ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 பிப்ரவரி, 2015

புதிய தமிழகம் நிர்வாகி படுகொலை: பேருந்துகள் நிறுத்தம் பதற்றம்!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக  பாஸ்கர் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இவர் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர்,   அரிவாளால் பாஸ்கரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பாஸ்கரை முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பாஸ்கரன் கொலையை கண்டித்து, கே.டி.கே. நகரை சேர்ந்த பொதுமக்கள் வல்லநாடு - ஸ்ரீவைகுண்டம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

போலீஸ் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் நள்ளிரவுக்கு பின்பும் மறியலை தொடர்ந்தனர். அதிகாலை 3 மணியளவில் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதியளித்ததைத்  தொடர்ந்து போராட்டத்தைக்  கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலையும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதற்றம் நிலவியது. அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படை நடத்திய விசாரணையில், பாஸ்கரை வெட்டிக்கொன்றது. ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ், பாதாளம் உள்பட 4 பேர் என்று தெரிய வந்தது. அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலை சம்பவத்தையடுத்து நெல்லை சந்திப்பு, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வல்லநாடு, கொங்கராயங்குறிச்சி, பத்மநாபமங்கலம், மணக்கறை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை கே.டி.கே. நகரில் உள்ள வல்லநாடு - ஸ்ரீவைகுண்டம் சாலையில் பாஸ்கரின் உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

சோதனை சாவடி மூலம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நெல்லை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, பாளை புறநகர் பகுதிகளான பாறைகுளம், அரியகுளம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக