ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 7 பிப்ரவரி, 2015

விருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேர் கைது

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் மாவட்டம் முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதையடுத்து, பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    இதில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்தனர்.
    இதேபோல், சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொகுதி கழக செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 22 பேரும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் தனசேகரன் தலைமையில் 17 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், ராஜபாளையம் அரசு பிரசவ மருத்துவமனை வளாகம் முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் 117 பேரும், ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் தொழிற்சாலை வளாகம் முன்பு வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் அழகுமலை தலைமையில் 33 பேரும், சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் செல்லக்கனி தலைமையில் 46 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், கிருஷ்ணன்கோயில் பேருந்து நிறுத்தம் முன்பு செயலாளர் பொன்ராஜ் தலைமையில் 29 பேரும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 339 பேரை போலீஸார் கைது செய்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக