ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

நீறு பூத்த நெருப்பு ! உயிர்களை பறித்த வன்முறை!

தேவேந்திர குல வேளாள மக்களின் குலதெய்வமாகவும், தீண்டாமைக்கு எதிரானக் குறியீடாகவும் போற்றப்படும் தியாகி இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவுதினத்தை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. "தொலைதூரத்திலிருந்து அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எந்த உதவியும் செய்வதில்லை. கடைகளை கட்டாயப்படுத்தி போலீசே அடைக்கச் சொல்வதால் எங்கள் மக்களுக்கு குடிக்கத் தண்ணீர்கூட கிடைப்பதில்லை" என்று பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஜீவன்குமார் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதற்கு உயர்நீதிமன்றம், ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டபோது, "நாங்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம், கடைகளை வியாபாரிகளே அடைத்துவிடுகிறார்கள்" என்று சொன்னது எஸ்.பி. தரப்பு. இந்த நிலையில்தான் விழா நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ நடத்திய கூட்டத்தில் பேசிய பரமக்குடியைச் சேர்ந்த தலித் தலைவர் ஒருவர், "எங்கள் விழாவுக்கு பத்திரிகையாளர்கள் வரக்கூடாது. தேவர் குரு பூஜைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கால் பகுதியைக் கூட இம்மானுவேலுக்கு கொடுப்பதில்லை. அதனால் அவர்கள் வரக்கூடாது" என்று கடுமையாகப் பேசியுள்ளார். இந்த நிலையில் தான் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி.யிடம் "எங்கள் தேவர் பெயருக்கு முன்னால் போடப்படும் 'தெய்வத் திருமகன்' எனும் அடைமொழியை இம்மானுவேல் பெயருக்கு முன்னால் போட்டு எங்களை வம்புக்கு இழுக்கிறார்கள்" என்று முறையிட்டனர். இதற்கு எந்த பதிலையும் கூற முடியாத மாவட்ட நிர்வாகம், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தது. இப்படியே டென்ஷன் நீடித்துக்கொண்டிருந்த நிலையில் தான் கடந்த 9-ந்தேதி கமுதி அருகே பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த +1 மாணவன் பழனிக்குமார், நாடகம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் படுகொலை செய்யப்பட்டார். இவர் தேவேந்திர சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், டென்ஷன் இன்னும் அதிகமானது. போலீஸ் போர்ஸைப் போட்டு, மக்களின் கொந்தளிப்பை அடக்கி வைத்தனர். குருபூஜை பாதுகாப்புக்காக, இதே மாவட்டத்தில் பணிபுரிந்த எஸ்.பி.க்களான செந்தில்வேலன், அனில்குமார், கிரி ஆகியோரும் வரவழைக்கப்பட்டனர். 11-ந் தேதி அதிகாலையிலிருந்து போலீசிடம் வாங்கிய அனுமதியின்படி ஒவ்வொரு அமைப்பாக வந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். ஒருநாள் முன்பாக வந்த டாக்டர் ராமதாசும் அஞ்சலி செலுத்திவிட்டு, "இம்மானுவேல் தினத்துக்கு தொடர்ந்து வருவது நாங்கள்தான், இது இனி அரசு விழாவாக நடத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும்" என்று கூறிவிட்டுச் சென்றார். இதையே அஞ்சலி செலுத்த வந்தவர்களும் "நாங்க ஓட்டுப்போட்டுதான் ஜெயலலிதா முதலைமைச்சரா வந்திருக்கு, இதை அரசு விழாவா அறிவிக்கணும், இல்லேன்னா கிருஷ்ணசாமியை இங்க வரவிடமாட்டோம்" என்று கோஷமிட்டபடி சென்றனர். தி.மு.க. சார்பில் சுப.தங்கவேலனும், அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயகுமாரும் வருகை தந்தனர்.. மதியம் 12 மணிவரை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் வல்லநாட்டில் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் பரவ, அஞ்சலி செலுத்த வந்த பிற அமைப்பினரும், 'ஜான்பாண்டியனை விடுதலை செய்யவில்லையென்றால் தமிழ்நாடே பத்திக் கொண்டு எரியும்' என்று போலீஸ் முன் கோஷம் போட்டனர்.. சிறிது நேரத்தில் அஞ்சலி செலுத்த வரும் கூட்டமும் குறைந்தது. 'அஞ்சுமுக்கு ரோட்டில் சாலை மறியல் நடக்கிறதாம்' என்ற தகவல் பரவ...ஆங்காங்கே நின்ற மக்கள் திரளாக அங்கு சென்றனர். ரெண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் அஞ்சுமுக்கு ரோட்டில் அமர்ந்து, ஜெயலலிதாவுக்கு எதிராகவும், டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு எதிராகவும் கோஷமிட்டபடி இருக்க... அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த டி.ஜ.ஜி. சந்தீப் மிட்டல், ஏ.சி செந்தில்வேலன் மிகவும் கெஞ்சல் தொனியில் அவர்களைக் கலைந்து செல்லச் சொல்கின்றனர். மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட வாகனங்கள் நுழையும் பகுதி ஐந்துமுக்கு ரோடு என்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்தன. அதில் வந்தவர்களும் இறங்கி சாலையில் அமர ஆரம்பித்தனர். பக்கத்து ரயில்வே டிராக்கில் கிடந்த கற்கள் குவியல் குவியலாக கூட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டது. போலீஸ் கலைந்து செல்லும்படி கடுமை காட்ட, அவர்களை நோக்கி கற்கள் பறந்து வர ஆரம்பித்தன. அதில் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல் தலையில் ரத்தம் வடிய ஆரம்பித்தது, அவர் கீழே விழுந்தார்...தொடர்ந்து வந்த கற்களால், செந்தில்வேலன் காலில் காயம்பட்டு ரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது. டி.எஸ்.பி. கணேசன், கமுதி எஸ்.ஐ. தங்கமுனியசாமி, ஐம்பதுக்கும் அதிகமான போலீஸ்காரர்கள் காயமானதும், லத்திசார்ஜ் செய்யப்பட்டதில் ஐந்துமுக்கு ரோடே போர்க்களமானது. அந்த நேரத்தில் அதை படம் பிடிக்கச் சென்ற நக்கீரன் புகைப்படக்காரர் பாலாஜியையும், ஜூனியர் விகடன் புகைப்படக்காரர் பாண்டியையும் ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. இருவர் கேமிராவையும் வாங்கி ரோட்டில் போட்டு உடைத்தனர். "நாங்கள் பத்திரிகைக்காரங்க, எங்களை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று இவர்கள் சொல்லியும் வெறியோடு இருந்த அந்தக் கும்பல் காதில் வாங்கவில்லை. அவர்கள் கத்திகளை எடுத்து துரத்த, இருவரும் ஆளுக்கொரு திசையில் ஒட ஆரம்பித்தனர். மறுபக்கம், பெட்ரோல் குண்டுகள் வரிசையாக விழ ஆரம்பித்தன. வஜ்ரா வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது, இதை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்திலும் பெட்ரோல் குண்டு விழ... பெரும் ஜூவாலையுடன் எரிய ஆரம்பித்தது. போலீஸ் ஜீப், கார், கடைகள் என எல்லா இடத்திலும் நெருப்பு. தலையில் பச்சை, சிவப்பு டர்பன் கட்டிய இளைஞர்கள் ரொம்பவும் தில்லாக நின்றபடி, கற்களை வீசிக்கொண்டிருந்தனர். போலீஸ் மொத்தமாக ஒரு பக்கம் சென்றால், இன்னொரு பக்கம் கல்வரக் கும்பல் தங்கள் அராஜகத்தை நடத்தினர். காவல்துறையினர் என்ன செய்வதென்று யோசித்த நிலையில்தான் துப்பாக்கிச் சூட்டை நடத்த ஆரம்பித்தனர். அதில் பரமக்குடி பன்னீர்செல்வம், ஜெயபால், கணேசன், வெள்ளைச்சாமி, தீர்ப்புகனி, முத்துக்குமார் உட்பட ஆறுபேர் ஸ்பாட்டிலேயே குண்டடிப்பட்டு விழுந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மக்களின் கோபம் இன்னும் அதிகமானது. தேவேந்திரகுல மக்கள் பெருவாரியாக வாழும் காட்டுபரமக்குடி, பொன்னையாபுரம் பகுதியில் திரண்டுவிட்டார்கள். பொன்னையாபுரத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. அதற்குள் புகுந்த கலவரக்காரர்கள், அங்கிருந்த பெண் காவலர்களைத் தாக்க ஆரம்பித்தனர். காவல் நிலையத்தைக் கொளுத்த நினைத்த அவர்களை அப்பகுதி பெண்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், ஆயிரக்கண்க்கான போலீசுடன் சென்றுதான் அங்கிருந்த மூன்று பெண் காவலர்களை எஸ்.பி. மகேஸ்ரன், காளிராஜன் மீட்டு வந்தார். உடனே 144 சட்டம் அமல் படுத்தப்பட்டது. காவல் துறையினர் மொத்தமாக ஓரிடத்தில் குவிந்தனர். பொன்னையாபுரம் பகுதியில் புகுந்து ஒவ்வொரு கலவரக்காரர்களைப் பிடித்து வந்து ஐந்துமுக்கு ரோட்டில் ரவுண்டு கட்டி அடித்து துவைத்தனர். அதில் பத்துபேர் மூர்ச்சையாகி ரோட்டிலேயே கிடந்தனர். தண்டவாளத்தை உடைத்து, ரயில்வே கேட்டை வளைத்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்றோர் படம் போட்டு வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸ்களை போலீசாரே அடித்து உடைத்தனர். ராம்நாடு- பரமக்குடி சாலையில் மரங்களை வெட்டியும், கற்களைப் போட்டும் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். நம்மிடம் பேசிய போலீஸ்காரர் ஒருவர், "எங்களுக்குள்ளும் ஜாதி வெறியோடு பலர் இருக்கிறார்கள். தேவர் குருபூஜைக்கு ஆதரவாக சிலரும், இம்மானுவேல் பூஜைக்கு ஆதரவாக சிலரும் செயல்பட்டு பிரச்சினைளை உருவாக்குகிறார்கள். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.யிலிருந்து எஸ்.ஐ. வரை அதிகம் வருவது குமரி,, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதியினர்தான். அவர்களுக்கு முக்குலத்தோர், தேவேந்திரர் ரெண்டுபேரும் ஆகாது. அவர்களே சின்ன விஷயத்தைப் பெரிதாக்கி கலவரமாக்கிவிடுகிறார்கள்" என்றார். நம்மிடம் பேசிய தலித் இளைஞர், "ஜான்பாண்டியன் அஞ்சலி செலுத்த வந்தால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தானே, அதை விடுத்து ஏன் தடுக்கிறார்கள்? அவர் கைதானதால் மட்டும் எங்கள் மக்கள் போராட வரவில்லை. தொடர்ந்து எங்கள் சமூதாயம், அரசியல் கட்சிகளாலும், அதிகாரிகளாலும், மீடியாக்களாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம்தான் அவர்களை கிளர்ந்தெழ வைத்துள்ளது" என்றார். பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வழித்தடங்கள், பீஸ் கமிட்டிகள் எல்லாம் போட்ட மாவட்ட காவல்துறை.... மக்கள் திடீரென்று போராட்டம் நடத்தினால் அதை கலவரமாக்காமல் எப்படி சால்வ் செய்யலாம் என்பதைப் பற்றி மட்டும் ஏன் யோசிக்கவில்லை...? என்பது தான், இன்று ஸ்தம்பித்துப் போயுள்ள தென்மாவட்ட மக்களின் கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக