தைக் கவனித்தவர் கெய்சர். ராமநாதபுரத்துக்காரர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாம். அவர் அணிந்திருந்த ஒமேகா வாட்ச் உடலோடு சேர்ந்து ஒரு நாள் முழுக்க மூழ்கிக்கிடந்தும் ஓடிக்கொண்டே இருந்தது. அண்மைக் காலமாக ஆர்ப்பாட்டம், ஊர்வலம் எது நடந்தாலும் அவற்றை வீடியோ எடுக்கும் போலீஸார், இந்த முறை ஒன்றுக்கு மூன்றாக கேமராக்களை வைத்து ஊர்வலம், தடியடி எல்லாவற்றையும் 'ஷூட்' பண்ணினார்கள். மதுரையில் இருந்து வந்த தென் மண்டல ஐ.ஜி-யான விபாகர் ஷர்மா இந்த வீடியோ டேப்பைப் போட்டுப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.

அரணாக நின்று போலீஸாரைச் சுற்றி வளைத்துக்கொண்டு, தலைவர்கள் ஜீப்பை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கும்படி தொண்டர்கள் கோஷம் போடுகிறார்கள். அப்போது யாரோ சிலர் அங்கே நின்றுகொண்டு இருந்த ஒரு பெண் போலீஸைத் தொட போலீஸ் வெறிகொள்கிறது. அங்கே நின்று இருந்தவர்களைக் கலைக்க முதலில் கலவரத் தடுப்புப் படை லத்தியைச் சுழற்றுகிறது. அந்தப் பகுதியில் இருந்து நதிக் கரையை நோக்கி ஓடியவர்கள் கற்களை வீச, போலீஸ் மீதும் எதிர்ப் புறம் நின்ற மக்கள் மீதும் கற்கள் விழுகின்றன. தலைவர்கள் நின்று இருந்த ஜீப் அருகே நின்ற பெண்கள் கூட்டத்தில் இருந்தும் சிலர் போலீஸாரை நோக்கிக் கற்களை வீச, அதன் பிறகுதான் ஒட்டுமொத்தமாக இரண்டாவது கட்டத் தடியடி... போலீஸாரும் கற்களைத் தூக்கி மக்கள் மீது விட்டெறிகிறார்கள். கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்ட அதே நேரத்தில், விண்ணை நோக்கியும் இரண்டு முறை போலீஸார் துப்பாக்கியால் சுடுகிறார்கள். மேலப்பாளையம் நோக்கி விரையும் தலைவர்கள் ஜீப்புக்குப் பின்னாலேயே ஒரு பெண் ஓடுகிறார். அதிரடிப் படையினர் அந்த ஜீப்பை நோக்கியும் கற்களை வீசிய காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது!

மக்களின் கல்லெறியில் இருந்து தப்ப சுவர் ஏறிக் குதித்து ஓடியும், நெஞ்சில் காயம்பட்டு மயங்கி விழுந்த பெண் போலீஸ் ஒருவர் பி.ஆர்.ஓ அலுவலகத்துக்குள் கொண்டு​செல்லப்பட்டு அவருக்கு முதல் உதவி செய்யப்​பட்டது.

தூத்துக்குடி டி.எஸ்.பி-யான மாரியப்பன் முகத்தில் கல் பட்டு ரத்தம் சொட்ட... இன்னொரு போலீஸ்காரரின் தலையிலும் கல் பட்டு ரத்தம் கொட்டியது. துணை கமிஷனர் சைலேஷ் குமார் யாதவின் கையில் கல்லடி பட்டாலும், கையை உதறிக்கொண்டே திரும்பி, கல் எறியும் போலீஸாரைத் தடுக்கிறார் அந்த வீடியோ காட்சியில். ஐ.ஜி. விபாகர் ஷர்மா இந்த வீடியோ காஸெட்டுகளை அப்படியே காப்பி எடுத்து சென்னைக்கு அனுப்பியதுடன், ''மூன்றாவதாக ஆற்றுக் கரையிலும் ஓடிச் சென்று தடியடி நடத்தாமல் பொறுமை காத்திருந்தால், இத்தனை சாவுகள் நடந்திருக்காதே...'' என்று அதிகாரிகளிடம் கோபம் கொட்டினார். இந்த காஸெட்டுகளை எடிட் பண்ணாமல் அப்படியே கமிஷன் முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று த.மா.கா., புதிய தமிழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த சாவுகள் குறித்து மனித உரிமை கமிஷனுக்கும் புகார் செய்யப்படுகிறது.

கலெக்டர் தனவேல் மற்றும் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் டி.ஐ.ஜி-யான ராஜேந்திரன் இருவர் மீதும் முக்கியமாகக் குற்றம்சாட்டுகிறார்கள் தொண்டர்கள்.

இதுபற்றி நாம் டி.ஐ.ஜி-யிடம் கேட்ட​போது, ''நான் கமிஷனர் அலுவலகத்​தில் இருந்துகொண்டு, 'மைக்'கை வாட்ச் பண்ணியபடியே இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டுதான் இருந்தேன். அதனால்தான் ஸ்பாட்டுக்கு வர முடியவில்லை. தலைவர்கள் போலீஸ் தடுப்பை மீறிச் செல்ல ஜீப்பைக் கிளப்பியபோது, டென்ஷனான தொண்டர்கள் மறுபக்கமும் சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ததால்தான், தடியடி நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தலைவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், இந்தச் சோகம் நிகழ்ந்திருக்காது...'' என்றார்.

ஏற்கெனவே டி.ஐ.ஜி-க்கும் உதவி கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாட்டால் இரண்டு பேருமே சரிவரக் கலந்தாலோசித்துச் செயல்படவில்லை. அதனால் வந்த வினைதான் அத்தனையும் என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கைப்படி நீதி விசார​ணை நடத்தப்பட்டால், டி.ஐ.ஜி. தலை​தான் அதிகம் உருளும் என்கிறது போலீஸ் வட்டாரம்.

மனதைப் பிசையும் கடைசிச் செய்தி: இது வரையிலும் 17 உடல்கள் கிடைத்தாலும் 40 முதல் 50 பேரை இன்னமும் காணவில்லை என்று கிராமப்புறங்களில் இருந்தும் மாஞ்சோலைப் பகுதியில் இருந்தும் தகவல் வந்திருப்பதாக கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் சொல்கிறார். காணாமல் போனவர்களின் பட்டியலையும் தயாரித்துத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்!

கட்டுரை, படங்கள்: அ.பால்முருகன்

நிருபர்களும் சிக்கினர்!

பத்திரிகை புகைப்படக்காரர்​களுக்குக் கல்வீச்சில் லேசாகக் காயம் ஏற்பட்டதையும் பொருட்படுத்தாது அவர்கள் தடியடியைப் படம் எடுத்துக்​கொண்டு இருக்க, தனியார் டி.வி. நிருபர் ஒருவர் போலீஸாரால் தாக்கப்​பட்டார். தடியடி ஓய்ந்து, ஆற்றில் மூழ்கிய குழந்தையைப் படம் எடுக்கப்போன இன்னொரு பத்திரிகை நிருபரைப் 'படம் எடுக்காதே' என்று சொல்லியபடியே இரண்டு போலீஸார் சுற்றி வளைத்துத் தாக்கியதில், அவரது கேமரா 50 அடி தூரத்தில் பறந்து சென்று விழுந்தது. வயிற்றில் பூட்ஸ் காலால் எட்டி மிதித்தனர். முதுகில் லத்தித் தழும்புகள். பின்பு, அவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆக... கலெக்டர், டி.ஐ.ஜி. உட்பட அதிகாரிகள் சென்று பார்த்து, வருத்தம் தெரிவித்தனர்!

பந்த் ரத்தான கதை...

ஞாயிற்றுக்கிழமை நெல்லை வந்த மூப்பனார், பாளையங்​கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவ​மனைக்குச் சென்று உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடைசியாக, ஒன்றரை வயதுச் சிறுவன் விக்னேஷின் உடலுக்கு மலர்வளையம் வைத்தபோது, அவர் கண்கள் கலங்கிவிட்டன.

எம்.ஜி.ஆர். சிலை முதல், தடியடி நடந்த பி.ஆர்.ஓ. அலுவலகம் வரை நடந்தே சென்று பார்த்தார். அங்கு குவிந்துகிடந்த செருப்புகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு, அவசர அவசரமாகத் தண்ணீர்விட்டு கழுவிவிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்துக் கொதித்துப்போன மக்கள், ''இங்கே ரத்தக்காடாக் கிடந்தது ஐயா... எல்லாத்தையும் தண்ணி ஊத்திக் கழுவிவிட்டிருக்காங்க...'' என்று கொதிப்புடன் முறையிட்டனர்.

பின்பு, அவர் ஐக்கிய ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறினார். உயிரிழந்த ஷாநவாஸ் என்பவரின் அம்மா மும்தாஜ் பேகம், ''இப்போதானே ஐயா அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சான்... அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சே...'' என்று கண்ணீர்விட்டு அழுதார். விதவையான அவருக்கு இரண்டு பையன்கள். இரண்டாவது பையனுக்குப் 12 வயதுதான் ஆகிறது!

பின்பு நிருபர்களை சந்தித்த மூப்பனார், ''இந்தப் போராட்டத்துக்குச் சாதிச் சாயம் பூசுவது தவறு. இது முழுக்க முழுக்கத் தொழிலாளர் பிரச்னை. ஆகவேதான் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தி இருக்கின்றன. போலீஸாரின் அத்துமீறலுக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும்...'' என்று கோபம் கொப்பளிக்கச் சொல்ல... உறுதியான தி.மு.க. எதிர்ப்பு நிலையை அவர் எடுத்துவிட்டார் எனப் புரிந்துகொண்டனர் அங்கு இருந்தவர்கள்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக