ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற.... புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல் ...!!!.


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் விவசாய நிலங்களையும், நீர்நிலைகளுக்கு செல்லக்கூடிய கால்வாய்களை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அப்பகுதியிலுள்ள புதிய தமிழகம் கட்சியினர் ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் கமேஷா காற்றாலை நிறுவனம் எனும் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் 80 காற்றாலைகளை அமைக்க சுமார் 2500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தி காற்றாலை நிறுவும் பணியினை தொடங்கி வருகிறது.
இந்த நிறுவனம் ஓட்டப்பிடாரம் பகுதிக்கு குடிநீர், விவசாயம், கால்நடைகளுக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கும் ஆரைக்குளம் அணை கழுங்கு பகுதியிலிருந்து இரு பிரிவாக நீர் வழிந்தோடக்கூடிய முதல் கால்வாய் மூலம் செல்லக்கூடிய குளங்களான வேப்பங்குளம், துக்கன்குளம், சின்ன துக்கன்குளம், ஓட்டப்பிடாரம் பெரியகுளம், முப்பிலிவெட்டி, ஆவாரங்காடு வழியாக ஏ.எம்.பட்டி வரை செல்லக்கூடிய சுமார் 25க்கும் மேற்பட்ட சிறிய குளங்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய வழிகளையும்,
இரண்டாவது கால்வாய் வழியாக செல்லக்கூடிய குளங்களான குலசேரகன்நல்லூர், கரிசல்குளம், ஓசனூத்து, சக்கிலியன்குளம், சங்கரராஜபுரம், புதுபச்சேரி, பூலிக்குளம், கூத்தங்குளம், சங்கூரணி, நீராவிக்குளம், புதியம்புத்தூர் மலர்குளம், சாமிநத்தம், காயலூரணி மற்றும் வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள சுமார் 50 கண்மாய்களுக்கு செல்லக்கூடிய வழியினை மேட்டு ஆரைக்குளம் பகுதியில் பழைய பாலங்களை தகர்த்து அடைப்பு ஏற்படுத்தி, சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடையில் சாலை அமைத்து தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதேபோல மலைப்பட்டி, ஒட்டநத்தம், கக்கம்பட்டி, முறம்பண், தளவாய்புரம், கொம்பாடி, கைலாசபுரம், தட்டாப்பாறை, உமரிக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக கோரம்பள்ளம் வரை காட்டாற்று வெள்ளமாக செல்லக்கூடிய உப்பாற்று ஓடையை ஓசனூத்து கிராமத்தில் அடைப்பு ஏற்படுத்தியுள்ளதினால் கோரம்பள்ளம் உள்ளிட்ட 15 கண்மாய்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள மக்களின் குடிநீரும், விவசாயமும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்படி கிராமங்களில் ஓடை புறம்போக்கு கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தற்போது பெய்து வரும் பருவ மழையினால் அப்பகுதியிலுள்ள கண்மாய்களில் நீர் வரத்து இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் மேற்படி தனியார் காற்றாலை நிறுவனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புக்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற கோரி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் உத்தரவின்பேரில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அதிசயகுமார், மாவட்ட செயலாளர்கள் பட்டவராயன், கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார், மாடசாமி ஆகியோர் மேற்படி ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டு அகற்ற சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக